செவ்வாய், 30 ஜூன், 2015

புறநானூறு – அரிய செய்தி - 1

புறநானூறு – அரிய செய்தி
ஆய்வுக்குரிய செய்திகள்
ஆய்வாளர்கள் பார்வைக்கு -                  
பழந்தமிழ் நூல்களில் ஆய்வுக்குரிய செய்திகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.
புலவர்களின் அறிவியல் சிந்தனைகளை ஆராய்தல் -
பாடுபொருள் -  புலவரின்  நிலவியல் சார்ந்த தொடர்புகள்
.வரலாற்றுச் செய்திகள் - திரட்ட வேண்டிய சான்றுகள்.
புலவர் பெயராய்வு , ஊர்ப் பெயராய்வுஆய்வுகளைத் தொகுத்து ஆராய்தல்-
பாடுபொருளுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளின் நோக்கங்களை ஆராய்தல் -
பழந்தமிழ் நூல்களில்  இடம்பெற்றுள்ள ஆய்வுக்குரிய செய்திகள் பிறமொழிச் செவ்வியலக்கியங்களில் இடம்பெற்றுள்ளனவா  என்பதை ஆராய்தல்-
இத்தலைப்புகள் தொடர்பாக இதற்கு முன்னர் நிகழ்ந்துள்ள ஆய்வுகளை கருத்தில்கொண்டு மேலாய்வு நிகழ்த்துதல்-

புறநானூறு – அரிய செய்தி - 1

6 -  தமிழ்நாட்டின் எல்லைகள்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
                                                        காரிக்கிழார், புறநா.6 : 1 – 4
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
                                         குமட்டூர்க்  கண்ணனார், பதிற். 11 : 23 – 25
கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை
                                                        பரணர், பதிற். 43 : 6 – 8
தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
                     குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8
தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும்  எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல், செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
 குண குட கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால், குமரி கடல்கோட்படுதற்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும்.
மேலும் காண்க: தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம். இமயம்
வடதிசை யதுவே வான் தோய் இமயம் 132 புறநா.

 தமிழ்நாட்டின் எல்லைகளை இலக்கண, இலக்கிய, தொல்லியல் குறிப்புகள்கொண்டு ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக