செவ்வாய், 17 ஜூன், 2025

தமிழமுது – 49. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  49. கடவுளைப்பற்றி….!

கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி :

கடவுளைப்பற்றிய தத்துவ ஞானஆய்வுகள் குறித்து அறிவது அவசியமாகின்றது

என்று ஒருவன் கடவுள் உண்டு என்று சொன்னானோ….அன்றே அவன் அருகில் நின்ற ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டான் போலும்.

இன்றுவரை கடவுளை எதிரும் புதிருமாக  நின்று பேசி, உலாவரும் கருத்துகள் குறைந்தபாடில்லை. கடவுள் வழிபாடு நாளுக்குநாள் பல்கிப்பெருகி வருவதைக் காணலாம். மக்களின் வேண்டுதல்கள் கடவுளிடம் சென்று சேர்ந்ததா இல்லையா ? யாருக்கும் தெரியாது.  

மதவேறுபாடின்றி கடவுளைப்பற்றி ஒரு வலுவான கட்டமைப்பை நாள்தோறும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றனர். ஆடம்பரம் ஆரவாரம் ஊர்வலம் நேர்த்திக்கடன் புனரமைத்தல் முதலிய சடங்குகள் ஆண்டுமுழுவதும் மக்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருகின்றன. உடல் நோய்கள், உளநோய்கள் ஒவ்வொன்றூக்கும் ஒவ்வொரு கடவுள்.

உண்மையில் எதிர்வினை என்பது – கடவுள் உண்டா இல்லையா..? இப்போது இக்கேள்வி பிரச்சினை இல்லை ; கடவுள் நல்லவர், வல்லவர், கருணையுள்ளவர், வேண்டியவற்றை வேண்டியவாறே கொடுப்பவர், உலகையும் உயிர்களையும் படைத்தவர் என்றெல்லாம் கதைக்கும் நீங்கள் யார் என்பதுதான் பிரச்சினையே..?

கடவுளை நன்கு அறிந்தவர் போலவும், உடன் இருந்து உறவாடியர் போலவும் கட்டுக்கடங்காத, கற்பனைக்கெட்டாத கதைகளைக் கூறி இடைத் தரகர் போலச் செயல்படும் இவர்களின் நோக்கம் மிகவும் கீழ்த்தரமானது என்பதை யாவரும் அறிவர். வழிபாட்டிற்குரிய வழிமுறைகளை இவர்கள் விருப்பம்போல் உருவாக்கி வைத்துக்கொண்டு அவற்றைப் புனிதம் என்றும் கற்பித்துத் சுகபோக வாழ்க்கையில்  வாழ்ந்துவரும் இவர்கள் கடவுளுக்குத் தோழர்களா அல்லது ஏமாற்றித் திரிபவர்களா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே கடவுள் மறுப்பாளர்களின் கோரிக்கையாகும்.

 மக்களுக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் அவை அனைத்திற்கும் கடவுளே கைகொடுப்பார் என்ற நம்பிக்கையில் தன்னம்பிக்கையற்றுக் கோயில்களுக்குப் படையெடுக்கும் மக்களைச் சுரண்டுவதே கோயில் ஊழியர்களின்  மந்திரமும் தந்திரமுமாகும்.

கடவுள் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.

கடவுள் பிறந்த கதைகள், உலகத்தையும் உயிர்களையும் படைத்த கதைகள், அற்புதங்கள் நிகழ்த்திய கதைகள், அருள்பாலித்த கதைகள்,  கடவுளின் குழந்தை குட்டிகள், மாமன் மச்சான் வகையறாக்கள், பங்காளிச் சண்டைகள், இன்னபிறவும் கடவுளின் ஆற்றல்களுக்குச் சான்றுகளாகப் பறைசாற்றப்படுகின்றன.

