ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-32.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
இளம்பூரணருக்குப்பின் :
தொல்காப்பியம் பயில்வோர் , எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையையும் ; சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் ; பொருளதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் (முன் ஐந்து இயல்கள்) பேராசிரியர் (பின் நான்கு இயல்கள்) ஆகியோர் உரைகளையும் விரும்பிக் கற்பது வழக்கம், இவ்வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. இவ்வுரைகள் மிகுதியாகப் பயிலப்பட்டு வருவதால், தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்ட இளம்பூரணர் உரை வழக்கிழந்தது ; பல ஆண்டுகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து வந்தது.
இளம்பூரணர் உரை செல்வாக்கு இழந்து, தொல்காப்பியம் கற்போர் பார்வையிலிருந்து விலகிப் பிந்தங்கிவிட்டதற்குக் காரணம் சில உண்டு,
இளம்பூரணருக்குப்பின் உரை கண்டோர் அவரது கருத்துகள் யாவற்றையும் எடுத்துத் தம் உரைகளுள் பெய்து கொண்டு தம் தம் காலத்திற்கு ஏற்ற புது விளக்கங்கள் பலவற்றைத் தந்து உரையை விரிவுபடுத்தினர், இதனால் இளம்பூரணர் உரை பிந்தங்கிவிட்டது.
வடமொழிக்கும் வடமொழி கருத்திற்கும் இளம்பூரணருக்குப்பின் சிறந்த வரவேற்பு ஏற்பட்டது. தமிழ் ஒன்றே பயின்று தமிழ் மரபு பிறழாமல் இளம்பூரணர் எழுதிய உரை இரு மொழிப் புலமைப் பெற்றவர் இயற்றிய உரைகளுடன் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை.
இளம்பூரணர் உரை இன்று மீண்டும் கற்றவர் போற்றும் சிறப்பைப் பெற்று வருகிறது. தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்ன கூறினார் என்று அறியும் விருப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தொல்காப்பியத்தின் பல்வேறு உரைகளை ஒப்பிட்டு நோக்கி ஆராய்பவரும், உண்மை உரை கண்டு தெளியும் ஆர்வம் உடையவரும் தமிழ் மொழிக்குத் தமிழ் மரபு அறிந்து எழுதிய உரையே சிறந்தது என்று எண்ணுபவரும் இளம்பூரணர் உரையைப் போற்றிக் கற்று வருகின்றனர்.
சான்றாக :
செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு “ஔம் நாடு யாது என்றால். தமிழ் நாடு என்றல்” என்பதை உதாரணம்காட்டுகின்றார். (தொல் சொல் -13.) தமிழ் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை அறியும்போது எல்லையற்ற மகிழ்ச்சி பிறக்கிறது.
...........சேனாவரையர் ........தொடரும் .........................................................