செவ்வாய், 30 ஜூன், 2015

புறநானூறு – அரிய செய்தி - 2-5

புறநானூறு – அரிய செய்தி - 2
                                                    மக்கட்பேறு
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் ...
           உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.28 : 1 – 6
சிறப்பில்லாத குருடும் வடிவற்ற தசைப் பிண்டமும் கூனும் குறுகிய தோற்றமும் ஊமையும் செவிடும் விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கி இருப்பதும் ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவை, இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதைத் தன்மையிலான பிறப்புகள், இவற்றால் யாதொரு பயனும் இல்லை என  நன்கு அறிந்தோர் முற்காலத்தில் கூறினர்.
இன்றைய குழந்தைகள்நல மருத்துவ அறிவியலோடு ஒப்பிடவும்.
அறிவியல் வளர்ச்சியில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆய்க.
முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 3
                                              இயற்கையும் செயற்கையும்
மாரி பொய்ப்பினும்  வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்  இக் கண்ணகன் ஞாலம்
                              வெள்ளைக்குடி நாகனார், புறம்.35: 27-29
 மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினாலும்  காவலரைப் பழிக்கும் இவ்விடமன்ற உலகம்.
என்னே சங்கப் புலவரின் தொலை நோக்குச் சிந்தனைஇயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம் அதாவது மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல்,மணல் கொள்ளையடித்தல், நெகிழ்வி பயன்படுத்தல், காற்றை மாசூட்டுதல் போன்ற கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இதைதான் செயற்கையால் இயற்கையை அழித்தல் என்று புலவர் கூறினார் என்று கொள்க.காவலர் யாவர்?  - அன்று- மன்னன், இன்று- ஆள்வோர்.
புறநானூறு – அரிய செய்தி - 4   
                                                  போர்க் களக் காட்சி
இன்சுடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பு ஒதுகின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின் ஒதுகின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றி
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே
                                         சாத்தந்தையார், புறநா. 80
இனிய கடுமையான கள்ளினை உடையது ஆமூர். அவ்வூரில் வலிமையுடைய மல்லனுடைய மிகுதியான வலிமையை அழித்து நின்றனன் பெருநற்கிள்ளி. அங்ஙனம் பொருதபோது ஒரு காலை மடக்கி மண்டியிட்டு மல்லனின் மார்பில் வைத்தும் மற்றொரு காலை மல்லன் முயலும் தந்திரங்கட்கு விலக்கி முதுகின் பின்னர் வைத்தும் இருந்தனன்.
பசித்து மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப் போல தலையும் காலுமாகிய இரண்டிடமும் முறியுமாறு மோதினான். களத்தில் போரில் எதிர்ப்பட்ட மல்லனை வென்று கொன்ற நிலையை, வெல்லும் போருடையவனும் போரிடுவதற்கு அரியவனும் கிள்ளியின் தந்தையுமாகிய தித்தன் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக.
இப்பாடல் ஒரு நேர்முக வருணனை. இவ்வகைப் பாடல்களைத் தொகுத்து ஆய்க.
(ஏமாந்த = ஆசைப்பட்ட. 101) சேம அச்சு = ஸ்டெப்னி – 102. குறுமாக்கள் = சிறு பிள்ளை
கள்.104. பவர் = கொடி. 109 பழிச்சி = வாழ்த்தி 113. அல்குல் = உயிர் உறுப்பு, மறை உறுப்பு.116.
புறநானூறு – அரிய செய்தி - 5
                                                         புளிச்சோறு
செம்புற்று ஈயலின் இன் அளை புளித்து
                                              கபிலர், புறநா. 119 : 3
செம்புற்றின் ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடைத்து – பாரி நாடு.
இது போன்று வேறு பல உணவு வகைகளையும் சமையல் முறைகளையும் மேலும் காண்க.நெய்ச் சோறு-120, பாற் சோறு- 168  இன்னபிற உணவு வகைகள்- ஆய்க.

