தமிழமுது –220– தொல்தமிழர் இசை மரபு:80.
8. புறநானூறு -- செவ்வழி - மாலைக்காலத்தில் பாடும் பண்.
வையாவிக் கோப்பெரும் பேகன் எனும் மன்னனைத் திருத்தும் நோக்குடன் பரணர் சொல்லலானார் . இ்ப்பாடல் பாணன் கூற்றாக அமைந்துள்ளது.
”அருளா யாகலோ கொடிதே இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினேமாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்துவார் அரிப்பனிபூண் அகம் நனைப்ப
இனைதல் ஆனாளாக இளையோய்
கிளையை மன் எம்்கேள் வெய்யோற்கு என
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி
எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரோடு
முல்லை வேளி நல்லூ ரானே,” - 144.
மாலைப்பொழுது வந்தது, அப்போது சிறிய யாழினை, இரங்கல் பண்ணான செவ்வழிப்பண் இசைக்கும்படி செய்து, மழையை ஏற்கும் நின் பாட்டைப் பாடினோம் ; நீல மலர் போன்ற மை பூசப்பெற்ற கண்கள் கலங்கி வீழ்ந்த இடைவிட்ட நீர்த்துளிகள் அணிகலன் அணிந்த மார்பை நனைப்ப அழுதாள் ; ஆறுதல் பெறாதவள் ஆனாள் ; “இளமை உடையவளே..! எம் உறவை விரும்பும் எம் தலைவன் பேகனுக்கு நீ உறவோ..? என்று வணங்கிக் கேட்டோம் , அவள் காந்தள் அரும்பைப் போன்ற விரலால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “யாம் அவனுடைய உறவினர் அல்லோம் ; எம் போன்ற ஒருத்தியை விரும்பி, விளங்கும் புகழையுடைய பேகன் , எந்நாளும் ஒல் என்று ஒலிக்கும் தேருடனே முல்லை வேலியுடைய நல்லூருக்கு வருவான் என்று பலரும் சொல்வர் “ என்று சொன்னாள்.
(அரிப்பனி - தாரையாக வடியாது இடைவிட்ட கண்ணீர்த் துளிகள். ; இனைதல் - வருந்துதல் ; முகை - அரும்பு.; நலன்நயந்து - அழகை விரும்பி.)
தொல்தமிழர் இசை மரபு எட்டுத்தொகை நூல்களில் பயின்று வந்தமுறையினைக் கண்டோம் ; இனிப் பத்துப்பாட்டுள் இசை மரபின் தொடர்ச்சியைக் காணலாம்.
................தொடரும்...............