வியாழன், 6 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -75


மெய்ப்பொருள் காண்பது அறிவு -75

சோதிடம் என்னவாயிற்று…?

கி.பி.இரண்டாம் நூற்றாணடைச் சார்ந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில், இளங்கோவடிகள் சோதிடம் பொய்த்துவிட்ட செய்தியைப் பதிவு செய்துள்ளார். கோவலன் – கண்ணகி  திருமணம் நடந்த முறைய இளங்கோவடிகள்…

“ வானூர் மதியம் சகடணைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்து காண்பார்….” என்று கூறுவார்.

அஃதாவது, ‘மதியம் சகடு (உரோகிணி) அணைந்த நாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட , இவர் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாது காணென்பாராயும்..” என்று உரை விளக்கம் தருகிறது.
சோதிடத் தத்துவங்கள் யாவும் விளங்க நிகழ்ந்த கோவலன் கண்ணகி திருமணம் என்னவாயிற்று என்பதை யாவரும் அறிவர்.
காண்பார் கண்கள் கலங்கிக் கண்ணீர் மல்க, வரலாறு காணாத துன்பத்தைச் சுமந்து துடி துடித்துச் செத்தான் கோவலன். கண்டோர் கதி கலங்கக் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாய் ஆனாள் கண்ணகி. இல்லற வாழ்க்கையைச் சோதனைக் களமாக்கிச் சுகம் கண்டதே சோதிடம்..!

அறிவு அற்றங் காக்கும் கருவி

அழிவு வாராமல் காக்கும் அரிய கருவி அறிவாகும் என்பார் திருவள்ளுவர்.

புற்றீசல் போல் பெருகிய புராண இதிகாசங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்பவும் பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும் தோன்றியவையே. உரோகிணியில் குழந்தை பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்றும் இடையர் குலத் தோன்றல் கண்ணனைக் கொல்ல கம்சனைத் தூண்டியதும் சோதிடம்தான்.

மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருக்கும் மனிதன் அறிவையும் அறிவார்ந்த உழைப்பையும் இகழ்ந்து, இழந்துவிடுகிறான்.. மனிதனைப் பலவீனப்படுத்தும் சக்திகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மனிதன் பெற்றாக வேண்டும். அதற்குத் தாய்மொழிக் கல்வி ஒன்றே சிறந்த வழியாகும்.
கல்வியின் பயன் அல்லது கற்றவன் என்பதன் பொருள் பட்டம் பதவிகளைக் குறிப்பதல்ல ; நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவைக் குறிப்பதாகும். அறிவு ஒன்றே  மனிதனை அழிவிலிருந்து காப்பாற்றும் ஆற்றலுடையது.

“வாதி புளுகன்
மாந்திரீகன் வீண் புளுகன்
 சோதிடன் என்பவனோ தங்கமே
 சுத்தப் புளுகனடி ஞானத் தங்கமே.” - சித்தர் வாக்கும் உண்மையன்றோ..! –இரெ.குமரன். -----

அன்புடையீர் -7 - 11/9/18 வரை விடுப்பில்; மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக