தமிழமுது –295 – தொல்தமிழர் இசை மரபு:155 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...!
“என்றும் இருக்க உளங்கொண்டாய்
இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடு இருப்பாய் நீ
ஒன்று பொருள் அஃதின்ப மென
உணர்ந்தாய் தாயுமானவனே.” -
என்று பாரதியால் தமிழ் இலக்கியத்தோடு இணைத்துக் காணப்பெற்ற பெருமைக்கு உரிய சான்றோர் தாயுமானவர். கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாயுமானவரின் படைப்புகள் நாயக்கர் காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை இனம் காட்டுபவை.
இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1452 என்ற அளவினதாகும். இவை 56 பகுதிகளாக அமைக்கப்பெற்றுள்ளன. இந்த 56க்கும் தலைப்புகள் தொடக்க அடி, நிறைவு அடி, யாப்பமைதி, பொருள்நலம் ஆகியன கருதி பாகுபடுத்தி வைக்கப்பெற்றுள்ளன. இவர் அகவல் பா, விருத்தப்பா, வெண்பா, கலித்துறை, கலிப்பா, வண்ணம் , சந்தம், ஆனந்தக்களிப்பு போன்ற பல வடிவங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
ஞானத்தமிழுக்கு இவர் ஓர் இணைப்புப் பாலம். திருமூலர் தொடங்கிய ஞானப் பெருவழிக்கு இவர் இடைத் துணையானவர். பாரதியின் ஞானத்திற்கும், பா வடிவத்திற்கும் இசைக்கோலத்திற்கும் இவர் முன்னோடி. பழமைக்கும் புதுமைக்கும் துணையாக நின்றதன்மூலம் இவர் ஓர் இலக்கிய இணைப்புப்பாலம்.
வேதத்தையும், சைவநெறியையும் தமிழையும் வடமொழியையும் இணைத்துப் போர்றிய பெரியவர் இவர். இவரின் பாடல்களில் காணப்படும் அருள் மழையும் சொற்செறிவும் பொருள்நலமும் தமிழிலக்கியத்தின் வளமைக்கு மேலும் மெருகூட்டுவன. சித்தர்கணம் என்ற பாடலில் தமிழையும் தமிழ் நெறியையும் அவர் சிறப்பித்துக் காட்டும் தனித்திறம் இனிமை பயப்பது.
“கன்னல் அமுதெனவும் முக்கனியெனவும் வாயூறு
கண்டெனவும் அடியெடுத்துக்
கடவுளர்கள் தந்ததல அழுது அழுது பேய்
கருத்தில் எழுகின்றவெல்லாம்
எனதறியாமை யறிவென்னுமிரு பகுதியால்
ஈட்டுதமிழ் என் தமிழினுக்கு
இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு
இருத்தல் இத்தமிழையே
சொன்னவன் இனியானவன் முத்தி சித்திகளெல்லாம்
தோய்ந்த நெறியே படித்தீர்
சொல்லுமென அவர் நீங்கள் சொன்ன அவையிற் சிறிது
தோய்ந்த குண சாந்தன் எனவே
மின்னல் பெறவே சொல்ல அச்சொல் கேட்டு அடிமை மனம்
விகசிப்ப தெந்தநாளோ
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
சித்தகச் சித்தர்கணமே” -
தமிழால் இறை ஞானத்தை வளைக்க முடியும், அந்த ஞானத்தைக் கேட்டு உள்ளம் பெருமிதம் கொள்ள முடியும் என்பதை இப்பாடல் தெள்ளிதின் எடுத்துரைக்கின்றது.
.........................................தொடரும்.............................