முதன்மை நோக்கு : சமுகவியல் 

புறநானூறு – அரிய செய்தி - 1

புறநானூறு – அரிய செய்தி
ஆய்வுக்குரிய செய்திகள்
ஆய்வாளர்கள் பார்வைக்கு -                  
பழந்தமிழ் நூல்களில் ஆய்வுக்குரிய செய்திகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.
புலவர்களின் அறிவியல் சிந்தனைகளை ஆராய்தல் -
பாடுபொருள் -  புலவரின்  நிலவியல் சார்ந்த தொடர்புகள்
.வரலாற்றுச் செய்திகள் - திரட்ட வேண்டிய சான்றுகள்.
புலவர் பெயராய்வு , ஊர்ப் பெயராய்வுஆய்வுகளைத் தொகுத்து ஆராய்தல்-
பாடுபொருளுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளின் நோக்கங்களை ஆராய்தல் -
பழந்தமிழ் நூல்களில்  இடம்பெற்றுள்ள ஆய்வுக்குரிய செய்திகள் பிறமொழிச் செவ்வியலக்கியங்களில் இடம்பெற்றுள்ளனவா  என்பதை ஆராய்தல்-
இத்தலைப்புகள் தொடர்பாக இதற்கு முன்னர் நிகழ்ந்துள்ள ஆய்வுகளை கருத்தில்கொண்டு மேலாய்வு நிகழ்த்துதல்-

புறநானூறு – அரிய செய்தி - 1

6 -  தமிழ்நாட்டின் எல்லைகள்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
                                                        காரிக்கிழார், புறநா.6 : 1 – 4
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
                                         குமட்டூர்க்  கண்ணனார், பதிற். 11 : 23 – 25
கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை
                                                        பரணர், பதிற். 43 : 6 – 8
தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
                     குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8
தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும்  எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல், செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
 குண குட கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால், குமரி கடல்கோட்படுதற்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும்.
மேலும் காண்க: தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம். இமயம்
வடதிசை யதுவே வான் தோய் இமயம் 132 புறநா.

 தமிழ்நாட்டின் எல்லைகளை இலக்கண, இலக்கிய, தொல்லியல் குறிப்புகள்கொண்டு ஆய்க.

வெள்ளி, 26 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -126 - 136 -முற்றும்

-      அகநானூறு – அரிய செய்தி -126
                                       புற்றாஞ் சோறு
கோடைநீடலின் வாடுபுலத் துக்க
சிறுபுல் லுணவு நெறிபட மறுகி
நுண்பல் எறும்பு கொண்டளச் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்
  மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார், அகநா.377
 மறவர்கள் தம் உணவினை விதைத்து விளைவித்தலின்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும் இயல்பினராதல் பெற்றாம். – பாலை
அகநானூறு – அரிய செய்தி -127
                                            தாள்தோய் தடக்கை
ஓடு புறங் கண்ட தாள்தோய் தடக்கை
                           மதுரை மருதன் இளநாகனார், அகநா.312: 11
 முழந்தாளினைப் பொருந்தும் பெரிய கையினையுடைய, போர் வெல்லும் பாண்டியன்
 ஆய்க – உடல் உறுப்புகள் – காதளவோடிய கண்கள், அமிழ்துபொதி துவர் வாய்,( விறலி ஆற்றுப்படை)
அகநானூறு – அரிய செய்தி -128
                                         அரவு விழுங்கிய திங்கள்,ஒற்றுச்செல் மாக்கள்
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்ப
                                 பாலை பாடிய பெருங்கடுங்கோ,அகநா.313:7
அரா விழுங்கிய திங்களென நெற்றி ஒளியினை இழந்திட
அகநானூறு – அரிய செய்தி -129
                               வருத்தம் தரும் செவ்வழிப் பண்புரவி நூல்
 நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி யியம்ப ....8, 9
...........................................................
.............................................. தீந்தொடை
பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரா ராயின் .........11 – 13
               மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், அகநா.314
புரவி நூல் கூறும் முறைப்படி நுண்ணிதின் அமைந்த, வேகத்தாற் காற்றெனக் கூறத்தகும் குதிரை.
இனிய நரம்புத் தொடையினையுடைய நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப் பண் தோன்ற ........................

