தமிழமுது –213– தொல்தமிழர் இசை மரபு:73.
7. அகநானூறு : விளரிப் பண்ணிசை எழுப்பிய வண்டுகள்.
”முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர்சிதர்ந்து உகுப்ப
பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண்கோல் அறைகுறந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்குசினை நறுவீ கோங்குஅலர் உறைப்ப
துவைத்து எழுதும்பி தவிரிசை விளரி
புதைத்து விடுநரம்பின் இம்மென இமிரும்
ஆன்ஏ முற்ற காமர் வேனில் .” --வடமோதங்கிழார், 317: 6 – 14.
முருக்க மரத்தின் மலர்களில் தேனை உண்ணும் வேட்கை கொண்ட வண்டுகள் பாய்ந்து வீழ்ந்து கிண்டிய காரணத்தால் முதிராத பூவிதழ்கள் உதிர்ந்து வீழ்ந்தன ; பொன்னால் செய்யப்பட்ட கன்னத் தட்டுகள் அழகு பெறுமாறு மெல்லிய வெள்ளிக் கம்பியினை அறுக்கும்போது அதன்மேல் உதிர்கின்ற துகள்களைப்போல, கோங்கின் மலர்கள் பொலிவு பெறுமாறு அம்மலர்களின்மீது ஒலிக்கின்ற வண்டுகள் தேனை உண்ணுந்தோறும் குரவமரத்தின் ஓங்கி உயர்ந்த கிளைகளில் மலர்ந்துள்ள மலர்களினின்றும் பூந்துகள்கள் உதிர்ந்து வீழ்ந்தன ; விளரி நரம்பின் ஒலி போன்று ‘இம்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு வண்டுகள் அம்மலர்களினின்றும் பறந்தோடின, இவ்வாறாக ஆனிரைகள் இன்பமுற்ற அழகிய வேனிற்காலமும் வந்துசேர்ந்தது.
(சிதர் - வண்டு.; சிதர்ந்து - கிண்டி. ; பொன் செய் கன்னம் - பொன்னாலான தட்டு.; துவைத்து - ஒலித்து ; இம் - ஒலிக்குறிப்பு ; இமிர்தல் - ஒலித்தல் ; ஆன் ஏமுற்ற - இன்பமுற்ற ஆனிரை.; காமர் - அழகு.; அவிர் - ஒளி. ; ததைதல் - செறிதல் ; வீ- மலர்.)
.....................................................தொடரும் ..........................................