ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-14.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-பெயர் ஆய்வு:
தொல்காப்பியர் தொல்காப்பியத்தை நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார். அந்நூலரங்கேறிய அவைக்குத் தலைமை வகித்தவர் பெரும்புலவரான அதங்கோட்டாசான் என்பவர். நூல் அரங்கேறும்போது இடையிடையே அதங்கோட்டாசான் வினாக்கள் எழுப்பினார். அவ்வாறு வினாவப்பெற்ற விணாக்களுக்கு ஏற்ற் விடைகளை ஐயந்திரிபில்லாமல் தொல்காப்பியர் கூறினார். முன்னைய செந்தமிழ் நூல்களை எல்லாம் முறைப்பட ஆராய்ந்து இயற்றமிழ் இலக்கண நூலைத் தொகுத்தமையால் தொல்காப்பியன் என்னும் பெய ரை விளங்கவைத்தார். “தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோனே.” என்று பாயிரத்தில் இடம்பெற்றுள்ளதால் இயற்பெயர் தெளிவாயிற்று. என்பார் முத்தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்..
பழமையான காப்பியக்குடியில் பிறந்தவன் என்றும் பொருள் கூறுவர்.“தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்பது தொல்காப்பியம் ; அதனை ஆக்கியோன் தொல்காப்பியன் எனப்பட்டான் ; தொல்காப்பியன் என்ற பெயர் வழக்கில்வர இயற்பெயரை மறந்துவிட்டனர் என்றும் கூறுவார் டாக்டர். சி. இலக்குவனார்.
நச்சினார்க்கினியர் ; தொல்காப்பிய எழுத்துச் சிறப்புப் பாயிர உரையில் தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும் அவர் தந்தையார் சமதக்கினி என்றும் கூறியுள்ளார்.
ஆசிரியராகிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவர்க்கு மைந்தர் என்றும் அகத்தியனார்க்கு மாணாக்கர் என்றும் கூறப்படுகின்றார் .இவற்றுள் முன்னையதற்கு ஆதரவு, உரையாசிரிய ரெல்லாருள்ளும் பின் வந்தவராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில் “தேவரெல்லாங்கூடி யாம் சேரவிருத்தலின் மேருந்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த பிறந்த குனரியர் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து ... பொதியலின்கண்ணியிருந்து, இராவணனைக் கந்தருத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி நீ சென்று குமரியாரைக்கொண்டு வருக எனக் கூறினர்” என உரைத்திருக்கும் கதையன்றி வேறில்லை.” என்று கூறுகின்றார், நாவலர்.ந.மு. வேங்கடசாமி நாட்டார். .............................................தொடரும்................................