திங்கள், 15 ஜூன், 2015

கருவும் உருவும்

கருவும் உருவும்
                      ( முனைவர் இரெ.குமரன் -தமிழர் அறிவியல் – கருவும் உருவும் கட்டுரையிலிருந்து……)                                                              
                                            கருவுற்ற பெண்களின் மனநிலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் மனநிலை பாதிக்கப் படுமானால் ; அவள் சுமந்திருக்கும் கருவுக்குக் கேடு நேரிடும். கருவுற்ற பெண்கள் நெறி தவறாது நடப்பதோடு – அலைபாயும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. பெண்களின் மனத்தில் பதியும் உருவங்களும் எண்ணங்களும் கருவில் உருக்கொள்ளக் கூடும் என்பர். புணருங் காலத்தில் ஆண்-பெண் மனங்களில் எப்படிப்பட்ட உருவங்கள் பதிந்து இருக்கின்றனவோ அப்படிப்பட்ட உருவம் உடைய பிள்ளை உண்டாகும் என்பர். மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் தாயானவள் வியாசருடன் புணரும்போது வெட்கமிகுதியால் தன்னுடைய இரு கண்களையும் மூடிக்கொண்டதால் அவன் குருடனாகப் பிறந்தான் என்றும் பாண்டுவின் தாயானவள் பயத்தால் மனம் வேறுபட்டு உடல் வெறுத்து அசைந்தபோது கூடியதால் அந்தப் பாண்டுவின் உடலில் பாண்டு நோய் பிடித்ததாகச் சொல்வர். கருவுற்றவளுக்குப் பய உணர்வு பற்றி இருக்குமானால் அவளுக்குப் பிறக்கும் குழந்தை கோழை குணம் கொண்டதாக இருக்கும்.  மூன்று மாதக் கருவைச் சுமந்த பெண் ஒருத்தி ஊனமுற்ற ஒரு பிள்ளையைப் பார்த்துத் தனக்கும் இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று கலக்கமுற்று இருந்ததனால் அவளுக்குப் பத்து மாதம் கழித்துப் பிறந்த குழந்தை ஊனமாகவே இருந்ததாம்.
                               ஆண் தன் மனைவியை ஒரு நடிகையாகக் கருதி இன்பத்தில் ஈடுபடுவதும் ; பெண் தன் கணவனைத் தான் மிகவும் விரும்பும் நடிகனை நினைவில் நிறுத்திக் கொள்வதும் அல்லது பொய்யும்  பித்தலாட்டமும் நிறைந்த காமசொரூப சாமியார்களை மனத்தில் நிறுத்திக் கொள்வதும் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும்.  இம்மாதிரியான பெண்களுக்கு அறிவும் பண்பும் நிறைந்த குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. கருவுற்ற பெண்கள் புராண இதிகாச புளுகு மூட்டைகளை மனத்தில் ஏற்றிக் கொள்ளாமல் தன்மானமும் பண்பும் அறிவும் தரக்கூடிய இலக்கண இலக்கியங்களைத் தேர்ந்து படிக்க வேண்டும். நல்ல சிந்தனைகள் தாயின் உதிரத்தில் உறைந்து கருவில் உருவாகும் குழந்தைக்கு ஊட்டமாக அமைந்தால் அறிவுக் குழந்தை பிறக்கும்.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக