திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்


தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்




தாகூர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் ஏ. பிரதீபராசன், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சோழர்காலத் திருவாண்டார் கோவில் ஊரில் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட ஒரே அளவிலான 10 சுடுமண் உறைகள் கொண்ட கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த  உறைக்கிணற்றைப் பேராசிரியர் பி. ரவி அவர்களின் வழிகாட்டலில் கண்டுபிடித்துள்ளார். இவ்வகழ்வாயில் சோழர்காலத்தில் வளமான வாழ்க்கை வாழ்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. இதே போன்ற சுடுமண் உறைகள் கொண்ட கிணறுகள் அரிக்கமேடு, மணப்பேட்டைப் பகுகளிலும் அகழாய்வில் கிடைத்துள்ளன.  பேரா. ரவி  ஒரு மாணவர் குழுவை அமைத்து புதுச்சேரியைச் சுற்றியுள்ள ஊர்களில் விவான அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய இடங்களை கண்டறிய ஏற்பாடு செய்தார்.அகழாய்வுகள் சோழர்களின் அறிவியல் அறிவை உறுதிப்படுத்தியுள்ளது.

உறைக்கிணறு முன்னேறிய தொழில் நுட்பத்துடன்  ஒரு குளியல் அறை போலவும் நீர் வெளியேற சுடுமண் குழாய்கள் பதித்துள்ளனர்.

ராசன்  ஆய்வின் வழியே திருவாண்டார் பகுதியில் சோழர் காலத்தில் மக்கள்   நல்ல செழித்தோங்கிய வளமான நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். என்றும்  கோவில் சுற்றுச் சுவர்களில் சிறப்பான வரலாற்றுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது என்றும் கூறினார். மேலும்  சில ஆண்டுகளுக்கு முன் கோவிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது பல வெண்கலக் கடவுள் சிலைகள்   கிடைத்தன என்று ராசன் பேரா.ரவியிடம் கூறினார். பேரா. ரவி,  கி.பி.1300 இல் தில்லி சுல்தான் அலாவுதின் கில்சியின் படைத் தலைவர் மாலிக்காபூர் இப்பகுதியில் படையெடுத்துவந்தபோது  இங்கிருந்த பாண்டியர்களும் சம்புவராயர்களும் இப்பகுதியை விட்டு வெளியேறுமுன் இறைவன், இறைவி சிலைகளை மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த உறைக்கிணறு போன்ற  வேறுபல் உறைக்கிணறுகளும் அரிக்கமேடு அகழாய்வில்  (2002இல்) கிடைத்துள்ளன.

தென்னிந்தியாவில் கிடைத்துள்ள கிணறுகள் கி.மு. முதல் நூற்றாண்டிற்கும் கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்தவையாகும் என்பதை அண்மைக்கால அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

மாணவர் ராசன், இவ்வகழாய்வு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ;  முன்னோர் நாகரிகத்தை அறிந்துகொள்வதற்கு மேலும் பல அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

 



ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனா – கேரளா; வாணிகத் தொடர்பு.

 

 தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனாகேரளா; வாணிகத் தொடர்பு.



கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கேரளாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற வாணிகத் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.கொல்லத்தில் உள்ள தங்கசேரி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றபொழுது சீன மண்பாண்டச் சிதறல்கள் கிடைத்தன.

இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் கே.கே. முகம்மது , சீனாவில் ’சங்’ மரபினர் ஆட்சியின் போது பரவலகப் பயன்படுத்தப்பட்ட ”நச்சுத் தட்டு” (பாய்சன் பிலேட்டு) முன்னோர்கள் பயன்படுத்திய அசல் பீங்கான் தட்டுத் துண்டுகள் கிடைத்துள்ளன என்றும் சங் அரசர்கள் இந்தச் சிறப்பான தட்டுகளில் உணவருந்தினர், இத்தட்டு நச்சுகலந்த உணவாக இருந்தால் தட்டில் தெறிப்புகள் ஏற்படும் என்றும் வேறு சிலர் இந்தத் தட்டில் நச்சு உணவு இருந்தால்  தட்டின் வண்ணத்தையோ, உணவின் வண்ணத்தையோ மாற்றிக்  காட்டும் என்ற கதையை ஆராய வேண்டி த் தட்டின் சிதறிய துண்டுகளை கேரளா வரலற்று ஆய்வகத்தில் வைத்துள்ளதாக முகம்மது கூறினார்.

