தமிழமுது –225– தொல்தமிழர் இசை மரபு:85.
பத்துப்பாட்டு- 3. சிறுபாணாற்றுப்படை : சீகாமரம் - மருத யாழ்த் திறம்.
சீகாமரம் - மருத யாழ்த் திறங்களுள் ஒன்று ; சீகாரம் - ஒரு பண் வகை ; திறம் - ஐந்து சுரமுள்ள இசை.
“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணைஆர் கோதை
ஓவத்தன்ன உண் துறை மருங்கில்
கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அழிந்த தெய்வத் தாமரை
ஆசுஇல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்.... - 68 –77.
செறிவுடைய கடப்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை ; கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திர கோபம் போன்ற தாதினை உதிர்த்ததால், ஓவியத்தை ஒத்து விளங்குகின்றன ;அப்பொய்கைத் துறையிடத்தே எழுகின்ற நகலினை ஒத்த தாமரை மொட்டுக்கள் ; அஃது சாதிலிங்கம் தோய்ந்த அங்கை போன்ற சிவந்த இதழ்களைக்கொண்டு அழகு பொலி திருமுகமோ என மலர்ந்து இருக்கின்றது ; அதன் பொன்னிறப் பொகுட்டின் மீது தன் இ்ன் துணையைத் தழுவித் துயில் கொள்ளும் தும்பி, இறகினை அசைத்துச் சீகாமரம் என்னும் பண்ணை இசைத்து மகிழ்விக்கிறது.
( நறு நீர்ப் பொய்கை - நல்ல நீரை உடைய நீர் நிலை. ; நிவந்த - படர்ந்த : துறு நீர் - செறிந்த தன்மை ; கோதை - மாலை ; கொங்கு - தேன் பூந்தாது; ஓவம் - ஓவியம். ; உறைத்தலின் - துளித்தலால். ; முகை - மொட்டு ; ஆசுஇல் - குற்றம் இல்லாத. ; இறகு உளர்ந்து - சிறகை அசைத்து. ; காமரு தும்பி- விருப்பம் தருகின்ற வண்டு. )
................தொடரும்....................