தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -18.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - வழிபாடு : ஐவகை ஒழுக்கம் - பஞ்சசீலம்.
மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி :
”திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமுன் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்.”
மாங்குடி மருதனார், மதுரைக் : 462 – 468.
திண்ணிய ஒளியையுடைய பேரணிகலன்களை விருப்பம் பொருந்திய அழகினோடு பேரிளம் பெண்டிர், கணவரோடு கூடித் தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தம் ஒள்ளிய சிறு பிள்ளைகளை எடுத்துக்கொண்டு, தாமும் தம் கணவரும் தம் பிள்ளைகளும் ஒரு சேர சீலத்தால் சிறந்து விளங்கும்படி, பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் ஏந்தி வணங்கி, மிகுதியாகத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் பெளத்தப்பள்ளியும்...
மதுரை நகரில் பெளத்தப்பள்ளிகள் இருந்தமையும் அவற்றில் வழிபாடு செய்வோர் இயல்புகளும் சுட்டப்பட்டுள்ளன. இல்லறத்தில் வாழ்பவர் தங்கள் குடும்பத்துடன் சென்று மலர் தூவிப் போற்றி வழிபடுவர்.
தாயர், தம் குழந்தைகளை அணைத்துச் செல்லும் தோற்றம் தாமரைப் பூவினைக் கையினால் பற்றியிருப்பது போல் காட்சியளித்தது.
பெளத்தக் கோட்பாடாகிய ஐவகை ஒழுக்கங்களில் தங்கள் குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்பது வழிபாட்டின் நோக்கமாக இருந்தது.
( மதாணி - பேரணிகலன்கள் ; குறு மாக்கள் - சிறு பிள்ளைகள். ; சீலம் - கொல்லாமை, கள் உண்ணாமை, பொய் கூறாமை, கள்ளாமை, பிறன் மனை நயவாமை, என்பன. இவை பஞ்ச சீலம் எனப்படும். ; பழிச்சுதல் - துதித்தல். ; கடவுள் - புத்த தேவனைக் குறித்தது. ; பேரிளம் பெண் - மகளிர் ஏழு பருவங்களில் ஒன்று, பெரிய இளமையை யுடைய பெண்டிர். )
அன்புடையீர் மீண்டும் 21 – 09 – 26 அன்று சந்திப்போம்.
..................தொடரும்...........................................