அகநானூறு – அரிய செய்தி -130
                                 புரவி நூல் – குதிரை இலக்கணம்
நூலமை பிறப்பின் நீல உத்திக்
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற் றார்கை
                     உலோச்சனார், அகநா. 400: 5-7
புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும் நீல மணியாலாகிய நெற்றிச்சுட்டினையும், சரிச்சரையுண்டாக அடர்ந்து கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரியினையும்......
அகநானூறு – அரிய செய்தி -131        
                                       பருவமுற்றனள் காதல் திருமணம்
கூழையும் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்டுணை சான்றனள் இவளென,,,,,,,,,  அகநா. 315 :1- 3
தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் எனும் இயல்பினை அமைந்தனள்.( இவளைக் காக்கத் தவறி விட்டேனே – மகட்போக்கிய தாய்.)
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக் கொல்கிப்
புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்
அறுநீற் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகி.... 8 – 14
                    குடவாயிற் கீரத்தனார், அகநா.315
தனது அரிய காவல் பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பும் செய்யப் பெறாளாய், நெடுந்தூரம் சென்று, நீரற்ற சுனைக்கண் நீர் பெறாது தளர்ந்து, புறா துளைத்துண்டமையின் மேல்காற்று உதிர்த்திட்ட  குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள், நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளையொப்ப வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில், கூரிய வேலினையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று...
மேலும் காண்க : சிலம்புகழி நோன்பு என்பது கலியாணத்திற்கு முன்பு செய்யப்படுவதொரு சடங்கு. – நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின், எவனோ- ஐங்குறு. 399. – சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ , அறியாத் தேஎத்தல் ஆகுதல் கொடிதே – அகநா. 385.  – சிலம்பு கழீஇ செல்வம், பிறருணக் கழிந்த வென்னாயிழை யடியே – நற். 279.
அகநானூறு – அரிய செய்தி -132
            பரத்தமைபாடி –குரவை ஆடுதல்-துணங்கைக் கூத்து, ஞாயிறு நோக்கிச் சுழலும் நெருஞ்சிப் பூ,
தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அங்குடம்  இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை யயருந்  - 6 -10
............................................................
தாமும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் – 15,16
தெளிந்த கள்ளினைக்குடித்து, மகளிர் நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு, தம் கணவரது நற்பண்பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களையுடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவை ஆடுதலைச் செய்யும்.
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாக் காலத்தே...
அகநானூறு – அரிய செய்தி -133                     
                           புலவன் பாடிய நன்னன் எழில் குன்றம்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்து
                    குடவாயிற் கீரத்தனார், அகநா.345: 5 -7
பழைமையான புகழினையுடைய மிக நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனாற் பாடப்பெற்ற மேகங்கள் தவழும் ஏழில் குன்றத்தின்கண்.
ஏழிற் குன்றம் நன்னன் என்பானது; மேல்கடற் பக்கத்தது. மேலும் : அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை, சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு, ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொள. அகநா.349: 7 -9 ஏழில் மலை – எழில் மலை – எலி மலை – காண்க.
அகநானூறு – அரிய செய்தி -134
                                      சொல்பெயர் தேயம், செம்மொழி
........................................ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
                      மாமூலனார், அகநா. 349: 3, 4
பொருளின் அளவை அறியும் கருவியாய துலாக் கோலையொத்த, குற்றமற்ற செம்மொழியினை யுடையனாகிய ....

350- வலம்புரி- முத்து எடுத்தல், பரதவர் கொற்கை
356 – நன்னன் பறம்பு-ஒப்பிடு சுடர்த் தொடி – கலி.
................................................. ஊரன்(மருதம்)
 இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
 அன்னாய் என்றனென் அவன் கைவிட்டனனே
                                        பரணர், அகநா.356: 5-7
(சுடர்த் தொடீஇ.....
வளைமுன் கைபற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்த்து காண் என்றேனா
                                                       கபிலர், கலித். 51 : 10,11
தொன்னசை காவாமை நன்னன் பறம்பிற்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினேன் ஆகி .....
                                                -பரணர், அகநா. 356 : 4 - 10
( சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றாம்
மறந்தனர் கொல்லோ தோழி ... மாமூலனார், அகம். 1: 5-7)
     அகநானூறு – அரிய செய்தி -135                                             
                                     பாம்பு உமிழ்ந்த மணி
மேய்மணி யிழந்த  பாம்பின் நீநனி
தேம்பினை வாழியன் நெஞ்சே …..
             பரணர், அகநா.372, 13, 14
மேய்தற் பொருட்டு உமிழ்ந்துவைத்த மணியினை இழந்த பாம்பைப்   போல நீ மிகவும் வாடுதலுற்றனை, ( குறிஞ்சி)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
அகநானூறு – அரிய செய்தி -136
                                               கூந்தலில் மணம்
நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
-      காவட்டனார், அகநா. 378 : 1,2
மிக்க பொருள் தங்கும்  உயர்ந்தோங்கும் மனையகத்தே, கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல்போல் மணம் பொருந்துமாறு…. மணங்கமழும் வேங்கை மரத்தின் பொன்னிறத் தாதுக்கள் காற்று அடித்தலால் உதிர….
 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு
                                                              குறள். 1113
வேய் போலும் தோளினை உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்தமாயிருக்கும் இயல்பாய நாற்றம் நறு நாற்றமாயிருக்கும் உண்கண்கள் வேலாயிருக்கும்.
அகநானூறு – அரியசெய்தி – முற்றும்

            அடுத்து வருவது – புறநானூறு – அரிய செய்தி.