தமிழமுது –219– தொல்தமிழர் இசை மரபு:79.
8. புறநானூறு -- விறலியாற்றுப்படை.
“ நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ்சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.”--நெடும் பல்லியத்தனார், 64.
சில வளையல்களை அணிந்த விறலியே ...! யானைப்படை போரிட்ட இடம் அகன்ற பாசறையில் வானத்தில் பறக்கும் பருந்துகளின் கூட்டத்தைப் பசுமையான ஊன் தாக்கும்படி, பகைவர் நாட்டில் பொருந்திய அழகிய பெரிய செல்வத்தையுடைய முதுகுடுமி எனும் மன்னனைக் கண்டு மிகுந்த நீருடன் சமைக்கப்பட்ட புல்லரிசிக்கூழை உண்பதைவிட்டு விடுவதற்கு நல்ல யாழையும் சிறு பறையையும் ஒருதலை மாக்கிணையையும் கட்டிக்கொண்டு செல்லலாம் வருக...!
”விறலியே செல்லாமோ..?” என்றதால் இது விறலியாற்றுப்படை ஆயிற்று.
(தடி - ஊன்.; குடுமிக் கோமான் - குடுமியாகிய , கோமான் - அரசன் ; தகை - அழகு ; நெடுநீர் புற்கை - புல்லிய உணவு , நீர் அதிகமாக இட்டுச் சமைத்த உணவு, கஞ்சி, புல்லரிசிக் கூழ். )
................தொடரும்...............