தமிழமுது –272– தொல்தமிழர் இசை மரபு:132. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.
சுந்தரர் செந்தமிழ்:
ஆலாலசுந்தரர் ஆழ்ந்தகன்ற கல்வியின் திறம் போற்றுதற்குரியதாம். கல்வி கற்பார்க்கு அதில் ஓர் இன்பம் தோன்றுதல் வேண்டும் அஃதின்றேல் கல்வியில் உண்மையான ஈடுபாடும், அதனாற் கல்வி நிரம்புமாறும் உளவாகா.
“தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.” (குறள்- 399.)
“ நவில்தொறும் நூல் நயம் போலும்.” (குறள்-783.) என்று தெய்வப்புலவரும் கூறுவர். நம் சுந்தரர்க்குக் கல்வி எங்ஙனம் இனித்தது என்பது , இன்பமே உருவாகிய இறைவனைக் குறித்து, அவர்....
“கற்ற கல்வியினும் இனியானை”. எனக் கூறுவதனால் இனிது விளங்கும்.
இங்ஙனம் பொதுப்படக் கல்வியை உவமங் கூறியதன்றி
“பண்டைத்தமிழ் ஒப்பாய்.” என்றும்
”பண்ணார் இன்றமிழாய் பரமாய பரஞ்சுடரே.”என்றும்
சிறப்பு வகையால் தமிழின் இனிமையை இறைவன் இன்பொடு சார்த்தி உரைத்தலின் தமிழ்க் கல்வியானது அவர்க்கு எல்லையில்லா இன்பினை அளித்தாகல் வேண்டும். திருக்குறள், நாலடியார் முதலிய பழந்தமிழ் நூல்களில் நம்பியாரூரார்க்கிருந்த பயிற்சியும் மதிப்பும் அவர், திருநெல்வாயில் அரைத்துறைப் பதிகத்தில்
“அகரமுதலின் எழுத்தாகி நின்றாய்.”
“பொறி வாயிலிவை ஐந்தனையும் அவியப்பொருது உன்னடியே புகுஞ்சூழல் சொல்லே.”
“பிறவிக்கடல் நீந்தியேறி அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே.”
“உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி.”
எனத் திருக்குறளில் ஒரு நான்கு பாக்களின் கருத்தையும்
“மணக்கோலமதே பிணக்கோலமதம் பிறவி.”
என நாலடிச் செய்யுள் ஒன்றின் கருத்தையும் தழுவிப்போற்றுதலான் அறியப்படும். திருத்தொண்டத் தொகையானது அடியார்களீன் வரலார்றை விளங்க உரைத்திலதேனும் வந்தொண்டர்ப் பெருந்தொகை நன்கனம் அறிந்திருந்தார் ஆதலின் தேற்றம். திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகம்....
“ ஏனாதி நாதன்தன் அடியார்க்கு மடியேன் “
“ முருகனுக்கும் உருத்திர பசுவதிக்கும் அடியேன்.”
எனச் சிலரைப் பெயரளவிலும்
“கடவூரிற் கலையன்றன் அடியார்க்கும் அடியேன்.”
அலைமலிந்த புனன்மங்கை ஆனாயற் கடியேன்.”
எனச் சிலரை அவர்கள் நிலவிய ஊரொடு சார்த்தியும்
“இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்.”
”அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்”
எனச் சிலரை அவர்கள் கொண்ட படைக்கலம் முதலியவற்றால் விசேடித்தும்,
“மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்.”
“வார்கொண்ட வனமுலையாளுமை பங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்.”
எனச்சிலரை அவர்கள் புரிந்த திருத்தொண்டு, செயல் என்பவற்றோடு கூட்டியும் மற்றும் சிலரை வேறு சிற்சில வகையாற் குறிப்பிட்டும் அவர் பரவியுள்ளார். மற்றும் ....
“ இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்.”
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்.”
நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்.”
என்பவற்றில் கொடுக்கப்பெற்றுள்ள அடைமொழிகள் அவ்வடியார்கள் வரலாற்றின் உயிர்நிலையாய உண்மைகளைத் தெரிவித்தல் கண்கூடு. திருத்தொண்டர்களின் வரலாறுகள் சுந்தரரால் நுண்ணிதின் ஆராயப் பெற்றவை என்பதற்கு அவர் திருப்பாட்டுக்களில் மற்றும் பல சான்றுகள் உள்ளன.
.....................தொடரும் .........................................