வியாழன், 11 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி - 18 -19 - 20

அகநானூறு – அரிய செய்தி - 18                    
                                                              குறும்பூழ்
பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்
                                        கருவூர்க் கண்ணம் புல்லனார், அகநா.63 : 6-8
வெயில் மிகுந்து எறிக்க கரிய மாலைபோன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல் தனது சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய  காடு.
 ---- மேலும் காண்க - (  அகம்.133, இதல் / சிவல் = கவுதாரி, புறம்.319:6, 320:11)

  அகநானூறு – அரிய செய்தி -19                     
மக்கட் பேறு
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செருநரும் விழையும் செயிதீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி
    செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,அகநா.66:1-6
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர் இவ்வுலகத்துப் புகழொடும் விளக்கமுற்று, மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று பல்லோர் கூறிய பழமொழியெல்லாம் உண்மையாதலைக் கண்கூடாகக் காணப்பெற்றோம்.(இம்மை உலகம் – இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும் உலகம், மறுமை உலகம்- உயிர், இவ்வுடம்பின் நீங்கிச் சென்று வினைப்பயன் நுகரும் உலகம். மறுவின்று எய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம்- நாட்டார்)


  அகநானூறு – அரிய செய்தி -20                     

பாண்டியர் துறைமுகம்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவியந் தன்றிவ் வழுங்கல் ஊரே
         மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகநா. 70: 13-17
வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழைமையுடைய திருவணைக் கரையின் (தனுஷ்கோடி) அருகில், முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக