ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-48.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன்.
மக்கள் வாழ்க்கையும் நாகரிகமும் :
தெய்வச்சிலையார், காலத்தில் அறச்சாலை இயற்றுதல், குளம் அமைத்தல் போன்ற அறச்செயல்கள் நடைபெற்றன. “யாற்றினது கரக்கண் நின்ற மரத்தை அறச்சாலை இயற்றுதற்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன்” (62). “காவோடு அறக்குளம் தொட்டான்”(71) என்று இவர் உதாரணம் காட்டுகின்றார்.
நெல்லாதல் காணமாதல் ஒருவன் கொடுப்பக் கொண்ட வழி ‘இன்றைக்குச் சோறு பெற்றேன்’ என்னும், அவ்வழிச் சோற்றுக்குக் காரணமாகிய நெல்லும் காணமும் (காசு) சோறு என ஆகு பெயராயின”(110) என்று இவர் கூறுவது, அவர்காலத்தில் கூலியாக நெல்லும் காணமும் தரும் வழக்கம் இருந்ததை உணர்த்துகின்றது.
“இவ்வூரார் எல்லாம் கல்வியறியுடையார்” என்று இவர் உதாரணம் எழுதுகின்றார்(150) கற்றோர் நிரம்பிய ஊர்கள் அக்காலத்தில் பல இருந்ததை உணர்த்துகின்றது.
இவருடைய உரையில் நெசவுத் தொழிலைப் பற்றிய பல உதாரணங்கள் இடம்பெற்றுள்ளன.
நெய்தான் என்ற வழி, நெய்யப்பட்ட பொருளும் நெய்வதாகிய தொழிலும் நெய்தற்குக் கருவியும் நெய்தற்குக் காலமும் நெய்தற்கு இடமும் நெய்யும் கருத்தாவும் அதனைக் கொள்வானும் அதனாற் பயனும் உள்ள.வழி”
இவ்வாறு நெசவுத்தொழிலைப் பற்றிப் பல உதாரணங்கள் காட்டியுள்ளார்.
அரிய செய்தி :
இவரது உரையில் அரிய வரலார்றுச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.இடைக்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த (பழைய) கொல்லம். கடல் கோளால் அழிந்து பிறகு கடலின் பெயர்ச்சியால் புதிய நிலப்பகுதி தோன்றியது. புது நிலப்பகுதிக்கு மக்கள் கொல்லம் என்றே பெயரிட்டனர் புதிய பகுதியில் மக்கள் குடியேறிய காலம் முதல் கொல்லம் ஆண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது.ி இச்செய்தியை, தெய்வச்சிலையார்,
“கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்
படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண்
அப்பெயரானே கொல்லம் எனக் குடியேறினார்.” என்று கூறுகின்றார்.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பதற்கு, இவர் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே செந்தமிழ் வழங்கும் நிலம் என்று புதிய செய்தியைக் கூறி விளக்குகின்றார்.
......................கல்லாடர்................தொடரும்.........