சீனத் தட்டுகளைப்போன்று கேரளத்தில் உற்பத்திசெய்ய கொல்லத்தில்  ஆலை அமைத்திருந்ததாகவும் அது பல நூற்றாண்டுகள் செயல்பட்டதாகவு கருதுவதாக  கேரளா தொல்லியல்துறை இயக்குநர் ஜி.பிரேம்குமார் தெரிவித்தார்.

சீன ஆலைகள் கொல்லத்தில் செயல்பட்டதாக மூன்று (வான் டாயூன், ஃபெய்கிசின்.  முகூன்)  சீனப் பயணிகளின் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் 600 காசுகள் தங்கசேரி  துறைமுகக் கடற்கரையில் கிடைத்துள்ளன. இக்காசுகள் ’டாங்’ (618 – 907) ’மிங்’ (1368 – 1644) அரசர்கள் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டவையாகும். இக்காசுகளில் வாழ்த்துச் செய்தியாக  ’வளத்துடனும் மதிப்புடனும் நீடூழி வாழ்க’ என்று பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் போல் போலியாக உருவாக்கப்பட்டுள்ள காசுகளை ’ பெங்சூய் ‘ சந்தையில் காணலாம் என்று முகம்மது கூறினார்.

 

(மேற்குறித்துள்ள வரலாற்றுச் செய்திகள் தஞ்சையத்  தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பிற்காலச் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்தவையாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மேலும் ஆராய்ந்து பர்க்கவேண்டும்.)

 

சனி, 27 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 29: 16 ஆம் நூற்றாண்டு நடுகல்

 

தமிழாய்வுத் தடங்கள் – 29: 16 ஆம் நூற்றாண்டு நடுகல்




பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி இயற்பியல் பேராசிரியர் சரவணகுமார் ,

ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தாதப்பள்ளி என்னும் ஊரில் இந்த அரிய நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்நடுகல்லில் இருக்கும் வீரர்கள் 1.பெருமாள் 2.நாகனன். இவ்விரண்டு பெயர்களுக்கிடையில் சந்திரன், சூரியன் இடம்பெற்றுள்ளன. அஃதாவது கல்வெட்டுகளில் இடம்பெறும் ’சந்திர சூரியர் உள்ளவரை’ என்னும் பொருள் குறிப்பைக் கொண்டதாம். ஒரு வீரன் புலியின் முன்னே ஆயுதம் கொண்டு தாக்க, இன்னொரு வீரன் புலியின் பின் பக்கத்தில் தாக்குகிஆஅரான். இருவருமே வேட்டி அணிந்து, இடுப்பில் குத்துவாள் இருக்க,  அவர்கள் கையிலும் காலிலும் கழல்கள் அணிந்துள்ளனர். தலையின் ஓரத்தில்  கொண்டை முடிந்துள்ளனர். மலைப்பகுதியில் காணப்படும் இந்நடுகல், சிவலிங்க வழிபாடு, கர்நாடகாவில்  உள்ள வீரசைவர்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகலாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைவாழ்மக்களின் தனிதன்மை உடைய பண்பாட்டினைச் சுட்டுவதாகும்.

 


வியாழன், 25 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.


கிருட்டினகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில்   கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டினகிரி வரலாற்றுப்பேரவைத் தலைவர் அறம். ஏ. கிருட்டினன்,” இவ்விரண்டு நடுகற்களும் அரிதினும் அரிதாக நமக்குக் கிடைத்துள்ளது. பெண்டிர் போர்க்களம் நோக்கிச் செல்வது முதன்முதலாக இங்கே தான் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் அவர் , பொதுவாகப்  போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மட்டுமே நடுகல் நாட்டுவது மரபு.

குறிப்பாக ஒரு நடுகல்லில்  மூன்று பெண்கள் போர் ஆயுதங்களுடன் குதிரையில் செல்வதும் இன்னொரு நடுகல்லில் இரண்டு பெண்கள் குதிரை மீதேறிச் செல்வதக் காணலாம் .” என்று கூறினார்.

இவ்விரண்டு நடுகற்களும் சந்தனப்பள்ளி ‘பன்னியம்மன்’ இருந்துள்ளன . ஆனால் இவ்வூர் மக்களுக்கு  இவை வீரர் வழிபாட்டிற்குரியவை என்று தெரியாது.

கிருட்டினன்,  முதல் நடுகல்லில் இருக்கும் மூன்று பெண்களில் ஒருவர் அரசியாக இருக்கலாம், குதிரையில் இருக்கும் ஏனைய இருவரும் போர் மறத்தி களாக இருக்கலாம்.மூன்று பெண் வீரர்கள் தங்கள் வலது கையில் படைக் கருவிகளைக் கொண்டிருக்கின்றனர்.. இந்நடுகல்லில் ஓர் ஆண் இருக்கிறார், அவர் அப்பெண்களின் பாதுகாவலராகவோ அல்லது அவரும் ஒரு வீரராகவோ இருக்கலாம்” என்று கூறினார்.

எனினும் இந்நடுகற்களைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்குச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை என்றார்.

தொல்பழங்காலத் தமிழர் வாழ்வியலில் பெண்டிர் போர்க்களம் புகும் மரபில்லை. மறக்குடி மகளிர் குறித்து விரிவாகப் பேசும் சங்க இலக்கியங்கள்  போர்த்தொழிலுக்குரிய ஆண் மறவர்களை ஈன்றெடுத்தலும் வெற்றி வீரனாக களத்தில் மார்பில் புண்பட்டு இறந்தானா  என்று பார்த்துத் தாய் மகிழ்வதையே இலக்கியங்கள் கட்டுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் போர்க்களம் புகுந்த வீர மங்கை வேலுநாச்சியார், குயிலி இன்றும் நம் நினைவில் நிற்பதை மேற்சுட்டிய நடுகற்கள் காட்டுகின்றன.


புதன், 24 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 27 : எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.

 

தமிழாய்வுத் தடங்கள் – 27 :   எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.



கேரளா, வயநாடு மாவட்டத்தில் எடக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள குகையில்  சிந்து வெளி நாகரிகத்தோடு தொடர்புடைய தமிழி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றினைத் தொல்லியல் ஆய்வாளர் எம்.ஆர். இராகவ வாரியார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டு கி.மு 5ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது என்கிறார். இதில் உள்ள எழுத்துக்களை ’சிறீ வழுமி’ என்றும் இச்சொல்லின் பொருள் ’கடவுள் பிரம்மா’ என்பதாகும். இக்கல்வெட்டு எழுத்து வடிவ முறை இந்திய மரபு உடையதாகத் தெரிகிறது. எடக்கல் குகைகள் வளநிலப் பண்பாடு கொண்டவையாகும். எடக்கல் வெளிப்படுத்தும் நாகரிகம் இந்தியாவின் தென்பகுதி வரை பரவியது எனலாம். இக்குகைகளில்  சமண பெளத்தத் துறவிகள் வாழ்ந்து இவ்வெழுத்துக்களைக் கொண்டு இலக்கண இலக்கியங்களையும்  மருத்துவம், வானியல் முதலியவற்றைப் பாடங்களாக எழுதினர். எடக்கல் குகை அரிய பல வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும் என்கிறார் வாரியார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 26 : பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 26 :   பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.



2500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலக் குகை வாழ் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கு உதவும் ஓவியங்களைத் தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வ றிஞர்கள் குழு, வி. நாராயணமூர்த்தி, கன்னிமுத்து ஆகியோர் தலைமையில் ஆண்டிப்பட்டி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு ஆடு மேய்த்தவரிடம் குகை இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு  சுமார் இரண்டு மணி நேரம் மலை மீதேறி குகை ஓவியங்களக் கண்டனர். ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மரப்பசை கொண்டும் பச்சிலை வண்ணங்களைக் கொண்டும் தீட்டப்பட்டிருந்ததை ஆய்வு செய்தனர்.  அவைகள் கேலிச் சித்திரங்கள் (இன்றைய கோட்டோவியங்கள்) போலிருந்தன. ஒரூ பக்கம் குழிதோண்டி அதில் யானையைப் பிடிக்கும் முறையும் அவர்கள்  தலைவன் யானை மீதேறி வருவது போலவும் இருந்தன. விழாவுக்காகப்  பெண்டிர் பானையில் நீர் எடுத்து வருவதுபோலவும், குழந்தைகள் கைகோர்த்து நடனமாடுவது போலவும் விழாவில் ஓர் ஆடு பலியிடுவது போலவும் ஓவியங்கள் இருந்தன. ஒவியங்கள் குறிஞ்சி நிலமக்களின் சடங்குகளைக் காட்டுவதாக அமைந்திருந்தன. தீட்டப்பட்ட ஓவியங்கள் சங்க கால இனக்குழு மக்களின் வாழ்வியலாகும். இதனால் இத் தொல்பழங்குடி மக்கள் கி.மு. 1000 – 300. காலப் பகுதியில் வாழ்ந்தனர் எனலாம். இவ்வோவியங்கள் மத்திய பிரதேச பீம்பெட்கா  குகை ஓவியங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 


திங்கள், 22 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.



2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலத் தமிழரின் வாழ்வியலை உலகிற்கு வழங்கிய கீழடி அகழாய்வின் அருமை பெருமைகளை அறிந்த மாணவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை முதுகலை வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு 88 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றார் பேராசிரியர் பி.டி. பாலாஜி. 60 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்கெனவே 33 மாணவர்கள்  பணம் கட்டியுள்ளனர். கடந்த காலங்களில் ஓரிரு மாணவர்களே சேர்ந்துள்ளனர். 216-17 இல் 18 மாணவர்களே சேர்ந்தனர். இவ்வாண்டு 4 பொறியியல் படித்த மாணவர்கள்  தொல்லியல் துறையில் முதுகலையில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்துள்ள தமிழி எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -24 – 2,200 – ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி நாகரிகம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -24 – 2,200 – ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி நாகரிகம்.



தொல்பழங்கால நாகரிகங்கள்:கி.மு.

1.மெசபடோமியன் ------------2600 – 1900.

2. எகிப்து-------------------------3100 – 332.

3 . சிந்து சமவெளி -------------2600 – 1900.

4 . சீனா --------------------------1600 -1046.

5 .கிரேக்கம் ---------------------2700 முதல்.

6 . மயன் --------------------------2000 – 1539.

 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி அகழாய்வு , அறிவியல் ஆய்வின்படி  சங்க காலம் கி. மு 300 என்று. அறியமுடிகிறது. கீழடி அகழாய்வை மேற்கொண்ட  அமர்நாத் ராமகிருட்டினன் தமிழரின் தொன்மைச் சிறப்பினை உலகமறியச் செய்தார். 110 ஏக்கர்  ஆய்வுக்களம் கொண்ட கீழடியில் 2,5 மீட்டர் ஆழம் வரையே தோண்டப்பட்டுல்ளது. 110 ஏக்கர் முழுவதும்  4.5 மீட்டர் ஆழத்திற்கு அகழாய்வு மேற்கொண்டால் தமிழரின் தொன்மைச் சிறப்பினைத்  துல்லியமாக அறுதியிட்டுக் கூறலாம் என்றார். கீழடியில் கிடைத்துள்ள 20 பொருள்களில்  ஒன்றிய அரசு இரண்டு பொருள்களைமட்டும் ‘கார்பன் கால ஆய்வுக்கு அனுப்ப இசைவளித்துள்ளது ; ஆனால், வடமாநில அகழாய்வில் (15+18) பொருள்களை ஆய்வுக்கு அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. தமிழின் தொன்மையை உலகறிய ஒன்றிய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.  தமிழ்நாட்டரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருட்டினன்.

 


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.



புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட   7- முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தாழியில் அக்கால மக்கள் பயன்படுத்திய , இரும்பு,(ஐந்து வாள்கள்,  மூன்று  ஈட்டிகள் , நான்கு குத்து வாள்கள், கத்திகள்)  செம்பு, ( இரண்டுபாத்திரங்கள்) பித்தளை, (ஒரு மணி )  பீங்கான், களிமண் ஆகியவற்றால் ஆகிய  பொருள்களுடன் தாழியின் அருகே மதிப்புமிக்க  அரிய கற்களும்  கண்ணாடியால் செய்யப்பெற்ற சில பொருள்களும் கிடைத்துள்ளன. கற்காலத்திற்குப் பிந்தைய பகுதியாகிய நியோலிதிக் காலத்தைச் சார்ந்த (கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட )  கற்கருவிகளும் கிடைத்துள்ளன. இப்பகுதி துறைமுக நகரமான அரிக்கமேடு வாழ்வியலோடு உறவுடையதாகத் தெரிகிறது என்கிறார் பேராசிரியர் இரவிச்சந்திரன்.  அவர், மேலும்  இப்பகுதியில்  அகழாய்வு மேற்கொள்ள வேண்டியிருப்பதாகும் கூறுகிறார்.


வியாழன், 18 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.

 

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.



பஞ்சாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கக்ரா ஆற்றுப் படுகையில்,கி.மு. 2500 – 2000. காலப்பகுதிக்குரியதாகச் சிந்துசமவெளி நாகரிகத் தொன்மைக்குச் சன்றாக “வரையாடும் எழுத்து வடிவங்களும் இடம்பெற்றுள்ள முதிரையைக் கண்டுபிடித்துள்ளனர்.   இம்முத்திரை சதுரவடிவில் உள்ளது.  வரையாடு மிக நேர்த்தியான கலையழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை சிந்துவெளி மக்களின் நாகரிக வாழ்க்கை முறையினைக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.


 

புதன், 17 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -21 –டைனசோர் விலங்கினம்.அன்சு வைலியே.

 

தமிழாய்வுத் தடங்கள் -21 –டைனசோர் விலங்கினம்.அன்சு வைலியே.



