ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-44.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்,தெய்வச்சிலையார்்: மு.வை.அரவிந்தன்.
தெய்வச்சிலையார் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர். இளம்பூரணர், சேனாவரையர் ஆகியவர்க்குப் பிற்பட்டவர். இவர் தம் உரையில் மற்ற உரையாசியர்களையோ பிறர் கருத்தையோ குறிப்பிடவில்லை.
தெய்வச்சிலை என்ற தொடர் பல பொருள்களையுடையது, சிலை என்பதற்கு, கல், மலை, வில், முதலிய பொருள்கள் உண்டு. போரில் இறந்த வீரர்களுக்கு நினைவாக நட்ட கல்லை (நடுகல்லை) கொங்குநாட்டவர் தெய்வச்சிலை என்பர். பொதியமலை தெய்வச்சிலை எனப்படும் திருமால் ஏந்திய வில்லை தெய்வச்சிலை என்பர். திருமாலுக்கு உரிய பல பெயர்களில் ஒன்று தெய்வச்சிலையார் என்பது.
“பவ்வத் திரைஉலவு புல்லாணி கைதொழுவோன்
தெய்வச்சியார்க்குஎன் சிந்தைநோய் செப்புமினே.”
என்று திருமங்கையாழ்வார் திருப்புல்லாணியில் வீற்றிருக்கும் திருமாலைக் குறிப்பிடுகின்றார். தெய்வச்சிலையார் என்பது இடைக்காலத்தில் மக்கள் பெயராக வழங்கியது. தேவச்சிலையான் என்றும் கல்வெட்டுகளில் அப்பெயர் வருகின்றது. தெய்வச்சிலையார் விறலி விடு தூது, தெய்வச்சிலைப் பெருமான் வாகனமாலை, தெய்வச்சிலையான் திருப்புகழ், தெய்வச்சிலையான் வண்ணவிருத்தம் ஆகியவை திருமாலைப் பற்றிய நூல்களாகும்.
வரலாறு:
உரையாசிரியர் தெய்வச்சிலையார் வரலாற்றை, ஈரோடு புலவர் இராசு கல்வெட்டுச் சான்றுகளைக்கொண்டு விரிவாக ஆராய்ந்து பல நல்ல செய்திகளை வெளியிட்டுள்ளார் (கொங்கு-1975, ஏப்ரல் மே,சூன் இதழ்கள்.) அவர் ஆராய்ச்சி முடிவின்படி தெய்வச்சிலையார், முதல் மாறவர்மன் குல சேகர பாண்டியன் (1268 – 1310) காலத்தில் திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்தவர்.
இந்தப் பாண்டிய மன்னன் கால்த்தில்தான் மார்க்கோ போலே தமிழகத்திற்கு வந்தார். இம் மன்னனுக்குப்பின், தமிழ் மண்ணில் மாலிகாபூர் படையெடுப்பு நிகழ்ந்தது.
தெய்வச்சிலையார் உரையில் பாண்டி நாடு, மதுரை பாண்டியர் பற்றிய பல மேற்கோள்கள் வருகின்றன. திருமால் பெயர் தாங்கிய இவரை வைணவர் என்று கருத உரையில் சான்றுகள் உள்ளன.
“நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலாய் -சொல்
லுவோர் குறிப்பு மாயவனை நோக்கலில் கருடனாயிற்று
வலம்புரித் தடக்கை மாஅல் திருமகளோ அல்லள்”
போன்ற இடங்களைக் குறிக்கலாம் இருப்பினும் இவர் சைவ சமயத்தைப் போற்றி உரைக்கின்றார்....
........................தொடரும்...........................................