ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-22.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
........என்று கூறி வைத்து, எழுத்து வரையறை கொண்டு அந்நாற் சீரடியையே குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என் ஐவகைப்படுத்துரைத்தனர். இது கட்டளையடி எனப்படும். சங்கச் செய்யுட்களிலோ இக்கட்டளையடிக்கு இலக்கியம் காணுமாறில்லை. சங்கச் செய்யுள் பலவற்றையும் ஆராய்ந்து தொல்காப்பியத்திற்கு உரௌ வகுத்த பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘ஆங்ஙனம் விரிப்பின் என்னுஞ் சூத்திரவுரையில் ‘ “சிறப்புடைய கட்டளையடி சான்றோர் செய்யுளுட் பயின்று வரல் வேண்டும் பிறவெனின், இந்நூல் செய்த காலத்தில் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயின்று வரச்செய்யுள் செய்தாரென்பதும் இச்சூத்திரங்களாற் பெறுதும் ; பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃது ஆதாகலின் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க” என உரைத்தனர்.
இங்ஙனம் கடைச்சங்க நாளிலேயே தொல்காப்பியர் கூறியன இறந்து பட்டனவும், கூறாதன தோன்றியனவுமாக உள்ளவை சாலப்பல. அவற்றை விரிப்பிற் பெருகும். இவற்றிலிருந்து கடைச்சங்க நாட்குச் சில பல நூர்றாண்டுகளின் முன்பே தொல்காப்பியம் தோன்றியதெனல் பெறப்படும். கடைச்சங்க நாளின் முன்பே தொல்காப்பியர் இருந்தாரெனக் கொண்டாருள் ஒரு சாரார், இலங்கைத் தீவின் வரலாற்றாற் பெறப்படும் கடல்கோள் பலவற்றுள் கி.மு. 306 இல் நிகழ்ந்த மூன்றாங் கடல்கோட்குச் சிறிது முன்னே தொல்காப்பியம் இய்ற்றப்பெற்றதெனவும். அலெக்சாந்தர் என்னும் கிரேக்க வேந்தன் இந்தியாவின் மேற் படையெடுத்து வந்தபொழுது உடன் போந்த கிரேக்க வான நூலாசிரியரால் கொண்டு வரப்பட்ட ‘ஹோரா’ என்னும் மொழி தொல்காப்பியத்துள் ‘ஓரை’ எனத் திரித்து வழங்கப்படுதலின் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதெனல் போதரும் எனவும் கூறுவர்.
மற்றும் ஒருசாரார் பாணினியால் எடுத்துக்காட்டப்பெற்ற வடமொழி இலக்கணவாசிரியர் அறுபத்து நால்வருள் முதல்வனாகிய இந்திரனாற் செய்யப்பட்ட ‘ஐந்திரம்’ என்னும் நூலினைச் சுட்டி ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப் பனம்பாரனார் பாயிரத்துள் ஓதுதலின் பாணினியின் காலமாகிய கி.மு. 350க்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதாகும் என்பர்.
ஓரை என்னும் தமிழ்ச்சொல்லே ‘அரிசி’ முதலிய சொற்கள் போன்று கிரேக்க மொழியிற் புகுந்ததாமெனக் கருதற்குப் பல காரணங்கள் இருத்தலானும், தொல்காப்பியர் பாணினிக்குப் பின்னிருந்தவராயின் வடமொழியில் மிகச்சிறப்புடையதாகிய பாணினீயத்தை நன்கு கற்று, ஓர் பகுதியிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்து அதன்கண் அடக்கும் அந்நூல் முறையை மேற்கொண்டு தாமும் தமது நூலின்கண் பாணினீயம் நிறைந்த என்னாது ‘ஐந்திரம் நிறைந்த’ எனக் கூறியிருப்பதனால் அவர் பாணினீயத்தை உணர்ந்தவரல்லர் என்பது பெறப்படுதலானும் தொல்காப்பியர் பாணினிக்கு முன்னிருந்தாரவர் என்னும் கொள்கையே வலியுற நிற்கும். பாணினியின் காலம் கி.மு. 300 என்றும்.......
.................................. தொடரும்...................................