தமிழமுது –239– தொல்தமிழர் இசை மரபு:99.
பேரியாழ் - பைதீர் பாணர்-
பத்துப்பாட்டு.
10. மலைபடுகடாம்:
“ அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேந்தவை ஏற்ப
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு
உயர்ந்து ஓங்கு பெருமலை ஊறுஇன்று ஏறலின் ......38 - 41.
பேரியாழினைத் தனக்குரிய நூல்களில் கூறிய இலக்கனமரபுகளில் பிறழாதவாறு இசைப்பதற்கு ஏற்றவகையில் ஆயத்தம் செய்துகொண்டு, இசையை எக்காலத்தும் கேட்கும் செல்வத்தையுடைய அரசர்களின் அவைக்களத்தில் அவர்கள் செவிகளால் துய்த்து மகிழும் வண்ணம், தாம் இசைக்கும் துறைகள் பலவற்றையும் அறிவு முதிர்ச்சியுற்ற, இளமை நீங்கிய, பாணர்கள் உயர்ந்து வளர்ந்த கற்கள் தொடரும் பெரிய மலைகள் வேறோர் இடையூறின்றி ஏறி வந்து இசைத்து முடிப்பர்.
(அருள்நெறி - யாழ் நூலில் கூறப்பட்ட நெறி ; பண்ணி - சமைத்து / திருத்தி.: துறை பல - வலிவு, மெலிவு, சமன் என்ற மூவிடத்தும் ஒவ்வொன்றில் ஏழு சுர முறை முடித்துப் பாடப்பெறும் 21 பாடல் துறைகள் ; பைதீர் பாணர் - கல்வி , இசையில் தொடக்க நிலை முடித்து, முதிர்ச்சி- புலமைத் திறத்தால் முற்றிய பாணர். )
............................ தொடரும் .....................................................