சனி, 31 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :833


திருக்குறள் -சிறப்புரை :833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். – ௮௩௩
தவறுகள் செய்வதற்கு வெட்கப்படாமை; நல்லவற்றை நாடிச்செல்லாமை ;யாரிடத்தும் அன்பு கொள்ளாமை ; மனிதனுக்குரிய கல்வி அறிவு ஒழுக்கம் ஈகை உவகை இன்னபிற எந்த ஒன்றையும் பேணாமை ஆகியவை பேதையரின் தொழில்களாம்.
“நல்லவை நாடொறும் எய்தார் அறம் செய்யார்
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் –எல்லாம்
இனியார் தோள் சேரார் இசைபட வாழார்
முனியார்கொல் தாம் வாழும் நாள்.” – நாலடியார்.
 பேதையர் - நாளும் நன்மைகள் அடையார் ; அறம் செய்யார் ; இல்லாதவர்க்கு ஒன்றும் கொடுக்கார் ; இனிய மனைவியின் தோள் நலம் சேரார் ; பிறர் போற்றுமாறு வாழார்; ஆயினும் தாம் வாழுங்காலத்தை வெறுக்கமாட்டார்.



வெள்ளி, 30 மார்ச், 2018


திருக்குறள் -சிறப்புரை :832
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.--- ௮௩௨
( பேதைமையுள் எல்லாம் ; தன்கண்.)
அறியாமை எல்லாவற்றுள்ளும் மிகுந்த அறியாமையாவது ஒழுக்கக்கேடான செயல்களைத் தான் விரும்பிச் செய்தலாம்.
“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” –முதுமொழிக்காஞ்சி.
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம் கற்றலைவிடச் சிறந்தது ஒழுக்கமுடன் வாழ்வது.


வியாழன், 29 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :831


84. பேதைமை
திருக்குறள் -சிறப்புரை :831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.--- ௮௩௧
பேதைமை என்பது யாதென்றால் தனக்குக் கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் தருவனவற்றைக் கைநழுவ விடுதலாகும்.
(பேதைமை – அறியாமை – கூறுகெட்டவன்)
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.” ---குறள்.428.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை ; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையார் செயல்.

புதன், 28 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :830


திருக்குறள் -சிறப்புரை :830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.--- ௮௩0
தமக்குப் பகையானவர் நட்பு நாடி வருவாரானால் அவரோடு மனத்தால் நட்புக்கொள்ளாது முகத்தால் நட்புக்கொண்டு காலம் வரும்போது அவர்தம் நட்பை முற்றாகக் கைவிடல் வேண்டும்.
“உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரப்புணருமாம் இன்பம் –புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.” –நாலடியார்.
நம்மை அறிந்துகொள்ள அறிந்திருக்கின்ற அறிவு உள்ளவர்களை நட்புக்கொண்டால் இன்பம் உண்டாகும் ; அறிந்துகொள்ளும் அறிவற்றவர்களை நட்பாகக்கொண்டால் அவரைவிட்டு நீங்க. துன்பம் நீங்கும்.

செவ்வாய், 27 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :829


திருக்குறள் -சிறப்புரை :829
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.—௮௨௯
(தம் எள்ளுவாரை; சா புல்லல் பாற்று)
பகைமையை மறைத்து மிகவும் அன்பு கொண்டார் போல நடித்துத் தம்மை இகழும் பகைவரைத் தாமும் அவர்போலவே அவர் மகிழும் வண்ணம் அன்பு பாராட்டி மனத்தால் அவர் மீது கொண்ட நட்பு நாளும் கெட்டு  ஒழியுமாறு நடந்து கொள்வதே நன்று.
நட்பை முறித்துக்கொள்வதிலும் நாகரிகம் பேணவேண்டும்.
“ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல
 மரூஉச் செய்தியார் மாட்டும் தங்கு மனத்தர்
 விராஅய்ச் செய்யாமை நன்று.” ---நாலடியார்
மன உறுதி உடையவர்கள் நன்மைகள் செய்யும் மனம் உடையாருடன் சிலகாலம் சேர்ந்திருப்பதும் சில காலம் நீங்கி இருப்பதும்  செய்வார்களோ ? அப்படி நடந்து கொள்வதைவிட அவர்களிடம் நட்புக்கொள்ளாமல் விலகி இருப்பதே நன்று.


திங்கள், 26 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :828


திருக்குறள் -சிறப்புரை :828
தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. --- ௮௨௮
நல்லவர்போல் நடிக்கும் பகைவர்தம் கூப்பிய கைகளுக்குள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவ்வாறே பகைவர் அழுது விடும் கண்ணீரும் அத்தன்மைத்தே. நண்பர் இவர் ; பகைவர் இவரென முகக்குறிப்பால் அறிக.
“வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார் வாய்ச் சொல்.”---நாலடியார்.
தீவினை செய்வாருடைய நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள்; பெரியோர் வாய்ச்சொற்களை ஏற்றுப் போற்றுங்கள்.


ஞாயிறு, 25 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :827


திருக்குறள் -சிறப்புரை :827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். --- ௮௨௭
வில்லினது வளைந்த வணக்கம் எய்துவதற்குத் அணியமாதலால் அது எதிர்நிற்போர்க்குத் தீங்கு இழைக்கும்  அவ்வாறே பகைவர் வளைந்து வணக்கத்தோடு கூறும் சொற்களும் தமக்கு நன்மை தருவதாக் கருதக்கூடாது.
“நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
 அறியாமை என்று அறியல் வேண்டும்.” –சிலப்பதிகாரம்.
நெறி தவறி நடப்போர் தகாதவற்றைக் கூறினாலும் அவர்கள் அறியாமையால் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

சனி, 24 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :826


திருக்குறள் -சிறப்புரை :826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். --- ௮௨௬
நண்பர்களைப்போல் நல்லவை எடுத்துக்கூறினாலும் உள்ளத்தால் ஒன்றாத வஞ்சகர்தம் வாய்ச்சொல்லின்உண்மைத் தன்மை உடனடியாக உணரப்படும்.
“பேதையோடு யாதும் உரையற்க – பேதை
உரைப்பிற் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.” –நாலடியார்.
பேதையானவன் சொல்லவேண்டியவிடத்துச் சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லாமல்  மாறுபட்டுச் சொல்வான் ஆதலால் கூடுமானவரை அவனிடமிருந்து தப்பித்து நீங்குதலே நன்று.


வெள்ளி, 23 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :825


திருக்குறள் -சிறப்புரை :825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.--- ௮௨௫
உள்ளத்தால் ஒன்றிப் பழகாதவரை அவர் கூறும் யாதொரு சொல்லினாலும் தேர்ந்து தெளிதல் கூடாது.
”………….. ………… …………. வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு..” –நாலடியார்.
சிற்றறிவு உடையார்தம் நட்பு வானில் தவழும் முழுநிலவு நாள்தோறும் தேய்ந்து குறையுமாறு போலத் தானே குறைந்துவிடும்.

வியாழன், 22 மார்ச், 2018

“Dravidian languages may offer insights into Eurasian prehistory


“Dravidian languages may offer insights into Eurasian prehistory
Study Says They Originated 4500 Years Ago
Chennai: A study on the Dravidian language family by scientists at the Max Planck Institute for the Science of Human History in Germany indicates that it is approximately 4500 years old. A finding that corresponds with earlier linguistic and archaeological studies. A day after the result was published in the journal Royal Society Open Science. The authors of the paper . simon Greenhill and Annemarie Verkerk told TOI that the history of these languages was crucial for understanding the prehistory of Eruasia.”
“Scholars say Dravidians were natives of the Indian sub-continent who had been scattered throughout the country by the time the Aryans entered India around 1500BC.”
  For more information Pl. Read. Times of India. 23/03/18.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்தியா முழுமையும் திராவிடர்கள் (தமிழர்) பரவியிருந்தனர். திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றாலும் திராவிடமொழிகளின் தாயாகிய தமிழ் கால எல்லை வரையறுக்க முடியாத அளவு  தொன்மை வாய்ந்தது என்பதும் உறுதியாயிற்று.

திருக்குறள் -சிறப்புரை :824


திருக்குறள் -சிறப்புரை :824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.--- ௮௨௪
கண்டபொழுது முகம் மலர இனிமையாகப் பேசினும் மனத்தால் வஞ்சகத் தன்மைகொண்டாரை அறிந்து அச்சப்பட வேண்டும்.
“ அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம்.” –குறள்.—706.
தன்னை அடுத்துள்ள பொருளைத் தன்னுள் காட்டும் பளிங்கு போல ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.


