புதன், 3 ஜூன், 2015

நற்றிணை -பொன்மொழிகள் ……………………………….. பகுதி – 2 ………………………………….

சங்கத் தமிழ் - எட்டுத்தொகை
நற்றிணை -பொன்மொழிகள்
……………………………….. பகுதி – 2 ………………………………….


அறு மீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செஞ்சுடர் நெடுங்கொடி போலப்
பல் பூங் கோங்கம் அணிந்த காடே
            பாலை பாடிய பெருங்கடுங்கோ, நற். 202 : 9 -11
கார்த்திகை விண்மீன் பெயரால் அறம் செய்வதற்கு உரிய மாதத்தில் விண்ணில் ஒளிபரவும்படி ஏற்றப் பெற்ற விளக்குகளின் வரிசையைப் போலக் கோங்கு மரங்களில்  பூக்கள் நிறைந்த  காடு.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தம் செய்வினைப் பயனே
                 மிளைகிழான் நல்வேட்டனார், நற். 210 : 5, 6
பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வம் அன்று முன் செய்த நல்வினைப் பயனே.
                                                                                                                


சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே
                மிளைகிழான் நல்வேட்டனார், நற். 210 : 8 – 10
தம்மை அடைக்கலமாக வந்தடைந்தோர்க்கு அவர்தம் துன்பத்தைப் போக்கிப் பாதுகாத்து இனிய தன்மையனாய் இருக்கும் அருங்குணச் செல்வத்தையே  சான்றோர் செல்வம் என்று உயர்த்திப் பேசுவர்.
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்
                               கருவூர்க் கோசனார், நற். 214 : 1, 2
வீட்டில் சோம்பி இருப்போர்க்குப் புகழ் இல்லை; இன்பம் இல்லை; ஈதலும் கைகூடுதல் இல்லை.
துனிநீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
                மதுரை மருதன் இளநாகனார், நற். 216 : 1, 2
 தோழியே ! காதலர் எம் ஊடலைத் தணித்து கூடிக் களிக்கவில்லை என்றாலும் அவரைக் கண்ணால் கண்டு மகிழ்தல் இனிமை உடையதே.
இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்
                                                 கபிலர், நற். 217 : 1, 2
புகழ் மிகும்படி வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணும்தோறும் பொலிந்து தோன்கின்ற ஆண்யானை.
விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள்
                                                  இடைக்காடனார், நற். 221 : 8
 வரும் விருந்தினரை வரவேற்று மகிழும்  இனிய பண்புடையவள் என் மனைவி.
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர் தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் ...
                                      கணிபுன் குன்றனார்,  நற். 226 : 1 – 3
இவ்வுலகத்து மாந்தர்,  மருந்து தந்து உதவும் மரத்தை அடியோடு அழிக்க முற்படார்; தம் உடல் வலிமை முற்றும் அழியும்படி தவம் செய்யார்; மன்னரும் குடிமக்களின் வளம் கெடும்படி வரி கொள்ளார்.
ஆன்றோர் செல்நெறி வழாஅச்
 சான்றோன்
                                அஞ்சில் ஆந்தையார், நற். 233 : 8, 9
ஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர்
                                  காமக் கணிப் பசலையார், நற். 243 : 5, 6
 அறிவுடையீர் ! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத் தேடி  நீங்கள் அருமையான  நுங்கள்  காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.
அரிது மன்றம்ம இன்மையது இளிவே
                             பெருந்தலைச் சாத்தனார், நற். 262 : 10
வறுமையால் வரும் இழிவு  கொடுமையிலும் கொடுமை அம்ம.
மெல்லம் புலம்பன் கண்டு நிலை செல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே
                                       இளவெயினனார், நற். 263 ; 9, 10
தலைவியே ! கடற்கரைத் தலைவனைக்கண்டு  பலமுறை  நாம் மறைக்கவும் மறைக்கவும் அடங்காது வெளிப்பட்ட   கண்ணீர்  கூறாத செய்திகள் அனைத்தையும் கூறிவிட்டது.
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல்
                        மதுரை மருதன் இளநாகனார், நற். 283 : 6 – 9
உன் சொல். கடலின் மீது  பலரும் தொழுமாறு தோன்றுகின்ற கதிரவனைக் காட்டிலும் உண்மை மிக்கதானது.
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும் ...
                          தேய்புரிப் பழங்கயிற்றினார், நற். 284 : 5, 6
தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத்தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.
நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய
சொல் புடை பெயர்தலோ இலரே
                                மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்பூதனார், நற். 289 : 2, 3
தோழீ! இந்நிலம் தன்னிலையினின்று பெயர்வதாயினும் என் தலைவர் சொன்ன சொல் தவறாத பண்புடையவர்.
வண்டு என மொழிப மகன் என்னாரே
               மதுரை மருதன் இளநாகனார், நற். 290 : 9
மலர் விட்டுமலர் தாவும் வண்டு போலும்  மகளிரை நாடும் குணமுடையோரை நல்ல ஆண்மகன் என யாரும் கூறார்.
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
                        புதுக்கயத்த வண்ணக்கன் கடம்பூர் கிழான், நற். 294 : 1, 2
தோழீ ! கொடிய தீயையும் இனிய காற்றையும் வானம் பெற்றுள்ளது போலத் தலைவனுடைய அகன்ற மார்பானது, களவுக்காலத்தில் பிரிவினால் நோயைத் தந்தது; கற்பு வாழ்க்கையில் பிரிவறியா இன்பத்தைத் தருகின்றது.
ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே
                     எயினந்தை மகன் இளங்கீரனார், நற். 308 : 9 – 11
பொருள் கருதிப் பிரியக் கருதிய நெஞ்சமே! ஈர மண்ணால் செய்யப்பட்ட மண்பானை இடைவிடாது பெய்யும் பெரிய மழையில் கரைந்து கலந்து விடுவதைப் போலத் தலைவியின் பிரிவாற்றாமை கண்டு, பிரிய நினையாது அவளோடு ஒன்று பட்டுவிட்டது.
வள் உயிர்த் தண்ணுமை போல
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே
                                                   பரணர், நற். 310 : 10, 11
பெரிய ஒலியை எழுப்பக்கூடிய தண்ணுமை என்னும் இசைக்கருவியைப்போல உள்ளீடு ஒன்றுமில்லாத பயனற்ற சொற்கள்.

