புதன், 15 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-37. சேனாவரையர்: மு.வை.அரவிந்தன்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-37.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- சேனாவரையர்: மு.வை.அரவிந்தன். 

                          

                        சேனாவரையர், இளம்பூரணர் கொள்கைகளை ஐம்பதிற்கு மேற்பட்ட இடங்களில் மறுத்து, வேறு உரை கூறுகின்றார். இளம்பூரணரை உரையாசிரியர் என்றே எங்கும் குறிப்பிடுகின்றார். 

                             உரையாசிரியர் கருத்தை மறுக்கும்போது, போலி உரை என்றும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார் என்றும் அவர்க்கு அது கருத்து அன்று என்றும , நூலாசிரியருக்குக் கருத்து கருத்து அன்மையின் உரையாசிரியருக்கும் அது கருத்து அன்று என்றும் கூறி மறுத்துச் சேனாவரையர் தம் கருத்தை நிறுவுகின்றார்.  

                     இவற்றை உற்று நோக்கும்போது, சேனாவரையர் காலத்தில் இளம்பூரணர் உரைக்குப் போலியாக வேறு உரை ஒன்று இருந்ததோ என்ற ஐயம் எழாமல் இல்லை. இன்றுள்ள  இளம்பூரணர் உரையில் இரண்டு இடங்கள் (66, 114 ) சேனாவரையர் உரையாசிரியர் உரையாகக் குறிப்பிடும் பகுதிகள் இல்லை. சில இடங்களில் (242, 285, 403) என்பாரும் உளர் என்று பெயர் கூறாமல் சுட்டப்படும் பகுதி இளம்பூரணர் உரையில் காணப்படுகின்றன.  

                      சேனாவரையர் காலத்தில் (இளம்பூரணர் உரை தவிர) வேறு சில உரைகளும் வழங்கிவந்தன என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. 

                                        சேனாவரையர் நன்னூலார் கருத்துகளைத் தம் உரைகளில் ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றார். ‘புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உள எனக் கொள்க’ (452) என்ற சேனாவரையர் கூறுவது 

 பழையன கழிதலும் புதியன புகுதலும்  

 வழுவல கால வகையி னானே “_ நன்.(462) என்ற நன்னூல் சூத்திரத்தை நினைவூட்டுகின்றது. மேலும் சேனாவரையர் தம் காலத்து மக்கள் பேசி முறையை பல இடங்களில் குறிப்பிடுகிறார். சேனாவரையர் காலத்து நாகரிகம் ,பண்பாடு ஆகியவையும்  நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுகளையும். அவர் நெஞ்சில் பதிந்த நிகழ்ச்சிகளையும், ஊர்கள் குறித்தும்  அறநெறிகள்  பற்றியும்  மகளிர் பெருமையும் சாதிகள், போர்ச்செய்திகள். கலைகள் . உழவுத்தொழில் குறித்தும் ஆடைகள், அணிகலன்கள் குறித்தும் பேசியுள்ளார். 

 சேனாவரையர் மக்களோடு  நெருங்கிப் பழகியர் என்பதையும் உலகத்தோடு ஒட்ட ஒழுகியவர் என்பதையும் அறிய முடிகின்றது. 

உரையாசிரியர் பேராசிரியர் ....................................தொடரும்....................