வியாழன், 20 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -84

மெய்ப்பொருள் காண்பது அறிவு -84
புரட்சி

 முதலாளித்துவ முறையில் உள்ள முக்கிய குறைபாடு ‘உரிமை’ இழப்பாகும். அது தொழிலாளர்களைக் கோழைகளாக்கி வறுமை மிக்க வாழ்க்கைக்குத் தள்ளிற்று, சமதர்ம கொள்கையால்தான் அந்நிலையை மாற்ற இயலும் என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

முதலாளித்துவ புரட்சி – 1908 – துருக்கி
உழைக்கும் மக்கள் புரட்சி – 1905  - இரசியா
முதலாளித்துவ சனநாயகப் புரட்சி – கி.பி. 16 இல் நார்வே,டென்மார்க் ; 18இல் அமெரிக்க புரட்சி ; 19இல் இலத்தின் அமெரிக்க புரட்சி.

மன்னராட்சியோ , மக்களாட்சியோ ஓர் அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். ஆதிக்க மனப்பான்மை அழிவுக்கு இட்டுச் செல்லும்.  இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலான வேற்றுமைகளக் களையாவிட்டால் சமுதாயத்தில் முரண்பாடுகள் பல்கிப் பெருகும். மக்களை அறியாமையில் மூழ்கடித்து, சாதிச் சாக்கடையில் தள்ளி, மூடநம்பிக்கைகளால் அச்சுறுத்தி அவர்களை அடிமைப்படுத்தி ஆள நினைக்கும் ஆதிக்க வருக்கம் நெடுங்காலம் நீடித்திருப்பதில்லை என்பது வரலாற்று உண்மையாகும். பொருளாதாரச் சீர்திருத்தம் அனைவருக்குமான ஒன்று என்ற நிலை இல்லாவிடில் ஏழ்மையும் வறுமையும் ஆதிக்க சக்திகளை அழித்தொழிக்கும் வல்லமை பெறும்.

ஒவ்வொரு மண்ணிலும் புரட்சிக்கான ’விதை’ விழுந்துள்ளது. புரட்சிக்கான விதைகளை நம் முன்னோர்கள் விதைத்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிர்களை உரமாக்கியுள்ளனர். புரட்சி விதை – மரமாகி விழுது விட்டு இம்மண்ணைத் தன் வயமாக்கும்.
 புரட்சி -  புகைந்து கொண்டிருக்கும் எரிமலை –அது எப்பொழுது வெடித்துச் சிதறும் ,ஆதிக்க சக்திகளை அழிக்கும் என்பதை  எவராலும் அறிந்துகொள்ள முடியாது.. தடுத்து நிறுத்தி விடவும் முடியாது.

 புரட்சியை அடக்கும் அளவுக்கு இன்னும் அறிவியல் வளரவில்லை. புரட்சியை அழித்துவிடும் அளவுக்கு இன்னும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ; கண்டுபிடிக்கவும் முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக