வெள்ளி, 19 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -56 - 60

அகநானூறு – அரிய செய்தி -56
                                            காவிரிப் பூம்பட்டினம்
மகரநெற்றி வாந்தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே .................
-                                       பரணர், அகநா. 181:20 – 22
மகரக் கொடியை உச்சியிற் கொண்ட வானத்தைத் தீண்டும் மதிலையும் உச்சியைக் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்துள்ள மாடங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தை உடையது சோழநாடாகும்.
அகநானூறு – அரிய செய்தி -57
                                                          வேதம்
ஞாலம் நாறும் நலம்கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
-                       பரணர், அகநா. 181:15 – 17
சோழ நாட்டில் ஆலமுற்றம் ( ஆலம் – ஆலமரம் ) என்னும் அழகிய இடம் புது வருவாயையுடைய ஊர்களைக் கொண்டது. சோழர்காக்கும் சிறப்புடையது. காவிரி புரக்கும் சிறப்பு, உலகம் யாவும் போற்றும் நல்ல புகழையுடைய நான்குவேதங்களைக் கொண்ட பழம்பெரும் நூலைத் தந்தருளிய மூன்று கண்களையுடைய சிவபெருமான் எழுந்தருளிய சிறப்பினைக் கொண்டது. ( வேதம் சிவபெருமானின் வாய்மொழியாம் என்பது நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166: 1-4 புலவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் – பூஞ்சாற்றூர் தஞ்சை , மா.வ.  கெளணிய பார்ப்பார் அனைவரும் தமிழ்ப் பற்றுடையர்.  நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது வாக்கை விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடையதாய் ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேத்த்துக்கு  மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி -   சங்கத் தொகை நூல்களில் புத்தர், சமணர் முதலிய சமயத்தவரைப் பற்றிய குறிப்புகள் இன்மையின், இதுபொருந்தாமை உணரப்படும்- ஒளவை சு.து. உரை.)

அகநானூறு – அரிய செய்தி -58
                                    வேட்டைக்குப் புறப்படல்
பூங்கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து
வாங்கு அமை நோன்சிலை எருத்தத்து இரீஇ
தீம்பழப்  பலவின் சுளைவிளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வயநாய் பிற்பட
வேட்டம் போகிய குறவன் .....
                                                    கபிலர், நகநா.182: 1-6
குறவன் வேங்கை மலர் சூடி மூங்கில்- வளைந்த வில் – பலாப்பழத்தின் தேனை – இளைய வீரர்களுடன் நிறையக் குடித்து – வேட்டை நாய்கள் பின்வர – சென்றான்.முள்ளம் பன்றியைக் கொன்றான்.
அகநானூறு – அரிய செய்தி -59
                                 பாம்புபட இடிக்கும்
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்
                                              கபிலர், நகநா.182: 9, 10
பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கின்ற வலிய மேகம்.
முளவு மா – முள்ளம் பன்றி, முதுகலை – முதிய முசுக்கலை என்னும் குரங்கு.

அகநானூறு – அரிய செய்தி -60
                                          மழை அறிவியல்
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகி
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு எர்பு
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே ….
   கருவூர்க் கலிங்கத்தார், அகநா.183: 6-10
பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக