தமிழமுது –301 – தொல்தமிழர் இசை மரபு:161 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.- 1839 – 1898.
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் பாடல்களைப் பனையோலை ஏட்டிலேயே எழுதி வழங்கியவர் சுவாமிகள் நெல்லை நகரிலே பிறந்து, தமிழகம் முழுவதும் உள்ள திருத்தலங்கள் தோறும் சென்று அருட்பாடல்களுடன் இலக்கண நூல்களையும் இயற்றியுள்ளார்.
”தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 - சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார்.[1] தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள்[2] என்றும் அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும் பிற இலக்கண ஆசிரியர்களைப் போல முன்னோர் இலக்கண நூற்பாக்களை இவர் எடுத்தாளவில்லை. தமிழ் மொழியின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு இலக்கணம் பாடியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ’ஆங்கிலியர் அந்தாதி’ பாடியவர்.[3]
சந்தப் பாடல்கள் (வண்ணம்): வண்ணச்சரபம் என்று அழைக்கப்படும் அளவுக்கு சந்தங்கள் (இக்கால இசைவாணர்கள் சந்தம் என்பதை வண்ணம் என்கின்றனர்) நிறைந்த நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். வண்ணம் எனும் இசை உறுப்பைக் கொண்டு பாடல்களைப் பாடியவராதலால் இவரை வண்ணச்சரபம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பெற்றார். வண்ணம் என்னும் பண்ணிசை, தொல்பழங்கால மரபினைக்கொண்டதாகும்.(இணையப்பதிவு.)
தொல்காப்பியர் கூறும் வண்ணங்கள்:
“வண்ணந் தாமே நாலைந் தென்ப.” - தொ.பொரு.513. : என்றதாவது வண்ணம் இருபது வகைப்படும் என்பதாம்;
“அவைதாம்,
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று
ஆங்கென மொழிப அறிந்திசி னோரே.” -514.
ஆகிய, 20 வண்ணங்களும் பாடலுள் பயின்று வருவனவாகும். ....................................................தொடரும்...............................