செவ்வாய், 23 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -91- 95

அகநானூறு – அரிய செய்தி -91 
                          கல் – தெய்வமாதல் –சிற்பக்கலை - தை-நோன்பு-பாவை
ஏறுடை இனநிரை பெயர பெயராது
செறிகரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார்
பிடிமடிந்தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நாடாஅ நெடுங்கல்
அகல் இடம் குயின்ற பல்பெயர் மண்ணி
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி கழற்கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்
                        -மதுரை மருதன் இளநாகனார், அகநா.269: 3 – 13
அஞ்சாமை உடைய கரந்தை வீரர்கள் காளையையுடைய பசுக்கூட்டங்கள் மீண்டு வரவும் தாம் வாராது சுரைகள் கொண்ட வெண்மையான வேல்களையுடைய வெட்சி வீரர்களை மீண்டும் நிரைமேற் செல்லாது தடுத்து நிறுத்தி, அவரோடு போரிட்டு இறந்துபட்டனர்; அவர்தம் நிலை பேறுடைய நல்ல புகழை நிலைநிறுத்துமாறு உயிர் பிழைத்த கரந்தை வீரர்கள், பெண் யானைகள் படுத்துக் கிடந்தாற் போன்ற குன்றுகளின் பக்கத்தே, நட்டு வைத்தாற் போன்ற இயற்கையாக எழுந்த கற்களின் அகன்ற இடத்தைச் செதுக்கிப் பல வடிவங்களை அமைத்தனர் அவற்றை நீராட்டி நறுமணமுள்ள மஞ்சளை ஈரம் புலராப் புறப்பகுதியில் பூசினர், அம்பு கொண்டு அறுத்து உரித்தெடுத்த ஆத்தியின் நாரினால்சிவந்த கரந்தைப் பூவினைத் தொகுத்துக் கட்டிய கண்ணியைக் கோடுகளையுடைய வண்டுகள் ஒலிக்க அவ்வடிவங்களுக்குச் சூட்டிக் கழல் அணிந்த காலினையுடைய வீரர்கள் தம் பதிக்குத் திரும்பி வந்தனர்.
அகநானூறு – அரிய செய்தி -92  

வாணன் சிறு குடி-
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
நலங் கேழ் மாக்குரல்  குழையொடு துயல்வர
பாடூஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர் இடைப் பட்ட தெள் விளி இயம்ப
வண்டற் பாவை உந்துறைத் தரீஇ
திருநுதல் மகளிர் குரவை அயரும்
பெருநீர்க் கானல் தழீஇ இருக்கை
                              269 : 14 – 21
மழை பெய்து ஓய்ந்து போன தைத் திங்களின் இறுதி நாட்களில், அழகிய
நெற்றியையுடைய பெண்கள், பொன்னால் செய்யப்பட்ட காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே, நல்ல நிறங்கொண்ட பூங்கொத்துக்கள் தழையுடன் அசைந்தாட, ஓசை பரந்துஎழும் பெரிய வாயாகிய வட்டத்தையுடைய ஊதுகொம்பினிடத்துப் பிறந்த தெளிந்த இசை முழங்க , வண்டல் விலையாட்டுக்குரிய பாவையை நீர் உண்ணும் துறையில் கொண்டுவந்து வைத்துக் குரவைக் கூத்தாடுவர்.
இந்நிகழ்ச்சியின் எச்சத்தைக் காண்க . மார்கழி நோன்பின் பின்புலம் ஆய்க.
270- அம் மா மேனி- அழகிய மாமை நிறம் வாய்ந்த மேனி / அம்மாவின் மேனி
அகநானூறு – அரிய செய்தி -93  
                                                                        காட்டு வழி      
நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்  6,7
நெல்லி மரத்தினது காய்கள் வழிப்போவாரது தாகத்தைத் தீர்த்துப் போகும் உயிரைப் போகவொட்டாது தடுக்கும் தன்மையன என்பது அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் (குறுந்.209 )
பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி
அரிமணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
        காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், அகநா.271: 1-3
 புள்ளிகளையும் கோடுகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறாவானது தன் புல்லிய பெட்டைப் புறாவுடன் தொலைதூர இடத்திற்குச் சென்று அறல்பட்ட மணல் வழியிலுள்ள பரற்கற்களை ஆய்ந்தெடுத்து உண்ணும்.
 இப்பறவையின் வாழிடம் – கல்லை உண்ணுமா ?- அறிவியல் ஆய்வு

அகநானூறு – அரிய செய்தி -94  
                                                   தீ கடையும் கோல்,சீட்டி அடித்தல்
பருவம் செய்த பானாட் கங்குல்
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப
கடைகோல் சிறுதீ அடைய மாட்டி
திண்கால் உறியன் பானையன் அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவிடு வீளை கடிதுசென்று இசைப்ப
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குறுந்தீறு இரியப் போகும்
                                               இடைக்காடனார், அகநா. 274: 3 – 11
கார்காலப் பருவத்து நள்ளிரவில் திண்ணிய தாம்புக் கயிற்றினைக் கொண்ட உறியினையும் பானையையும் தோற்படுக்கையையும் கொண்டு, நுண்ணிய பலவாய மழைத்துளிகள் தனது காலின் ஒரு பக்கத்தே நனைக்க கோலினைக் காலுடன் சேர்த்தி நிற்கும் இடையன் செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாவலினைப் பெறுமாறு தீக்கடையும் கோலாலே கடைந்தெடுத்த சிறுதீயை விறகிற் சேர்த்து மிக்கு எரியுமாறு செய்தான்
         பின்னர் வாயை மடித்து சீழ்க்கை ஒலி எழுப்ப,  ஆட்டுக்குட்டியைக் கவரவந்த குள்ள நரி அஞ்சி ஓட..
அகநானூறு – அரிய செய்தி -95  
                                           சீட்டி அடித்தல், ஈசல் புளிச் சோறு
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும்
              நன்பலூர்ச் சிறுமேதாவியார், அகநா.394 : 13 – 15

க்காட்டில் தங்கும் இடையன் – தன் யாட்டினங்களை ஒருவழிக் கூட்டும் – வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலி – முயல்கள் மன்றத்தின் கண் புதரில் பதுங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக