ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-31.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன். சூத்திர அமைப்பும் உரைப்போக்கும் :
இளம்பூரணர் இரண்டு சூத்திரங்களாக அமைந்தவற்றைப் பின் வந்தோர் ஒன்றாகவே எழுதி உரைகண்டனர். ; ஒன்றாகக் கொண்டதைப் பிரித்து இரண்டாக்கியதும் உண்டு.
சான்று :
எழுத்ததிகாரம் பிறப்பியலுள் (19. 20.) “எல்லா எழுத்தும் என்றும் ‘அஃதிவண் நுவலாது என்றும் தனித்தனியே இளம்பூரணர் பிரித்து உரை கண்டவற்றை நச்சினார்க்கினியர் ஒரே சூத்திரமாக்கி உரை எழுதுகின்றார். இத்தைகய எடுத்துக்காட்டுகள் பலவற்றைத் தரலாம்.
பல சூத்திரங்களை அடுத்து அடுத்து எழுதிக்கொண்டு “இவை உரை இயைபு நோக்கி ஒன்றாய் எழுதப்பட்டன.” என்று இளம்பூரணர் எழுதிச் செல்வதும் உண்டு ( சொல் : 173 –176 ; 223, 224 ; 337, 338, )
உவமைகள் :
இளம்பூரணர் தாம் உரையில் மிகச் சில உவமைகளையே எடுத்தாண்டுள்ளார். அவ்வுமைகள், கூறக்கருதிய பொருளை இனிது விளக்குகின்றன. எழுத்ததிகாரத்தில் (2)
“ சந்தனக்கோல் குறுகின விடத்தும் பிரப்பங்கோல் ஆகாது, அதுபோல இகர உகரங்கள் குறுகின விடத்தும் அவை உயிர் ஆகற் பாலன.” என்று தக்க உவமை கூறி விளக்குகின்றார்.
செய்யுளியலில் (79) “துள்ளலோசை கலிப்பாவிற்காம் என்றவாறு, துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை உயர்ந்து வருதல் ; கன்று துள்ளிற்று என்றாற்போலக் கொள்க.” என்ற பகுதியில் இனிய உவமை இடம் பெற்றுள்ளது. மேலும் பல உள. பாட வேறுபாடும் கருத்து வேறுபாடும் :
இளம்பூரணர் தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் ஆதலின், இவர் கொண்ட சில பாடங்கள், மிகப்பழமையானவை ; அப்பாடங்களே சிறந்தவை.
சில சொற்களில் இரண்டொரு எழுத்துகள் மாறிவிடுவதால், சூத்திரங்களின் பொருளே பெரிதும் வேறுபட்டுவிடுகின்றது. எனவே பாட வேறுபாடுகளில் கருத்துச் செலுத்தி உண்மையான பாடத்தைத் துணியும் கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. பாட வேறுபாடுகள் பொருளதிகாரத்தில் மிகுதியாகப் பொருளை வேறு படுத்திவிடுகின்றன. ஆதலின் சில பாட வேறுபாடுகளையும் அவற்றால் சூத்திரத்தின் பொருள் வேறுபடுவதையும் காணலாம்.
புறத்திணை இயலுள் (4)
“ மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.”
என்பது இளம்பூரணர் கொண்ட பாடம் ; இதற்கு நச்சினார்க்கினியர் “மறங்கடைக் கூட்டிய துடிநிலை” என்று பாடம் கொள்கின்றார்.
குடிநிலை என்ற பழைய பாடமே சிறந்தது என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி சான்றாக உள்ளது. அதில், வெட்சித்திணையில் மறக்குடியினது நிலைமையும் கொற்றவையின் நிலைமையும் கூறுவதைக்காணலாம்.................................... தொடரும்...........