புதன், 21 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :823


திருக்குறள் -சிறப்புரை :823
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.---- ௮௨௩
பல நல்ல நூல்களைக்கற்றுத் தேர்ந்திருந்தபோதும் அவற்றின் பயனாக மனப்பக்குவம் பெற்றுத் திகழ்தல் நற்பண்பு இல்லாதவர்களுக்கு இல்லை.
“ அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்”—நாலடியார்.
குற்றமற்றவர்கள் அறநெறியைப்பற்றி உரைக்கும் பொழுது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

செவ்வாய், 20 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :822


திருக்குறள் -சிறப்புரை :822
இனம்போன்று இனமல்லர் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.--- ௮௨௨
புறத்தே இனமான நட்புடையார்போன்று நடித்து உள்ளத்தால் ஒன்றாதவர் நட்பு. கள்ளத்தனம் கொண்ட மகளிர் மனம்போல உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக வேறுபடும். நட்பும் கற்பும் ஒரே தன்மை உடையவையே.
”பெருகுவது போல் தோன்றி வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் --- அருகெல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு. –நாலடியார்.
பக்கங்களிலெல்லாம் சந்தன மரங்களுடைய பெரிய தோப்புகளோடு கூடிய சாரல் மலைகள் உடைய நாட்டிற்கு அரசனே..! மனத்தால் ஒன்றாதவருடைய நட்பு வைக்கோல் போரில் பற்றிய நெருப்பைப்போல வளர்வது போலத் தோன்றி ஒரு பயனுமின்றிக் கெடும்.

திங்கள், 19 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :821


83. கூடாநட்பு
திருக்குறள் -சிறப்புரை :821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.—௮௨௧
உள்ளத்தால் ஒன்றாது தமக்கு வேறுஒருவர் நட்பு கிடைக்கும்வரை நட்புக்கொள்வாரைத் தக்க நேரம்பார்த்துத் தூக்கி எறிதற்குப் பயன்படும் பட்டடை ஆகும்.
(பட்டடை – பட்டறை = அடைகல்)
1.  கூடா நட்பு கேடாய் முடியும்.
2.  கூடாதவரோடு கூடாதே கூடங்க(ள்) மாடங்க(ள்) ஏறாதே.பழமொழிகள்.
”பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ்….”—தொல்காப்பியம். 1336.

                     பழமொழிகள் – கருத்தாழமும் சொற்கட்டும் கொண்டவை. கால வெள்ளத்தைக் கடந்து வாழும் தொன்மை இலக்கியம். தொல்காப்பியர் ஏழு வகை இலக்கியங்களுள் ஒன்றாக இதனை ”முதுசொல்”  (பழமொழி) என்று குறிப்பிடுவார்.



ஞாயிறு, 18 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :820

திருக்குறள் -சிறப்புரை :820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.--- ௮௨0
தனியாக வீட்டில் இருக்கும்போது நட்பாகப் பழகுதலும் பலரும் கூடியிருக்கும் அவையின்கண் பழித்துரைத்தலுமாகிய வஞ்சக இயல்பு கொண்டவரோடு எவ்வித தொடர்பு கொள்ளாமல் விலகி இருத்தல் வேண்டும்.
”இகழ்தலின் கோறல் இனிதே மற்றில்ல
புகழ்தலின் வைதலே நன்று. –நாலடியார்.
ஒருவரை வெறுத்து அவர் மனம் புண்படி வசைமொழிகளைக் கூறுவதைவிட அவரைக் கொன்றுவிடுவது நன்றாம் ; 

சனி, 17 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :819


திருக்குறள் -சிறப்புரை :819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.--- ௮௧௯
சொல்வது ஒன்று செய்வது வேறு என்று வஞ்சக நெஞ்சம் கொண்டவரோடு கொண்ட நட்பு நனவில் மட்டுமன்று கனவிலும் துன்பம் தருவதாகும்.
‘உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே” -----மதுரைக்காஞ்சி.
ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைப்பதாயினும் அதனை விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன் நெடுஞ்செழியன்.



வெள்ளி, 16 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :818


திருக்குறள் -சிறப்புரை :818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.--- ௮௧௮
தம்மால் செய்யமுடியும் ஒரு செயலைச் செய்ய இயலாதுபோல நடிப்பவர் நட்பினை அவர் அறிய ஏதும் சொல்லாமல் அவர்தம் நட்பினைக் கைவிட்டு விடல் வேண்டும்.
”செல்வம் பெரிதுடையார் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்.” –நாலடியார்
கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராய் இருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்புக்கொள்ள மாட்டார்கள்.


வியாழன், 15 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :817


திருக்குறள் -சிறப்புரை :817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். --- ௮௧௭
உதட்டளவில் நகைத்து நண்பராகப் பழகுவோரைவிடப் பகைவரால் வரும் பகைமை பத்துக்கோடி மடங்கு நன்றாம்.
“எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய் தொழிலாற் காணப்படும்.”----நாலடியார்.
பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாயினும் கீழ்மக்களை அவர்கள் செய்யும் செயல்களால் அறியலாம்.


புதன், 14 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :816


திருக்குறள் -சிறப்புரை :816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.--- ௮௧௬
அறிவில்லாதவரின் மிகச்சிறந்த நட்பை விட அறிவுடையாரின் பகைமை கோடி மடங்கு சிறப்பினைத்தரும்.
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
மாற்றுமைக் கொண்டவழி..” ---கலித்தொகை.
தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியிலே செல்லாமல்; அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.

செவ்வாய், 13 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :815


திருக்குறள் -சிறப்புரை :815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. – ௮௧௫
(செய்து ஏமம்)
நட்புச் செய்து வைத்தாலும் உற்றநேரத்தில் துணையாகாத கீழ்மக்கள்(தீயோர்) நட்பைப் பெறுதலின்  பெறாமை நன்று.
“கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும். –நாலடியார்.
மேன்மை நிறைந்த நூல்களை விரித்துரைத்தாலும் அவற்றைக் கருத்தில் கொள்ளாத கீழ்மகன் தன் மனம் விரும்பிய வழியேதான் செல்வான்.


திங்கள், 12 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :814


திருக்குறள் -சிறப்புரை :814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. --- ௮௧௪
துணையாக நிற்பதுபோல் நின்று போர்க்களத்தில் புகுந்தபோது கைவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரையைப்போன்று உறவாடும் நண்பர்களைவிடத் தனிமையே இனிமையுடையது.
”உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.—குறள்.798.
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும் அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

சனி, 10 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :813


திருக்குறள் -சிறப்புரை :813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.--- ௮௧௩
நட்பின் பெருமை அறியாது, நண்பர்களால் தனக்குக் கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர்களும் ; கொடுப்பாரை நோக்காது கொடுக்கும் பொருளின் அளவைக்காணும் பொருட் பெண்டிரும் ; பிறர் துன்பம் கருதாது அவர் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்துக் களவாடும் கள்வரும் ஒரே தன்மை உடையவராவர்.
” செய்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகல்மின் பொருள்மொழி நீங்கள்மின்.” –சிலப்பதிகாரம்.
செய்நன்றி மறவாதீர்; தீயவரோடு நட்புக் கொள்ளாதீர் ; பொய்ச் சான்று சொல்லாதீர் ; அறவோர் அவையை நீக்காது இருப்பீர்.

வெள்ளி, 9 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :812

திருக்குறள் -சிறப்புரை :812
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.--- ௮௧௨
(அறின் ஒரூஉம்)
தனக்குப் பயன் கருதி நட்புச்செய்து, பயன்பெற்றபின்பு விலகிச்செல்லும் தீயவர்களின் நட்பினைப் பெற்றாலும் இழப்பினும் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
” தெளிவிலார் நட்பிற் பகை நன்று சாதல்
விளியா வரு நோயின் நன்று….” நாலடியார்.
பண்பில்லாதவருடைய நட்பைக் காட்டிலும் அவருடைய பகை நல்லது ; தீராத கொடிய நோயைக் காட்டிலும் சாதல் நன்று

வியாழன், 8 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :811


82. தீ நட்பு
திருக்குறள் -சிறப்புரை :811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
குடித்தலில் கொண்டவேட்கை போல அன்பொழுகப் பழகினாலும் பண்பு இல்லாதவருடைய நட்பு, வளர்வதைவிடத் தேய்ந்து போதல் இனிமையுடைது.
“ இனநலம் நன்கு உடையராயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்..” –பழமொழி
கீழ் மக்கள், இனத்தின் நன்மை நன்கு உடையவராயினும் மனத்தால் நல்லவராக இருக்கமாட்டார்.

