தமிழமுது –222– தொல்தமிழர் இசை மரபு:82.
பத்துப்பாட்டு: சேர,சோழ, பாண்டியர் = பாட்டு + யாழ் + கூத்து.
பொருநராற்றுப்படை. கரிகால்பெருவளத்தான் மீது பாடப்பெற்றது. பாடியவர் -முடத்தாமக்கண்ணியார்.
“ பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன் தாள்
முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறிதிரிந்து ஓராது
ஆற்றுஎதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந.” -53 – 60.
பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல் :
பெருமைமிக்க செல்வத்தினையும் பெரும் பெயரையும் வலிய முயற்சியினையும் வெற்றி முரசு முழங்கும் படையினையும் கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கி ஒருங்கே அரசு வீற்றிருக்கும் தோற்றம் பெருஞ்சிறப்பை நல்குவதாகும். அதுபோல், கூத்தர்களுக்குத் தலைவனே...! நீ மிடற்றுப் பாடலைப் பாடுவதில் வல்லமை உடையாய்..! யாழ் இசைப்பதில் வல்லமை உடையாய்..! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய்..! பாட்டிசையும் யாழிசையும் கூத்தாட்டும் தம்முள் ஒத்து உன்னிடம் இருக்கும் காட்சி, அந்த மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது. பிறர் தம் மனத்தில் கொண்ட கருத்தினைக் குறிப்பால் அறிய வல்லவனே..! நீ, வழி அறியாமையினாலே வேறு வழி பற்றிப் போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்டலும் நீ, முற்பிறப்பிற் செய்த நல்வினையின் பயனே காண். ! புகழால் மேம்பட்டவனே... பிறர் புகழை அரசவையில் மேம்படுத்துபவனே..! நான் கூறுவதை விரும்புக் கேட்பாயாக,..! என்று பரிசில் பெற்று வந்த பொருநன், எதிரே வரும் பொருநனைக் கரிகால்பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் முகமாகக் கூறத்தொடங்குகிறான்.
(பீடு - பெருமை ; பெரும்பெயர் - உலகறிந்த புகழ். ; தாள் - முயற்சி ; நெறிதிரிந்து ஒராஅது - வழியைத் தப்பி வேறு வழியில் போகாது.)
................தொடரும்...............