புதன், 24 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -101-105

அகநானூறு – அரிய செய்தி -101
                       சேரன் இமய வில் பொறித்து, ஆரிய மன்னரை வென்றது
ஆரியர் அலறத்  தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன .........................
                  பரணர், அகநா.396 :  16-19
ஆரிய மன்னர்கள் அலற- இமய மலையி வளைந்த வில்லைப் பதித்து – பகை வேந்தரைப் பிணித்து வந்த – இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் – இதனை, ‘இமயம் விற் பொறித்து ‘ எனவும்’ பேரிசை மரபின் ஆரியர் வணக்கி ‘ எனவும் பத்திற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தில் நெடுஞ்சேரலாதன் கூறப்படுதலான் அறிக.
இந்நிகழ்ச்சிகள் அவன் மைந்தனாகிய செங்குட்டுவனாலும் நிகழ்ந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுதலின், பிணித்தோன் என்றது செங்குட்டுவன் எனலும் பொருந்தும் – நாட்டார் உரை.
அகநானூறு – அரிய செய்தி -102 
                                                       ஆரியர் மலை – இமயம்
 ..................... ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும்....
 இம்மென்கீரனார் , அகநா.398: 18, 19
ஆரியரது பொன் பொருந்திய நீண்ட இமயமலையை ஒக்கும்.
அகநானூறு – அரிய செய்தி -103 
                                             வலன் ஏர்பு - மேகநீர்முகந்து –மழை,குதிரைமரம்
 குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
                              -கபிலர் , அகநா. 278: 1 – 3
கீழ்த்திசைக் கடலிடத்து நீரைமுகந்துசுமந்துயானகள் அணிவகுத்து நின்றது போல் தோன்றி வலமாக எழுந்து சென்றன.
குதிரைமரம்ஆற்றில் நீரைத் தேக்குதற்குக் கால்களாய் நிறுத்தப்படும் மரம்.
அகநானூறு – அரிய செய்தி -104 

                                  வலம் திரி மருப்பு (298) பனிக்கட்டி + நுங்குச்சுளை
................................ மடப்பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்
                 இடைகாடனார், அகநா. 304 : 8 – 10
இளைய பெண்மான், வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமானொடு, அசையும் கிளையினையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க.
அகநானூறு – அரிய செய்தி -105 
                           புலி இரையை வலப்பக்கம் வீழ்த்தல்
................................. வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தடமருப்பி யானை வலம்படத் தொலைச்சி
வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து
                          எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், அகநா. 357: 2 – 5
சூல் வேட்கையுடன் கிடந்த , உண்ணாத பெண்புலியின் வருத்தத்தை நீக்கி,

பெரிய கோட்டினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக்கொன்று, அகன்ற பாறைகள் குருதியாற் சிவக்கும்படி கிழித்திழுத்துவந்து.....( முணங்கு= சோம்பல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக