செவ்வாய், 16 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-11. தொல்காப்பியர் - அகத்தியர் மாணவரா..?

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-11.  

               தொல்காப்பியர் வரலாறு 

       தொல்காப்பியர் - அகத்தியர் மாணவரா..? 

               நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 

                          ஆய்வுரை -பகுதி -4   

மற்றொரு சாரார் அகத்தியர் பெயரினர் பலரெனக் கூறுவதுடன் தலைச்சங்கத்து அகத்தியர் இருந்தாரென்பது தவறு என்றும் நக்கீரனார்க்கு இலக்கணம் அறிவுறுத்துவராகத் திருவிளையாடற் புராணம் கூறுகின்ற அகத்தியரொருவர் கடைச்சங்க நாளில் இருந்தவரென்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்தம் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் காட்டப்படவில்லை. ஒரே பெயருடைய பலர் ஒரு பெற்றியே நிகரற்ற பெருமை வாய்ந்திருந்தனர் என்பது புதுமையாகத் தோற்றினும் அங்ஙனம் நிகழ்தல் கூடாதென்பதில்லை. எனினும் அவர் ஒருவரல்லர் என்பதற்குச் சான்று இன்றியமையாத தன்றோ? எந்நூல்களின் வாயிலாக அகத்தியர் என்னும் பெயரை நாம் அறிகின்றோமோ அந்த நூல்களனைத்தும் அகத்தியரை ஒருவராகவே முதலியன கூறுகின்றன. கோதாவரி மருங்கிருந்த அகத்தியரும் பொதியிலகத்தியரும்  வேறல்லரென்பது இராமாயணத்தால் அறியப்படும் 

 “நீண்ட தமிழாலுககை நேமியினளந்தான்”   

 ”தழற்புரை சுடர்கடவுள் தந்ததமிழ் தந்தான்.”  

 “என்றுமுள தென்றமி ழியம்பியிசை கொண்டான் என 

 அகத்தியப் படலத்துக் கம்பர் கூறுமாறுங் காண்க. மற்றும் அவர்விந்தமெனும் விண்டோய் நாகமது நாகமுற நாகமென நின்றமையும்ஈசனிகராயுலகு சீர் பெற விருந்த மையும் கூறுதலும் கருதற்பாற்று. அகத்தியர் பலரென்பார், முன்னுள்ள நூலாசிரியர் பலரும் பெயரொருமையால் மருண்டு அகத்தியரொருவரெனக் கொண்டு வழுவி விட்டரெனக் கூறுங்கடப்பாடுடையராகின்றனர். அஃது எவ்வாறாயினும் ஆகுக. இராம, இராவணப் போருக்கு முன்னரே அகத்தியர் பொதியிலின் கண் இருந்தனரென்பதையும் நமக்குக்கிடைத்துள்ள ஆதரவுகளனைத்தும் வலியுறுத்துகின்றன, காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த காந்தன் என்னும் சோழ மன்னன் அரசர் குலத்தைக் களைதலையே நோன்பாகக் கொண்ட பரசுராமன் த்ன்னொடு போர்குறித்து வருதலையறிந்து அகத்திய முனிவரைச் சரணடைந்தானென்று மணிமேகலைக் காப்பியங் கூறுவதும் . அகத்தியர் இராவணனைவென்று போக்கியதாகத் தொல்காப்பிய உரையிலும் மதுரைக்காஞ்சி உரையிலும் நச்சினார்க்கினியர் கூறுவதும் போல்வன எல்லாம் இக்கருத்தை அரண் செய்து நிற்றல் காண்க. ...........................................தொடரும்......................................