இலண்டன் : அறிவியல் வல்லுநர்கள் ஓர் அதிசய விலங்கின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  12 அடி நீளமும் 226 கிலோ எடையும் கொண்ட இந்த விலங்கினத்திற்கு. அன்சுவைலியே எனப் பெயரிட்டுள்ளனர்.இப்பெரிய விலங்கு கோழியின் முக அமைப்பையும். இறகுகளையும் கொண்டுள்ளது. இவ்விலங்கு  66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும் இது டைனசோர் விலங்கினத்தைச் சார்ந்ததாகவும் கருதுகின்றனர்.இது மெசபடோமியன் புராணங்களின் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தமிழிலக்கியங்களில் அசுணம் என்றொரு விலங்கு சுட்டுப்படுகின்றது.

“அசுணங் கொள்பவர் கைபோல் நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே.” நற்றிணை: 304.

இசையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவருடைய கையைப் போல் இன்பமும் துன்பமும் உடையதாயிரா நின்றது.

அசுணம் கொல்பவர் முதலில் யாழை மீட்டி , இசையில் மயங்க வைத்து, பின்பு அதன் செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அதனைக் கொல்வதனால் இன்பமும் துன்பமும் உடைமையின் அசுணத்தை உவமித்தார் என்பர். இஃது ஓர் அதிசய விலங்கு ; இது அழிந்துபோன விலங்கினங்களுள் ஒன்றாக இருக்கக்கூடும். ---(மேலும் காண்க: அகநானூறு,88; கலித்தொகை 143 ; நற்றிணை. 244 ; சீவக சிந்தாமணி :1402.)

 

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சனாதனம் பொய்யும் மெய்யும்...!

 

ஐயா. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் சிறந்த ஆய்வுநூல். சனாதனத்தைப் போற்றும் புரட்டுரையாளர்களின் கருத்துக்களைத் தகுந்த சான்றுகளுடன்  மறுத்து விளக்கியுள்ளார். தொடர்பு எண் :  94990 43251.




திங்கள், 15 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -20 – கடல் கொண்ட தென்னாடு.

 

தமிழாய்வுத் தடங்கள் -20 – கடல் கொண்ட தென்னாடு.

நிலம் புடைபெயர்தல்  (கண்டப்பெயர்ச்சி)

நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்

கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே”.- கபிலர் ,பதிற்றுப்பத்து:63.

ந்லவுலகம் தன் கூறுபாடுகள் எல்லாம் நீங்கும் ஊழிக்காலம் என்றாலும் நீ (செல்வக்கடுங்கோ வாழியாதன்) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.(மேலும் காண்க : புறநானூறு,3,34, நற்றிணை,289.)

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள.” –சிலப்பதிகாரம் 11: 9-11)

தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடும் தென் மாவாரியில் முழுகிப்போன பெருநிலமான குமரிக் கண்டத்தின் தென்கோடியடுத்து, பனி மலை(இமயம்) போலும் ஒரு மாபெரு  மலைத்தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக்கண்டம் எனப்பட்டது.

குமரிக்கண்டத்தின் வடகோடியில், குமரி என ஒரு பேரியாறுமிருந்தது.” –பாவாணர்.




அறிவியல் அறிஞர்கள் இந்தியாவுக்கும் மடகாசுகருக்கும் இடையே ஒரு மூழ்கிப்போன கண்டத்தின் எச்சங்களை அஃதாவது, கடலின் அடியில் பெரிய அளவிலான எரிமலைக் குழம்பின் படிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்ஒருபகுதி,  கிழக்கு கோண்டுவானா வெடித்துச் சிதறிய பின், முதலில் பிளவுபட்டது .பின்னர் எஞ்சிய நிலப்பகுதிகள் சிதறுண்டு இந்தியா, ஆத்திரேலியா, அண்டார்டிக்கா என தற்பொழுது  உள்ள நிலையை எய்தின.

 ஒரு பெரிய நிலப்பரப்பு கடலுள் மூழ்கியதில் கடல் கொண்ட தென்னாடும் (குமரிக்கண்டம்) ஒரு பகுதியாகலாம்.


வெள்ளி, 12 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -19. இலாட்வியா நாட்டில் மாரியம்மா.

 

தமிழாய்வுத் தடங்கள் -19. இலாட்வியா நாட்டில் மாரியம்மா.



