வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

மக்கட்பேறு.

”இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்றி எய்துப

செருநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாக்குதல் வாய்த்தனம் தோழி…” – அகநானூறு,66 : 1 -6.

பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர், இவ்வுலகத்துப் புகழொடும் விளக்கமுற்று, மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர், என்று பல்லோர் கூறிய பழமொழியெல்லாம் உண்மையாதலைக் கண்கூடாகக் காணப் பெற்றோம்,  என்று மகிழ்ந்து கூறினாள் தலைவி.

( இம்மை உலகம் – இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும்  உலகம் ; மறுமை உலகம் – உயிர் இவ்வுடம்பின் நீங்கிச்சென்று வினைப்பயன் நுகரும் உலகம், மறுவின்று எய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக