ஞாயிறு, 29 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :950


திருக்குறள் -சிறப்புரை :950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.--- ௯௫0
(மருந்து உழை)
நோய் உற்றவன், மருத்துவன், தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்து, மருந்தின் அளவறிந்து இயற்றுவான்  ஆகிய நான்கும் நன்கு அமைந்ததே மருந்து ஆகும்.
“ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப்பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க..” ---நற்றிணை.
வானுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தே, மிக்க இடியுடன் மேகம் மழை பெய்யத் தொடங்கிற்று, நள்ளிரவில் செறிந்து பெய்யும் மழையினால் கற்கள் நிரம்பிய காட்டுவழியே பெருகி ஓடும் ஆற்றிலே மரங்களிலிருந்து உதிரும் சருகுகளும் பூக்களும் அடித்து வரப்பெறுகின்றன. அவ்வாறு பெருகிவரும் புத்தம் புதிய நீரானது இவளுடைய நோயைத் தீர்ப்பதாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி ஆண்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு வெறுப்பின்றி நீராடினால் மேனி நடுக்கம் தீரும் ஆதலால் அங்குச் செல்வீராக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக