தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -5.
வழிபாடுகள்: பெருந்தெய்வங்கள் -
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வு:
ஐந்திணைத் தெய்வங்கள், குறிஞ்சி - சேயோன் ; முல்லை - மாயோன் ; பாலை - காளி ; மருதம் - வேந்தன் ; நெய்தல் - வாரணன்.
சேயோன் சிவந்தவன், சேந்தன் என்னும் பெயரும் அப்பொருளதே. முருகன், வேலன், குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் உலகவழக்கு வடிவம். இப்பெயர் வடிவ வேறுபாட்டைக் கொண்டு பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கித் தந்தையும் மகனுமாகக் கூறிவிட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை.
சிவன் என்று ஆரியத் தெய்வம் ஒன்றுமில்லை. சிவ என்னும் சொல் நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடைமொழியாகவே ஆரிய வேதத்தில் வழங்கிற்று.
புறக்கண் காணமுடியாதவற்றையும் நெடுந்தொலைவில் உள்ளவற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக்கண் போன்ற உறுப்பு, குமரி நாட்டு மக்கள் நெற்றியில் இருந்தது என்றும் அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக்கண்ணைப் படைத்துக் கூறினரென்றும், ஆராச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளிமலை (கைலை)இருக்கையும் காளையூர்தியும் விவனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத்தக்கது. மாயோன், மால், விண்டு, என்னும் பெயர்கள் ஒருபொருட் சொற்கள்.
மால் = கருமை , முகில், திருமால்
விண்டு = முகில், வானம், திருமால்
விண் = வானம், முகில், மேலுலகம்
விண் = விண்டு. ஆரிய வேதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கதிரவனைக் குறித்தது. காலை எழுச்சியையும் நண்பகல் செலவையும் எற்பாடு (சாயுங்கால) வீழ்ச்சியையுமே மூவடியால் (மூன்று எட்டால்) உலகம் முழுவதையும் விஷ்ணு (கதிரவன்) அளப்பதாக முதலில் கொண்டனர் வேத ஆரியர்.
குறிஞ்சி நிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும் , முல்லை நிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர். இதனாலேயே சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும் தோன்றின.
.......................தொடரும்.....................