தமிழமுது –264– தொல்தமிழர் இசை மரபு:124. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
திருஞானசம்பந்தர்:
“சம்பந்தர் சீர்காழிப் பதியிலே சிவபாதவிருதயர் என்னும் மறையவர்க்கும் அவர் பத்தினியார் பகவதியார்க்கும் அவர்கள் ஆற்றிய தவத்தின் பயனாகத் தோன்றி, மூன்றாம் ஆண்டிலேயே உலகமீன்ற அன்னையாகிய உமைப்பிராட்டி அளித்த ஞானப்பாலையுண்டு சிவஞான சம்பந்தராகி, இறைவனை நேரிற்கண்டு பதிகம் பாடிப்பரவி அன்று முதற் சிவபிரான் கோயில்கொண்டுள்ள திருப்பதிகள் தோறும் சென்று தமிழிசைத் திருப்பதிகங்கள் பாடியும் பற்பல அற்புதங்கள் நிகழ்த்தியும் சைவசமயத்தை நிலைநாட்டிய பெரியார். இவரது வரலாறு பெரியபுராணத்தில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது.
இவரும் சமய குரவருள் இவர் காலத்திருந்த திருநாவுக்கரசரும், சிறிது பிற்காலத்திருந்த சுந்தரமூர்த்திகளும் பாடிய தமிழ்ப் பதிகங்கள் தேவாரம் என்னும் பெயருடன் திகழ்கின்றன. தேவாரம் முழுவதும் இசைப்பாட்டாகும் என்பது அவற்றிற்குப் பண் வகுக்கப்பெற்று அம்முறையே தொன்று தொட்டுப் பாடப்பெற்று வருதலின் அறியலாகும். தேவாரம் என்ற பெயரும் கடவுளைப் பற்றிய இசைப்பாட்டு என்னும் பொருளதே. தே - தெய்வம் ; வாரம் என்பது தெய்வப்பாடல், இசைப்பாட்டு, சொல்லொழுக்கமும் இசையெழுக்கமும் உடைய பாடல் என்னும் பொருளதாகும்.
இனி இசைக்குத் தாளம் இன்றியமையாததென முன்னர்க் கூறினோம். ஞானசம்பந்தர், தமக்குச் சிவபிரானளீத்த பொற்றாளத்தைக் கையிற்கொண்டு பாடிவந்தவர். “நாளும் இன்னிசையாற்றமிழ் பரப்பும் ஞனாசம்பந்தர் என்று கூறியிருப்பது அறியற்பாலது.
“காழிவரும் பெருந்தகையார் கையில் வருந்
திருத்தாளக் கருவிகண்டு
வாழிதந் திருமுடிமேற் கொண்டருளி
மனம் களிப்ப மதுரவாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசை வண்
டமிழ்ப் பதிகம் எய்தப்பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைகாப்புச் சாத்துநின்றார்.”
என்றார் அருண்மொழித்தேவரும் மற்றும் பாணர்குலத் தோன்றலாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தர் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து வந்ததும் அவரது வேண்டுகோளின்படி பதிக இசை யாழில் அடங்காமை காட்டுதற்காக ‘மாதர் படிப்பிடி’ என்னும் பதிகம் சம்பந்தரால் பாடப்பெற்றதுமாகிய வரலாறுகளும் தேவாரப்பதிகங்கள் இசைப்பாட்டுக்கள் ஆதலை வலியுறுத்தும்.
......................................தொடரும் ...........................................