 இலாட்வியா நாடு இரசியா நாட்டில்  பால்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடாகும். இலாட்வியா நாட்டு மக்களின்  வழிபாட்டில் இடம் பெற்றுள்ள “மாரா” எனும்  பெண் தெய்வம் உருவ அமைப்பிலும் வழிபாட்டு முறையிலும் தமிழ் மாரியம்மாவை ஒத்திருப்பதாக இலாட்வியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘சிக்மா அங்க்ரவா’ கூறுகிறார்.  சிக்மா சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  ஐரோப்பா -  இந்தியா பண்பாட்டு தொடர்புகள் குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கினார். ஒரு நாள் திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கே ’மாரியம்மா’ என்ற பெயரைக் கேட்டவுடன் அதிர்ந்து போய்விட்டதாக வும் மாரியம்மன் இலாட்வியா நாட்டிற்குப் புலம்பெயர்ந்த  தமிழ் மக்கள் வழி எங்கள் நாட்டிற்கு வந்திருக்கலாம் என்கிறார்.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -18. மொழி பல பெருகிய பட்டினம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -18. மொழி பல பெருகிய பட்டினம். 



பன்மொழியறிவைப் பெறுவதற்கு இளையோர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கியும் வாழ்வாதரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ஆர்வமுடையோர்க்குச் சென்னை மையமாகத் திகழ்கிறது. தமிழ், இந்தி, சமற்கிருதம் முதலிய இந்திய மொழிகளைக் கற்பதற்கும்,சப்பானிசு, கொரியன், செர்மன், இசுபானிசு முதலிய மொழிகளைக் கற்பதற்கும் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். மொழி ஆர்வலர்கள் இன்று நேற்றல்ல  பழங்காலந்தொட்டே வணிக வளங்களைப் பெறுவதற்கும் விற்பதற்கும்  தமிழ் நாட்டுப் பண்டைய துறைமுகங்களில்  கூடினர்.

 

பல் ஆயமொடு பதி பழகி

வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்

சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு

மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம் ………. : கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை: 213 – 218.

குற்றமற்ற பிறநாடுகளில், அறிவு சான்ற சுற்றத்தையுடைய, விழாக்களை நிகழ்த்திய பழைய ஊரில் உள்ள பலரும் புகார் நகரில் சென்று குடியேறினர் போலப் பற்பல குடிமக்களுள் உயர்ந்தவர்களாய்த் தத்தம் நிலங்களைக் கை விட்டு, நீங்கிப் புகார் நகரை அடைந்த  பல மொழிகளில் திறமை சான்ற மக்கள், இவ்வூரில் உள்ள நன்மக்களுடன் கூடிப்பழகி இனிதே வாழ்கின்றனர். இத்தகைய குறைவுபடாத தலைமையை உடையது காவிரிப்பூம்பட்டினம்.

புதன், 10 ஏப்ரல், 2024

“தமிழாய்வுத் தடங்கள் -17.-தமிழ் மாநாடுகள் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கிறது.

 

தமிழாய்வுத் தடங்கள் -17.-தமிழ் மாநாடுகள் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கிறது.

உலகில் தமிழர்கள்  52 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, ஆத்திரேலியா, ஆசியா, ஆப்பிரிகா முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் தம் மண்ணை விட்டுப்பிரிந்து வாழ்கின்றபோதும் உலகத் தமிழ் மாநாடுகள் வழியாகத்  தங்கள் மொழி, பண்பாடு, கலை முதலியவற்றால் புத்துணர்வைப் பெறுகின்றனர்

என்கிறார் முன்னாள் மொரிசியசு கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்.



செவ்வாய், 9 ஏப்ரல், 2024

“தமிழாய்வுத் தடங்கள் -16. செர்மனி கொலோன் –பல்கலைக்கழகம் : இந்தியவியல், தமிழாய்வுத்துறை.

 

தமிழாய்வுத் தடங்கள் -16.  செர்மனி கொலோன் பல்கலைக்கழகம் : இந்தியவியல், தமிழாய்வுத்துறை.

 1970-80களில் தலைவர் செனார்ட்,  என்னுடைய துறையில் படிக்க விரும்பும் மாணவர் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட  திராவிட மொழிகளைக் கற்க வேண்டும் குறிப்பாகத் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு விதி வகுத்து வைத்திருந்தார். இவ்விதிக்கு ஒப்புக்கொண்டு உல்ரிக் நிக்லசு எனும் பெயர்கொண்ட இளம் பெண்மணி ஆர்வமுடன் சேர்ந்து கல்வி பயின்றார்.

