புதன், 5 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -73


மெய்ப்பொருள் காண்பது அறிவு -73
எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை (1865 – 1925 ) ‘இந்தியக் காலக் கணிதம்’ – (1911)  என்னும் நூல்வழி இந்தியக் கால வர்த்தமானம் பற்றிய எல்ல விவரங்களையும் துல்லியமாகவும் நுட்பமாகவும் விளக்கிய வானியல் அறிஞர். சோதிடக் கலையில் கைதேர்ந்தவர் என்றாலும் இவருக்குச் சோதிடப் பலன்களிலே நம்பிக்கையில்லை.

சர். டி. மாதவராவ் போலவே இவரும் கிரகநிலைக்கும் மானிடப் பிறப்புக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். “ மானிட வாழ்விலே தோன்றும் தொழுநோய், மடத்தனம், குருடு, பைத்தியம், போன்ற துயரங்களுக்கும் கிரக் நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ; தொடர்பு கற்பித்தல் அநுபவ அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை என்பது இவர் துணிபு.
‘சோதிடத்தின் நம்பகம்’ (1922) என்னும் நூலிலே “குழந்தைகளின் பிறப்பு, உறவினர்களின் இறப்பு, பரீட்சைகளுலும் வழக்குகளிலும் வெற்றி தோல்விகள் இவைகளைப்பற்றி முன்னதாகவே கணித்துக் கூறப்பெற்றுள்ள சோதிடப் பலன்களை வானநூற் பயிற்சியின்றியே புத்தி சாதுரியம் படைத்தை யாரும் சொல்லலாம். சோதிடம் விஞ்ஞானம் அல்ல என்பதை இவர் மிகத் துணிச்சலுடன் கூறியுள்ளார்.

“சோதிடமும் விஞ்ஞானமும் வடதுருவம் – தென் துருவம் போன்றவை என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும் சோதிடம் ஓர் அநுபவக் கலை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது. சோதிடனது கூர்த்த மதியும் சாதகனது ஆசா பாசங்களையும் நம்பியே சோதிடக் கலை உயிர் வாழ்கிறது,” என்பது பிள்ளை அவர்களின் முடிந்த முடிபாகும். –இரெ. குமரன்……தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக