தமிழமுது –269– தொல்தமிழர் இசை மரபு:129. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.
பக்தி இலக்கியங்கள்: சைவ சமய குரவர்கள் நால்வரும் அற்புதங்கள் பல நிகழ்த்திய பெருமையுடைவர்கள்் நால்வரும் நால்வகை நெறிகளை மேற்கொண்டு வீடுபேறு பெற்றவர்கள். திருநாவுக்கரசர் தாச மார்க்கத்தையும்், திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்தையும், சுந்தரர் சக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் சன்மார்க்கத்தையும் கொண்டனர்.
”மூவர் முதலிகள்’ எனும் சிறப்பினைப் பெற்றவர்கள் பாடிய பாடல்கள் தொகை 1,03,000 என்பர். அனால் தற்போது கிடைப்பவை; திருஞானசம்பந்தர் பதிகங்கள் - 384; திருநாவுக்கரசர் - 310 ; சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 100. ; புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையும் சேர்த்து. 796 பதிகங்களும் 8250 பாடல்களும் ஆகும்.
திருநாவுக்கரசர் திருப்பதிகள் தோறும் விருப்புடன் சென்று பதுகம் பாடியும் உழவாரப் பணிபுரிந்தும் வந்தார். திருப்பெண்ணாகடம், தில்லைத்திருப்பதி, சீர்காழி, நல்லூர், திருப்புகலூர், திருவீழிமிழலை,பழயாறை, திருக்காளத்தி,திருவையாறு, திருப்பூந்துருத்தி , திருவொற்றியூர், முதலிய பல சிவத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றித் துதித்தார்.
“ மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.” என்று
“நெஞ்சமே! சிவபெருமானுடைய திருவடி நிழல் மாசில் வீணையின் நாதமும் ; மாலையில் தோன்றும் நிலவின் குளிச்சியும் ; தென்றலின் சாயலும்; இளவேனிலின் மாட்சியும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் ; எனவே அப்பெருமானது திருவடிகளை எப்பொழுதும் சிந்தித்திருப்பாயாக.
“ இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார்
வளமை போய்ப் பிணியோடு வருதலால்
உளமெலாம் ஒளியா மதி யாயினான்
கிளமையே கிளையாக நினப்பனே.”
ஒளிவடிவாகி ஞானமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே! இளமை கைவிட்டு நீங்குதலும் மூப்பு என்பது தன் பழைய வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு வருதலால், தேவரீரையே உண்மையான உறவாக எண்ணி மகிழ்வேன். இவ்வாறு இறைவன் அருள் பெற்று அவர்பாடிய பாடல்கள் உயர்ந்த உணர்வால் உள்ளம் உயரும் என்னும் கருத்தாகப் பாடித்துதித்து இறைஅருள் பெறலாம் எனும்படி அமைந்திருக்கக் காணலாம்..
இறுதியாகக் கூறுவதாவது திருவைந்தெழுத்தின்பால் நாவுக்கரர்க்குள்ள உறுதியான பற்றாகும். பாவத்தை அறுப்பதும், நடுக்கத்தைக் கெடுப்பதும், நலமிகக் கொடுப்பதும், ஞானமாவதும் கல்வியாவதும் நன்னெறியாவதும் எல்லாம் அத்திருமறையே என்கிறார் அவர்.
“ நச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நான் என்ற காழடுமே,” .....................தொடரும்...............................