பல அரிய சாதனைகள் படைத்துத் தமிழை மேன்மையுறச் செய்தார். பின்னாளில் அவரே அத்துறையின் தலைமைப் பொறுப்பேற்று  தமிழ்நாடு வந்து, தமிழின் அரிய பெரிய இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு தஞ்சை மாவட்ட ஊர்களுக்குச் சென்று தமிழர்களின் வாழ்க்கைமுறைகளை நேரில் கண்டு ஆராய்ந்து  பிஎச்.டி. பட்டம் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அழைப்பினை ஏற்று அவரைச் சந்தித்து , உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும் பங்கேற்றார். கொலோன் பல்கலைக் கழகத்தில் 40,000,  தமிழ் நூல்களைக் கொண்டு ஒரு பெரிய நூலகம் அங்கு உள்ளது.



 

திங்கள், 8 ஏப்ரல், 2024

“தமிழாய்வுத் தடங்கள் -15. ஐரோப்பா ஆசிய முன்னோர்களின் வழி 4500 ஆண்டுகளுக்கு முன் பரவிய திராவிட மொழிகள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -15.  ஐரோப்பா ஆசிய முன்னோர்களின் வழி  4500 ஆண்டுகளுக்கு முன் பரவிய திராவிட மொழிகள்.



அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்த உண்மைகள். 4500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய ஆசிய வரலாற்றுக் காலத்திற்கு  முன்பே திராவிட மொழிகள் அந்நாடுகளில் பரவலாக அறியப்பட்டுள்ளதற்கான  சான்றுகளை செர்மனி மனிதகுல வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாகத் திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழியான தமிழின் தொன்மைய இவ்வாய்வின் வழி நாம் மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே மொழியியல் ஆய்வாளர்கள் இவ்வரலாற்றின் அறிவியல் ஆய்வு முடிவுகளைத் தமிழர் வரலாற்றுடன் இணைத்து நோக்க வேண்டுகிறேன்.  

சனி, 6 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -14.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 2

 

தமிழாய்வுத் தடங்கள் -14.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர்தமிழ் மக்களே..பகுதி- 2



ஆத்திரேலியப்புவ நியு கினியாபகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் பழங்காலத்தே தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அப்பகுதியில் குடியேறியுள்ளனர். அவர்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழையும் பழக்க வழக்கங்களையும் போற்றிவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த கே.வி.எசு. கிருட்டினன் என்பவர் தோட்டத் தொழில் தொடங்க அவ்விடம் சென்று அங்கு வாழும் மக்களோடு பழகியபின் அவர்கள் பேசும் மொழி தமிழ் என்பதைக்கண்டறிந்து ஆய்வில் இறங்கினார்.

பப்புவ நியு கினியா நாட்டின் தலைமை அமைச்சரின் பெயர்ராபி நமாளு

 ( ராபி நம்ம ஆளு) மேலும் பல தமிழ்ச் சொற்கள்……”கைநாட்டு, கரிமுய், (கரிய முகம் ) மரணம், மணி, போ, பாக்கு, ஐயா, அண்ணா, பாக்கி, பாலா, குண்டு, குரு, ஜெயம், கை – இச்சொற்களையெல்லாம் ஆய்வாளர் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார்.

இவ்வாறு தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர் என்பதற்கு இஃது ஓர் சான்றாக விளங்குகிறது.

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -13.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 1

 

தமிழாய்வுத் தடங்கள் -13.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 1



அறிவியல்  ஆய்வின்படி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திரேலியாவில் வாழும் தொல்பழங்குடியினர் இந்திய மக்களின் மரபணுவோடு தொடபுடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.  இவ்வாய்வின் சிறப்பான முடிவு:  

 பழங்குடிமக்களின் பேச்சு வழக்கு திராவிட மொழியைப் பெரிதும் ஒத்திருப்பதாக கூறியுள்ளனர். இப்பழங்குடியினர் தமிழ் மக்களே என்பதற்கு  ஆய்வாளர்கள் பல சான்றுகளை முன்வைத்துள்ளனர். (பகுதி  இரண்டில் காணலாம்)  மேலும் இவர்கள் புலம்பெயர்ந்தவர்களா அல்லது குமரிக்கண்டத்திலிருந்து பெயர்ந்தவர்களா ? என்பதும் ஆய்வுக்குரியதாகும்.

வியாழன், 4 ஏப்ரல், 2024

 

தமிழாய்வுத் தடங்கள் -12. ஆழிப்பேரலை – சங்க இலக்கியச் சான்றுகள்.



.

பாண்டியர்காலச் செப்பேடுகள் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல்11ஆம் நூற்றாண்டு வரை 25 செப்பேடுகள் கிடைத்துள்ளன.. இச்செப்பேடுகள் பற்றிய குறிப்புகளை மேலே உள்ள செய்திக்குறிப்பில் கண்டு தெளிக.

அரிசில் கிழார் , பதிற்றுப்பத்து: 72.

துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை

நிலம் பொறை ஒராஅ நீர்ஞெமர வந்துஈண்டி

உரவுத்திரை கடுகிய உருத்துஎழு வெள்ளம்

வரையா மாதிரத்து இருள்சேர்பு பரந்து” –

எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலத்தின் இறுதி புகுகின்ற போது, நிலவுலகின் பாரம் நீங்க, நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும் ; அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும் ; இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம் , எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும்.

சோழன் நல்லுருத்திரன், கலித்தொகை: 104 …..கடல் கொண்ட தென்னாடு.

“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வெளவலின்

பொலிவின்றி மேல்சென்று மேவார்நாடு இடம்பட

புலியொடு வில்நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னன்

தொல் இசை நட்ட……………………………”

 ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் (இலெமூரியா) மண்ணைக் கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று, மனம் தளரா பாண்டிய மன்னன், தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி, அவர் மேல் படையெடுத்தான்  சோழர், சேரர் படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன்கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டி ஆர்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.

இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்: 11:19-22.

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.”

 பஃறுளி ஆற்றுடனே பலவாகிய பக்க மலைகளை உடைய குமரி மலையையும் கடல் கொண்டதனால் வடதிசைக் கண்ணதாகிய கங்கை ஆற்றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென் திசையை ஆண்ட தென்னவன் வாழ்வானாக. (மேலும் காண்க: பரிபாடல் 8)

புதன், 3 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -11 – “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

 

தமிழாய்வுத் தடங்கள் -11 – “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.” (குறள்:69)…..தந்தை.



   ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தை ஒரு வரலாற்று நாயகராக விளங்குகிறார்.

    தாய்நாட்டிற்காகப்  போரிட்டு வீரமரணம் எய்திய தன் மகனை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார்  ஆர். வரதராசன்.

போரில் களங்கண்டு வீரமரணம் எய்தும் வீரர்களைப் பெற்றதற்காக மறக்குடி மகளிர் பெருமை கொள்வதை சங்க இலக்கியங்களில் காணலாம்...

கெடுக சிந்தைகடிது இவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,

யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,

பெரு நிரை விலக்கிஆண்டுப்பட்டனனே;

இன்றும் செருப்பறை கேட்டுவிருப்புற்று மயங்கி,

வேல் கைக் கொடுத்துவெளிது விரித்து உடீஇப,

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒரு மகன் அல்லது இல்லோள்,

செருமுக நோக்கிச் செல்க என விடுமே ! ” -ஒக்கூர் மாசாத்தியார், புறநானூறு: 279.

 

 

இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு கடுமையானது. இவள் முதுமையான மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முன் ஒரு நாளில் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையை எதிர்த்துப் போரிட்டு களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பசுக்களை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் உயிர் துறந்தான்.


இன்றுதெருவில் போர்ப்பறை ஒலி காதில் கேட்டதும் முகம் மலர்ந்துஅறிவு மயங்கி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனின் கையில் வேல் கொடுத்துவெண்மையான ஆடையை விரித்து உடுத்தி, அவனது உலர்ந்த தலைமயிர் குடுமியை எண்ணெய் பூசிச் சீவி, போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு அனுப்பிவைத்தாள்.

இவளது துணிவையும் நாட்டுப்பற்றையும் என்னவென்று சொல்வது. ” (இணையப்பதிவு.)

தொல்தமிழர் வாழ்வியலில் பெண்கள் போர்க்களம் புகுதல் இல்லை. பெண்கள் அக மாந்தர்களாக இல்லறக்கடமைகள் ஆற்றுவதற்குரியவர்களாகவும் ஆடவர் புற வினை ஆற்றுதற்குரியவர்களாகவும் விளங்கினர். எனினும்  கொற்றைவை எனும் பெண்தெய்வ வழிபாடு போருடன் தொடர்புடையதாக அறியமுடிகிறது. புண்பட்டு போர்க்களத்தில் உயிர்நீத்த வீரர்களைப் பெற்ற மகளிரைப் பெருமைக்குரியர்வர்களாகப் போற்றினர்.

 தமிழ்நாட்டில் போர்க்களம் புகுந்து பகைவரைக் கொன்றொழித்துத் தன் நாட்டை மீட்ட சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார் (1730 – 1796)  வரலாற்றில் சிறப்பிடம் பெற்றார். பின்னர், ஈழத்தில் விடுதலைப் புலிகள் படையில் பெண் போராளிகள் களங்கண்டு உலகையே அதிர வைத்தனர்.