கடவுள் அருள்பாலித்தல் :

…………………..தொடரும்……………………………

 

ஞாயிறு, 15 ஜூன், 2025

தமிழமுது – 48. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  48. கடவுளைப்பற்றி….!

 

மதத்தின் மறுபக்கம் :

மதம் கடவுளின் அற்புதசக்திகளை பொய்யாகவோ புனைந்திரையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக மாற்றம் பெற்றது.மதம் மக்களை அடிமையாக்கும் அளவிற்கு உயர்ந்த பொழுது அதன் போக்குகளைக் கட்டுப்படுத்த பலர் கிளர்ந்தெழுந்தனர் ; அவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஓர் இயக்கமாகப் பரிணமித்து உலகெங்கும் ஆங்காங்கே தோன்றினர். கடவுள் இல்லையென்று கூறி மக்களின் அறியாமையை அகற்றப் போராடினர். ஆயினும்  மதம் ஆளும் அதிகாரம் உடையோர் கையில் வலிமைபெற்று வாழ்ந்து வரலாயிற்று. மக்களின் வாழ்க்கையில் கடவுள் வழிபாடு பிரிக்க இயலாத ஒன்றாயிற்று. தொல்பழங்காலம் தொட்டு இன்றுவரை கடவுள் உண்டு என்று சொல்வோர் ; கடவுள் இல்லையென்று சொல்வோரை இழித்துரைக்கின்றனர்,

தமிழ்நாட்டில், தொல்பழங்காலத்தில் முருகனும், தாய் தெய்வமாக கொற்றவையும் வழிபாட்டிற்குரியவராவர். பின்னர் நிலத்திற்கேற்ப வேறு பல தெய்வங்களும் தோன்றின. அக்காலத்தில் சிறந்திருந்த ‘நடுகல் வழிபாடு’ பல்வேறு கடவுள்களாகச் செதுக்கப்பட்டு மன்னர்கள் கட்டுவித்த கோயில்களில் நிறுவப்பட்டன. சமணம், பெளத்தம், ஆசீவகம், வைதீகம் எனும் மதங்கள் , குருமார்கள்  வழிபாட்டு நெறிகளை வகுத்து மக்களிடையே பரப்பினர்.

கடவுள் வழிபாடு -  எதிர் வினை:

கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக வழிபடுவதில் மனிதனுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று “எல்லாமே கடவுள் செயல்தான்” என்று சொல்லிவிட்டால் ஒரு மனிதன் சக மனிதனிடம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டிய  அவசியமில்லையல்லவா..?

…………………………………………..தொடரும்………………………………………..

சனி, 14 ஜூன், 2025

தமிழமுது – 47. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  47. கடவுளைப்பற்றி….!

கடவுளை மனித சமுதாயத்தின் முன் நிறுத்த எத்தனை கதைகள், எத்தனை சடங்குகள், எத்தனை பிரிவினை வாதங்கள் அத்தனையும் மனித சமுதாயத்தை அலைக்கழித்துக்

கொண்டிருக்கின்றன. மக்களைக் கடவுள் பக்கம் இழுக்க மாபெரும் முயற்சிகள், அறியாமை என்ற ஒன்றின் அடிப்படையிலேயே ‘ஆன்மா’ அலைமோதி கடவுளைச் சீவிக்கச் செய்கிறது. நாட்டில் எத்தனை கடவுள் ; கடவுள்களைக் கட்டமைக்க மதங்கள். மதங்கள் பொதுவாக மனிதநேயத்தைப் பலியிடுகின்றன.

மதங்கள் படுத்தும்பாடு:

கடவுள் மோசடியில் ஈடுபட்டதாகப் பல கதைகள் கூறினாலும் அக்கதைகள்  ‘நன்மைக்கே’ என்றுதான் முடிவுறும். ‘ கடவுள் நல்லவர்களைத்தான் சோதிப்பான் ; ஆனால் கைவிடமாட்டான்’ எனும் வழக்கு மொழியைக் கேட்கிறோமே..! கடவுள் படைக்கிறார் என்றால் சிலர் ‘ ஆண்டவன்   என்னை மோசம் பண்ணிட்டான்’, ’கடவுளே உனக்குக் கண் இல்லையா… காது கேட்கவில்லையா, நீ கல்லா…கடவுளா..? என்றெல்லம் ஏன் புலம்புகிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார், அவர் நம்பியவர்களை மோசம் செய்யமாட்டார் என்று கடந்தகால கதைகளைக் கூறுவார்கள். உண்மையில் பல மோசடிக்கும்பலுக்குக் கடவுள் துணையாக இருந்துவருகிறார் என்பதை நம் நடைமுறை வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கலாம்.

உலகம் உருண்டை எனும் அறிவியல் உண்மையை மதவாதிகள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கொள்கையை ஏற்க முடியாது என்றதும் கடவுள் பெயரால்தான் அரங்கேறின. நாளும் கோளும் இரவும் பகலும் இயற்கை நிகழ்வு என்பதை இறைவனின் சேவகர்கள் மறுத்தனர். சாந்திரனுக்கு மனிதன் செல்லாதவரையில் பாம்பு விழுங்கிய சந்திரனுக்குச் சமுதாயத்தில் இருந்த மதிப்பே வேறு ; இறைவன் இன்றி உயிர்கள் இருக்கின்றனவோ இல்லையோ.. மழையின்றி மண்ணில் இல்லை என்று மெய்யை உலகம் உணர்ந்து தெரிந்துகொண்டது.  எல்லா உயிர்களுக்கும் படியளக்கும் இறைவன் சோமாலிய நாட்டு மக்களுக்கு ஏன் அளக்கவில்லை..?

கடவுள்களைப் பூட்டி வைத்தும் காக்க முடியவில்லையே..!  உலக் உயிர்களைக் காப்பாற்றும் கடவுள் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை காவல் துறையினரே காப்பாற்றவேண்டியுள்ளது.

…………………………………………..தொடரும்………………………………………..

வெள்ளி, 13 ஜூன், 2025

தமிழமுது – 46. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  46. கடவுளைப்பற்றி….!

கடவுளைப்பற்றி இதுவரை வெளிவராத சில உண்மைகள்  இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடவுள் உண்டா…இல்லையா..? என்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.. நம்முடைய கவலையெல்லாம்  கடவுள் இருப்பதாகக் கூறும் மனிதர்களைப்பற்றித்தான். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உறைகின்றார்; எனவே எல்லோருக்கும் கடவுளைத் தெரியும். கடவுள் இருக்கிறார் என்று ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் வல்ல இறைவன் தன் இருப்பை உயிர்களுக்கு உணர்த்தும் சக்தியுடையவன்தானே..? அந்தப்பணியைக் கடவுளின் ‘பங்காளியாக’ இன்னொரு மனிதன்  தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அறியாமையால் கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக வழிபடுவதில் மனிதனுக்கு ஆறுதல் கிடைக்கிறது அப்படியொரு நம்பிக்கை.. அஃது அவரவர் விருப்பம்.ஆனால் கடவுளை எப்படித் தொழவேண்டும்  எந்த மொழியில் வேண்டுதல் வைக்க வேண்டும்..?  கடவுள் நீதிபதியாக இருக்கிறார் அவரிடம் நம் வேண்டுதலை எடுத்துரைக்க வழக்குரைஞர் ஒருவர் வருகிறார்.  பணமும் பொருள்களும் பெற்றுக்கொள்கிறார் ; அவர் என்ன சொன்னார் , எந்தமொழியில் சொன்னார்..? ”கடவுள் மொழியில்” சொன்னாராம்.  அந்த மொழி தோன்றியபின்தான் கடவுள் தோன்றினாரா..?

 

…………………………………………..தொடரும்………………………………………..

ஞாயிறு, 1 ஜூன், 2025

தமிழமுது – 45 - அறம் x தர்மம்.

 

தமிழமுது –  45 -  அறம் தர்மம்.

தொடரும்…………………………………..

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.

 

 கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.

 

Dr. R.KUMARAN- +91 94433  40426.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB0001854

MICR CODE : 613015003

 


தமிழமுது -44 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு – ஊழ்வினை – உறுதிப் பொருள்.

 

தமிழமுது -44 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு ஊழ்வினைஉறுதிப் பொருள்.

 

ஊழ்வினை வழிபாட்டோடு தொடர்புடையது. தெய்வத்தால் விதிக்கப்பட்டது என்ற எண்ணம் தொன்மஒயானது.

 

நீர்வழிப்படூஉம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் …. _புறநானூறு 192.

 

ஊழ்வினை பால், வரை, தெய்வம் எனவும் ஊழின் ஆற்றல் விளக்கப்படுகிறது. சிலப்பதிகாரம்ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…” என்கிறது.

 

உண்மையில் ஊழ் வேறு வினை வேறு, வினைக் கோட்பாடு தமிழருடையது. வினை,  செயலின் பயனே;  பிற்காலத்தில் பிறவிப் பயனைக் குறிப்பாதாகக் கொள்ளப்பட்டது.

 

வினை வேறு விதி வேறு. ஒரு செயலின் முடிவு அதனைச் செய்தானின் வேறாக வெளியேயிருந்து தீர்ப்புரைக்கும் ஒருவனால் திணிக்கப்படுவதன்று.  உண்மையில் செயலின் விளைவென்பது அச்செயலின் ஒரு பகுதியே !  வினைவிதிக்கு நேர் மாறானது.

 

வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.

தினை விதைத்தவன் தினையை அறுப்பான்.”

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் பழமொழிகளைக் காண்க.

 

உறுதிப் பொருள்:

இதுவும் வழிபாட்டோடு தொடர்புடையதுதான். மனித வாழ்க்கையில் பெறவேண்டியது மூன்றா நான்கா….? (அறம்,பொருள், இன்பம், / வீடு )

தமிழர் இறந்தபின் எய்தும் நிலை குறித்துக் கவலை கொள்ளவில்லை. வாழும் வாழ்க்கை, பயனுடையதாக (தனக்கும் பிறர்க்கும்) இருக்கவேண்டும் என்றே கருதினர். வீடு – (பேறு ) தமிழர் நெறியன்று.

 

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

   அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல..” புறநானூறு . 31.

 வீடு ஒழிந்த மூன்றையே வாழ்வியல் நெறி எனக் கொண்டனர்.

 

 அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள் ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும்  உறுதி பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில், திருவள்ளுவர்  திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா..? ’குன்றக்கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன…?

 

(இக் கட்டுரையாக்கத்திற்குத் துணைபுரிந்த சான்றோர் பெருமக்களின் திருவடிகளைத் தொழுது நிறைவு செய்கிறேன்.)

 

தமிழமுது – தொடரும்…………………………………..

 

சனி, 31 மே, 2025

தமிழமுது -43 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முடிவுரை:

 

தமிழமுது -43 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முடிவுரை: முருக வழிபாடே- முதன்மை வழிபாடு;

 பழங்கால குறவர், எயினர் போன்ற (Food Gatheres) பயித்தொழில் மேற்கொண்ட காலத்திலேயே முருக வழிபாடு தோன்றிவிட்டது.

சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இஃது ஓர் இனக்குறி (Totemic Symbol )

மயில் பின்னாளில் வந்தது. முதலில் முருகன்  நோய் தீர்க்கும் சக்தியாகவே போற்றப்பட்டான்.

மேற்கூறிய சான்றுகள் முருக வழிபாட்டின் தொன்மையையும் உண்மையையும் தெரிவிக்கின்றன.

……………………………தொடரும்……………………….