புதன், 7 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :810


திருக்குறள் -சிறப்புரை :810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.--- ௮௧0
, பலகாலம் பழகிய நண்பர்கள்  தவறு செய்தபோதும் அவர்களிடத்தில்,தாம் கொண்டிருந்த நட்பினின்றும் சிறிதும் மாறாத பண்பிற் சிறந்தோரைப் பகைவரும் விரும்புவர்.
“கடை ஆயார் நட்பிற் கமுகு அனையர் ஏனை
இடை ஆயார் தெங்கின் அனையர் தலை ஆயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் நட்பு. –நாலடியார்.
கீழ்த்தரமானவர்கள் பாக்கு மரத்தை ஒத்தவர் ; நடுத்தரமானவர்கள் தென்னை மரத்தை ஒத்தவர் ; முதல் தரமானவர்கள் எண்ணுதற்கு அருமையான பனை மரத்தை ஒத்தவர். பண்பிற் சிறந்த பழைமை உடையார் நட்புச் செய்தகாலந்தொட்டே உயிர்ப்புடன் தொடர்வதாம்.

செவ்வாய், 6 மார்ச், 2018


திருக்குறள் -சிறப்புரை :809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. --- ௮0௯
பலகாலம் நட்பறாது பழகிய நண்பர்களிடத்துக் குற்றம், குறைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் அவர்தம் நட்பினைப் போற்றுகின்றவரை இவ்வுலகம் பாராட்டும்.
“பிழை பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.---சிறுபஞ்சமூலம்.
பிறர் செய்த தவறைப் பொறுத்தல் பெருமை;   பிறர் செய்த தீமையை எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமை.

திங்கள், 5 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :808


திருக்குறள் -சிறப்புரை :808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.--- ௮0௮
( கேள்-இழுக்கம்; நாள் – இழுக்கம்.)
நண்பர்கள் செய்த பிழையினைத் தாமும் கேட்காது, பிறர் கூறினும் ஏற்றுக்கொள்ளாத நட்புரிமை உடையவல்லார்க்கு, அந்த நண்பர்கள் பிழைசெய்த  நாள் பயனுள்ள நாளாகும்.
“ காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி…” –புறநானூறு.
அன்பு பொருந்திய மனங்களை உடைய உம்மிடையே (திருமாவளவன் – பெருவழுதி) புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார் திரிவர், அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.



ஞாயிறு, 4 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :807


திருக்குறள் -சிறப்புரை :807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். --- ௮0௭
வழிவழிவந்த  அன்பிற்சிறந்த நட்பினையுடையவர்கள், நண்பர்கள் தமக்கு அழிவுதரும் செயல்களைச் செய்யினும் அவர்களிடம் தாம் கொண்டுள்ள அன்பிலிருந்து ஒருபோதும் நீங்க மாட்டார்கள்.
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.” ---நற்றிணை.
நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது உண்டு, நட்பைப் பேணுவர்.


சனி, 3 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :806


திருக்குறள் -சிறப்புரை :806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. --- ௮0௬
 நட்பின் எல்லையறிந்து ஒழுகும் தன்மையுடையார்  தம்முடன் பழைமையான நட்புரிமை கொண்டவரால் துன்பம் நேரிடினும் அவரது நட்பினைக் கைவிடமாட்டார்கள்.
“ கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும்.—நான்மணிக்கடிகை.
பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும்; பிறர் செய்த நன்மைகளைப் பெரிதும் நினைத்தல் வேண்டும்.


வெள்ளி, 2 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :805


திருக்குறள் -சிறப்புரை :805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.--- ௮0௫
நாம் வருந்தும் அளவுக்கு நண்பர் ஏதேனும் செய்து விட்டாராயின், அவரைக் கடிந்துகொள்ளாது அறியாமையினாலோ அல்லது நட்புரிமையாலோ அவ்வாறு செய்தார் எனக் கொள்ள வேண்டும்.
“ நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே.” –இனியவை நாற்பது.
நண்பரைப்பற்றிப் புறங்கூறாது வாழ்தல் மிகவும் இனிது.


வியாழன், 1 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :804


திருக்குறள் -சிறப்புரை :804
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.—௮0௪
தாம் செய்ய விரும்பிய ஒரு செயலைத் தம்மைக் கேட்காமலேயே, உரிமையுடன் நண்பர் செய்து முடிப்பாராயின், அத்தகைய நட்புரிமையை விரும்பி ஏற்பர்.
“ஒருவர் பொறை இருவர் நட்பு.” –பழமொழி.
ஒருவர் பொறுமை இருவர்க்கும் நட்பாம்.