முதிர்ந்தோர் இளமை ஒழிக்கும் எய்தார்
வாழ் நாள் வகையளவு அறிஞரும் இல்லை
                                         முப்பேர் நாகனார், நற். 314 ; 1, 2
முதுமை அடைந்தோர் மீண்டும் இளமை பெறுதல் இல்லை, தாம் வாழும் காலத்தை அளந்து அறிபவரும் இல்லை.
நாடல் சான்றோர் நம்புதல் பழியெனில்
பாடிய கலுழுங் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதலந்  தோழி
                                                     அம்மூவனார், நற். 327 : 1 – 3
தோழீ !  நம்மை விரும்பியோரை நாம் விரும்புதல் பழி உடையது என்றால் தூக்கமின்றி அழுகின்ற கண்ணோடு இளைத்து இறந்துபோதலும் இனியதாகும்.                                                                                                        
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொருங் கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங் கொல் என் அவலம் உறு நெஞ்சே
                                                          வெள்ளிவீதியார், நற். 348 : 8 – 10
 தலைவன்பால்  அவா மிகுதலானே ஆற்றாமையால் வருந்துகிறேன் தூக்கம் இல்லை; இவ்வுலகம் என்னோடு போரிடுகிறதோ அல்லது இவ்வுலகத்தோடு என் அவலநெஞ்சம் போரி எழுகின்றதோ?
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
                                         ...................... , நற். 355 : 6, 7
நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார் நட்புடையார் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது  உண்டு நட்பைப் பேணுவார்.
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ்வுலகத்தானே
                        மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், நற். 366 : 11, 12
நெஞ்சே ! வடதிசைக்குரிய வாடைக் காற்று வீசும் கூதிர்ப் பருவத்திலே தலைவியை விட்டுப் பிரிபவர் இவ்வுலகத்தில் மிகுந்த அறியாமை உடையவராவர்.


சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே
                                              அம்மூவனார், நற். 397 : 7 – 9
 தோழீ ! நான் இறப்பதற்கு அஞ்சவில்லை, இறந்து போனால் அடுத்த பிறப்பு வேறு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை மறந்து விட நேருமோ என்றுதான் அஞ்சுகிறேன்.
 ………………………………….. முற்றும் …………………...……………
      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக