தமிழமுது –249– தொல்தமிழர் இசை மரபு:109 நீட்சியும் - வீழ்ச்சியும்.
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 6.
யாழ் ப்பத்தரின் மூடியாகிய போர்வை, முன்பு தோலாயிருந்து பின்பு பாதுகாப்பிற்காக மரமாக மாற்றப்பெற்றது. யாழின் அமைப்பை அறிய விரும்புவார், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் மகனார் வரகுண பாண்டியனார் ஆராய்ந்தெழுதிய ‘பாணர் கைவழி’ என்னும் நூலைப் பார்க்க. அருட்டிரு விபுலானந்த அடிகளின் யாழ் நூல் அடிப்படையில் தவறியதால் முதற் கோணல் முர்றுங்கோணலாய்ப் போயிற்று.
உலகிற் சிறந்த இசை இந்திய இசையே, அதிர் சிறந்தது தமிழிசை. அதையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப் பண்களையும் கிளைப் பண்களையும் வகுத்தும், பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், கருநாட சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும் , நிலையை ஸ்தாய் என்றும் மொழிபெயர்த்திருத்தல் காண்க. கருநாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்த வேங்கிடமகியும் (17-ஆம் நூற்.) அதற்கு இலக்கியமாகத் தெலுங்கு கீர்த்தனைகள் பாடிய தியாகராசரும் (18-ஆம்,நூற்.) தமிழ் நாட்டில் வாழ்ந்தவரே.
கொட்டு,அசை, தூக்கு, அளவு என்னும் நாலுறுப்புகளையுடைய தாளத்தை, அகக் கூத்திற்குரிய பதினொரு பாணிகளும் புறக்கூத்திற்குரிய நாற்பத்தொரு தாளமுமாக, ஐம்பத்திருவகைப் படுத்தியிருந்தனர்.
ஏழிசைக்குரிய எழுத்துக்கள் முதற்காலத்தில் ஏழ் உயிர்நெடில்களாயிருந்தன. அவை நிறவாளத்தி என்னும் சிட்டையிசைக்கு ஏற்காமையால் சரிகமபதநி என்னும் எழுத்துக்கள் நாளடைவிற் கொள்ளப்பட்டன. இவை ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் வடசொற்களின் முதலெழுத்துக்களாகச் சொல்லப்படுகின்றன. இக்கொள்கை மத்தியமம் பஞ்சமம் என்னும் இரண்டிற்கே ஏற்கும். சமன் பட்டடை என்னும் இரு தென் சொற்களின் முதலெழுத்துக்களே ச, ப என்பது சிலர் கருத்து. இவையிரண்டுமின்றி இசையின்பத்திற்கேற்ற ஏழெழுத்துக்கள் நாளவைவிற் பட்டறிவினின்று தெரிந்துகொள்ளப்பட்டன என்பதே, பெரும்பால் தமிழிசைவாணர் கருத்தாம்.
................................................தொடரும்...............................