ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-3.
தொல்காப்பியர் வரலாறு :
தமிழ் வாழ்த்துப் பாடல்:
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.”
பாயிரம் - திறனுரை :
சிறப்புப்பாயிரம் தன்னால் உரைக்கப்படும் நூலுக்கு இன்றியமையாதது. அது பதினொரு வகையாம்.
“ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே.”
”காலம் களனே காரணம் என்று இம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே.” இப் பதினொன்றும் இப்பாயிரத்து உள்ளே பெறப்பட்டன.
இனிச் சிறப்புப் பாயிரத்து இலக்கணம் செப்புமாறு:
“ பாயிரத்து இலக்கணம் பகருங் காலை
நூல்நுதல் பொருளைத் தன்னகத்து அடக்கி
ஆசிரியமானும் வெண்பா வானும்
மருவிய வகையால் நுவறல் வேண்டும். இதனால் அறிக.
திறனுரை:
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்பதன் விளக்கம். கிழக்கும் மேற்கும் கடல்கள் ; நிலங்கள் இல்லை ஆதலின் இத்திசைகளுக்கு எல்லை வெளிப்படை, வேங்கட மலையின் வடபகுதிவரையும் குமரி மலையின் தென்பகுதிவரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன என்பது வடவேங்கடத்துக்கு வடக்கிலும் தென்குமரிக்குத் தெற்கிலும் வேற்று மொழிகளும் வேற்றரசுகளும் தொல்காப்பியர் காலத்து இருந்தன; ஆதலின் இந்த இருதிசைகளுக்கு மட்டும் நிலவெல்லைகள் குறித்தார். இதனை யுட்கொண்டே “நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது “ என்று தொல்காப்பியர் செய்யுளியலில் தெளிவிப்பர். இன்ற்ய் காண்பதுபோல் தெற்கும் குமரிக்கடலாக இருந்திருப்பின் வடதிசைப்பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரி என்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின் தொல்காப்பியர் காலத்து நீண்ட நிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு.
இந்நிலக்கருத்தால் நாம் அறிவது என்ன..? தெற்கே பஃறுளி யாறும் குமரி மலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம் எனவும் அந்நெடும்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் வழக்கையும் தழுவி இலக்கணம் கூறியது தொல்காப்பியம் எனவும் அறிகின்றோம்.. ‘தமிழ் கூறு நல்லுலகம்’ என்றது கடல் கொள்ளப்படாது அன்றிருந்த பன்மலையடுக்கத்துக் குமரிமுடியையும் உள்ளடக்கியதாம் எனவும் அறிகின்றோம்.
இத்தொல் நிலம் சங்கவிலக்கியத்தாலும் சிலப்பதிகாரத்தாலும் அடியார்க்குநல்லார் உரையாலும் இறையனார் அகப்பொருள் உரையாலும் பெருமருங்கு தெளிவுபடும். ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது.” என்பார் இளம்பூரணர். இத்தகு கடல்கோள்கள் பற்றி நம் நாட்டவரும் பிறநாட்டவரும் பல்துறைச் சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர்.
----------------------------------முத்தமிழ் மூதறிஞர் வ. சுப. மாணிக்கம். ...............................................தொடரும்........................................