ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -80

மெய்ப்பொருள் காண்பது அறிவு -80
சமணம்
உலகத் தோற்றம்.
உலகில் நாம் காணும் பொருள்கள் அனைத்தும் ‘ஸ்கந்தங்களே’ (கூட்டுப் பொருள்) . இந்த அண்டம் முழுவதையும் சமணர் ஒரு ‘மகாஸ்கந்தம்’ என்பர். பஞ்சபூதங்களின் சேர்க்கைதான் பொருள்கள். இப்பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் மேலும் அழியக்கூடிய அதாவது மேலும் பிரியக்கூடிய பொருள்கள். எது ஸ்கந்தமோ அதாவது, எது கூட்டுப் பொருளோ அது அழிவுறும்..
   பொருளுக்கு அழிவு என்பது நிலைமாறுதல். ஒரு பொருள் அழிந்து விட்டதென்றால் அது இன்னொன்றாக மாறிவிட்டது என்பதே கருத்து. ஆக்கம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றை ஆக்கலாமே ஒழிய் எதுவுமேயில்லாமல் ஒன்றையும் ஆக்க முடியாது.
அணுக்கள்
மூலப் பொருள்களை அணுக்கள் என்பர் சமணர். மிகப்பெரிய இவ்வுலகம் அணுக்கள்லிலிருந்துதான் தோன்றுகிறது என்பதே சமணர் கொள்கை. அணு, பகுதிகளால் ஆகாதது ; அது வடிவமற்றது. எனினும் அதுவே வடிவங்கள் எல்லாவற்றிற்கும் தோற்றிடம்.  அணுவை அழிக்க முடியாது. அது என்றும் உள்ளது. என்றும் உள்ளதாகையால் அது (சிருஷ்டி) படைக்கப்பட்ட பொருளன்று. அணுக்களுக்குத் தன்மையோ, குணமோ எதுவும் கிடையாது. சேர்க்கையால் எண்ணிக்கை வேறுபாடுகளால் குணவியல்புகளும் பிறவும் தோன்றுகின்றன.
      சடப்பொருளை  (உலகம்) விளக்குதற்கு அணுக்கள், காலம், இடம் ஆகிய மூன்றும் போதாது எனக்கண்ட சமணர்கள் வேறு இரு தத்துவங்களைச் சேர்த்துக் கொண்டனர்.  1. இயக்கு சக்தி. 2. நிறுத்து சக்தி. இச் சொற்கள் பாவ புண்ணியங்களைக் குறிப்பனவல்ல.
இயக்கு சக்தி – தர்மம்
நிறுத்து சக்தி -  அதர்மம்
சமணருடைய தர்மம் அதாவது  இயக்கு சக்தி முதல் இயக்கத்தைக் கொடுக்க வல்லதல்ல. அதாவது இயக்கமற்று நிற்கும் ஒன்றை இயக்காது. இயக்கம் தொடங்கிவிட்டதனால் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கத்தான் அதனால் முடியும். நிறுத்து சக்தியாகிய அதர்மம் அப்படியே தான் நிறுத்தாது. ஆனால் நிறுத்தப்பட்டதை அந்நிலையிலேயே வைத்திருக்கும்.
 அணுக்கள்தாம் உலகின் ஒடுக்கம் . இவற்றிலிருந்துதான் உலகம் உற்பத்தியாகும். இவற்றுக்குத் துணையாகக் காலம், ஆகாசம், தர்மம், அதர்மம் இவ்வைந்தையும் அசீவன் என்ற சொல்லால் குறிக்கின்றனர். ---தொடரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக