தமிழமுது –217– தொல்தமிழர் இசை மரபு:77.
8. புறநானூறு -- இசை மரபை மறந்த பாணன் :
இந்நூலின் 149 ஆம் பாடலைப் பாடியவர் வன்பரணர் இவர் கோப்பெருநள்ளியின் பரிசிலைப் பெற்று அவனுடன் இருந்துவந்தார்; அப்போது பாணர் காலையில் பாடவேண்டிய மருதப்பண்ணுக்குப் பதிலாக மாலையில் பாடவேண்டிய செவ்வழிப்பண்ணைப் பாடினர் ; மாலையில் பாட வேண்டிய செவ்வழிப்பண்ணுக்குப் பதிலாகக் காலையில் பாடவேண்டிய மருதப்பண்ணைப் பாடினர் ; இதனைக்கண்ட பெருநள்ளி வன்பரணரிடம் இதன் காரணம் யாது ..? என்று வினவினார் ; அவர், நீ நிரம்ப இப்பாணர்க்குப் பரிசில் அளித்தாய் ஆதலால் பாடவேண்டிய முறையை இவர்கள் மறந்தனர் என்றார்.
“ நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அது நீ .
புரவுக்கடன் பூண்ட வண்மையானே.” - வன்பரணர், 149 :.
பெருநள்ளியே வாழ்க...! ’நள்’ என்ற ஓசையையுடைய மாலை நேரத்தில் மருதம் என்ற பண்ணை இசைத்து, காலை நேரத்தில் எப்போதும் கையில் இருக்கும் இயல்புடைய யாழில் செவ்வழி என்ற பண்ணை இசைத்து எம் பாணர் தொன்றுதொட்டுவரும் வரலாற்று முறையை மறந்தனர் ; நீ, வேண்டுவன கொடுத்துப் பாணரைப் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்டிருப்பதால் அவர்கள் இசை மரபை மறந்துவிட்டனர்.
குறிப்பு: இசை முறைமையைப் பாணர் மறந்ததற்குக் காரணம் அவரல்லர் ; நின் கொடைத் தன்மையே எனப் பெருநள்ளியின் கொடைத் தன்மையைப் பாராட்டினார். (மருதம் - மருதப்பண். ; செவ்வழி - செவ்வழிப்பண் ; கைவழி - கையில் எப்போதும் இருக்கும் யாழ் . ; புரவுக்கடன் - பாதுகாக்கும் கடமை. ; வரவு - இசை வரலாற்று முறைமை.)
. ........................தொடரும்...................................