வெள்ளி, 5 ஜூன், 2015

பரிபாடல் –பொன்மொழிகள்

     பரிபாடல் –பொன்மொழிகள்
(நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் கட்டுரையில் காண்க )
 நின்னோர் அனையை நின் புகழொடும் பொலிந்தே
                                                              .கடவுள் வாழ்த்து, பரிபா. 1 : 54
திருமால் – நின் புகழை நோக்கின் உனக்கு நீயே நிகராவாய்
... பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே
                                             கடுவன் இளவெயினனார், பரிபா. 3 : 57, 58
 திருமால் -  உன் இயல்பினை அறியும் அறிவர்க்கு உனக்கு யாவரும் சுற்றத்தார் என்று கூற முடியுமே ஒழிய இவர் பகைவர், இவர் நண்பர்  என்று கூற இயலாது.
பாழ் எனக் கால் எனப்  பாகு என ஒன்று என
                                                  கடுவன் இளவெயினனார், பரிபா. 3 : 77
0 – ¼- ½  - 1 என எண்கள் தொடங்கும்
மாநிலம் இயலா முதன்முறைஅமயத்து
                                                கடுவன் இளவெயினனார், பரிபா. 3 : 91
நீரின் நடுவில் மிகப் பெரிய நிலப் பரப்புத் தோன்றாத முதல் ஊழிக் காலத்தில்
... யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
                                        கடுவன் இளவெயினனார், பரிபா. 5 : 78 – 80
இறைவ, நினது திருவடி நிழலை எய்த விரும்பிய நாங்கள் நின்னிடம் வேண்டுவன பொன்னும் பொருளும் போகமும் அல்ல ; எமக்கு வீடு பேறு நல்கும் அருளும் அன்பும் அறமும் என்ற மூன்றுமேயாம்.                                                           
நிறை கடன் முகந்துராய் நிறைந்து நீர் துளும்பும் தம்
பொறை தவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
                                                                  நல்லந்துவனார், பரிபா. 6 : 1, 2
முகில்கள், நீர் நிறைந்த கடலின்கண் உள்ள நீரை முகந்துகொண்டு வானத்தின்கண் யாண்டும் பரவி நீர் நிறைந்து துளும்பும் ; தமது சுமை தீர்ந்து இளப்பாறுதற் பொருட்டு மழையைப் பொழிந்தன.
மாசில் பனுவல் புலவர் புகழ் புல
நாவில் புனைந்த நன் கவிதை
                                                       நல்லந்துவனார், பரிபா. 6 : 7, 8
குற்றமில்லாத நூற் கேள்வியினை உடைய ந்ல்லிசைப் புலவர்கள், புகழப்படும் அறிவினை உடைய தம் நாவாலே பாடிய நல்ல செய்யுள்கள்.
காதல் காமம் காமத்துச் சிறந்த்து
                                                                குன்றம் பூதனார், பரிபா. 9 : 14
காமத்தில் சிறந்தது காதல் மிக்க காமமே.
காமம் கனைந்து எழக் கண்ணின் களி எழ
                                            கரும்பிள்ளைப் பூதனார், பரிபா. 10 : 63
நெஞ்சத்தில் காமக் களிப்பு எழ, அது கண்களிலே வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றும்.
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்
                                             கரும்பிள்ளைப் பூதனார், பரிபா. 10 : 87, 88
இரப்போருடைய வறுமைய அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து, அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார்.
வெம்பாதாக வியன் நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
                                                       நல்லந்துவனார், பரிபா. 11 : 80, 81
இவ்வுலகம் மழை இன்றி வருந்தாது இருக்க  மழை பொழிக என்று வேண்டிக்கொண்டு கன்னிப் பெண்கள் நீராடினர்.

கண்டார்க்குத் தாக்கணங்கு இக்காரிகை காண்மின்
                                                          நல்லந்துவனார், பரிபா. 11 : 12
கண்டவரைத் தாக்கிக் கொல்லும் இக் காரிகையின் அழகு

முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம்
மறுமுறை அமையத்தும் இயைக
                                                            நல்லந்துவனார், பரிபா. 11 : 138, 139
முற்பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவியில் இணைந்தோம் ; மறு பிறவியிலும் இணைவோமாக.
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து
                                                              இளம் பெருவழுதியார், பரிபா. 15 : 1
அறிவு எல்லையால் அறியப்படாத புகழுடனே சிறந்து விளங்கி
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்
                                                                            நப்பண்ணனார், பரிபா. 19 : 8

அறிவுப்போராலும் மறப்போராலும் பிறரை வெல்லும் இயல்புடையது மதுரை.
அறம் பெரிதாற்றி அதன் பயன் கொண்மார்
சிறந்தோர் உலகம் படருநர் ...
                                                       நப்பண்ணனார், பரிபா. 19 : 10, 11
இவ்வுலகத்தே பெரிதும் அறத்தைச் செய்வார் அதன் பயனாக மேலுலகில் இன்பம் துய்ப்பர்.
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க
                                                                     நல்லந்துவனார், பரிபா. 20 : 68
நினைத்த அளவிலே பாவம் நீங்கும் கற்புடைமையால் அவளைச் சினவாதே
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர்
                                                       நல்லந்துவனார், பரிபா. 20 : 87, 88
தம் கணவரைச் சான்றோர்கள் இகழ்ந்துரைத்தாலும் கற்பு நெறி பிறழாத காரிகையர் இறைவன் என எண்ணி  வணங்குவர்.

-      முற்றும் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக