ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-6.
தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - திறனுரை:
முத்தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்.
”நிலந்தரு திருவிற்.........எழுத்துமுறை காட்டி.” நிலந்தரு திருவிற்பாண்டியன் என்பது இயற்பெயரன்று ; இயற்பெயர் சொல்லாத ஒரு சிறப்பு மரபு தமிழகத்து இன்றும் உண்டு. நிலந்தரு திரு எனபது ஆளும் அரசர்க்குரிய இயல்படை. :போகம் வேண்டிப் பொதுச்சொற் பெறாஅது இடஞ்சிறிதென்னும் ஊக்கந்துரப்ப” (8) என்று புறநானூற்றில் இடம் பெருக்கும் அரசப்பற்றைக் குறிப்பர் கபிலர். நிலந்தரு திருவின் நெடியோய்” (22) எனப் பதிற்றுப்பத்தில் சேரவேந்தனும் குறிக்கப்படுவன்.
அதங்கோட்டாசான் என்பதும் இயற்பெயரன்றுு ; ஊரும் தொழிலும் இணைந்த பெயர். இதுவும் இயற்பெயர் சொல்லாச் சிறப்பு மரபுடையது.பட்டினத்தடிகள், மதுரைக் கணக்காயனார், காரைக்காலம்மையார், மதுரை வேளாசான் இவை ஒப்பு நோக்குக. இவ்வாசான் அறம் சொல்லும் செந்நாவுடையவர், அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளைக்கூறும் மறையை நன்கு கற்றுத் தெளிந்தவர். கரைதல் - அறத்தின் பக்கம் வாருங்கள் ஒழுகுங்கள் என்று எல்லாரையும் அழைத்தல். கலங்கரை விளக்கம் என்பது காண்க. அரம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனையும் குறிக்கும் என்பதற்கு,
“அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடி.” என்ற திருவாசகமும் ஒரு சான்றாதல் கொள்க.
பாண்டியனும் ஆசானும் அவையப் புலவர்களும் வினவிய சிக்கல்கள் எல்லாம் நீங்கும் வகை ஆராய்ந்தார் தொல்காப்பியர். சில இலக்கணங்கள் பல இயல்களில் வந்திருந்தாலும் மயக்கம் தோன்றாதபடி தாம் வகுத்த வகுப்பு முறைகளை மேற்கோள்கள் ; சான்றுகள் தந்து தெளிவித்தார். எழுத்துமுறை - நூலை எழுதிய அமைப்பு முறை காட்டி - எடுத்துக்காட்டுக்கள் தந்து, தெரிந்து - சிக்கல்களை எப்படி விளக்குவது என்று தொல்காப்பியர் ஆராய்ந்து அறிந்து, தெரிந்து அதற்கேற்ப எழுத்துமுறை காட்டி என இயைக்க. ....................................தொடரும்..............................