தமிழமுது –205– தொல்தமிழர் இசை மரபு:65.
கடவுள் வாழ்த்து - தொடர்ச்சி:
6. கலித்தொகை:- ஊழிக்கூத்து: தாள அறுதிகள்.
”கொலை உழுவைத் தோல் அசைஇ கொன்றத்தார் சுவற்புரள
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளே ..? ”
கொலை குணங்கொண்ட புலியைக்கொன்று அதன் தோலை உடுத்திக்கொண்டு, கொன்றை மாலை தோளிலே அசைய, கையில் அயன் தலையை ஏந்துவதால் காபாலம் என்னும் கூத்தை நீ ஆடுகின்றாய். அவ்வாறு ஆடுங்காலத்தே முல்லையை ஒத்த முறுவலையுடைய இறைவியோ தாளத்தின் தொடக்க நிலையில் அமையும் பாணியைத் தருவாள் ? அவ்விடத்தே வேறு பிறர் இல்லை..!
என ஆங்கு - என்று சொல்லும்படியாக..!
” பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.”
.”-அழித்தல் தொழிலைச் செய்யுங்காலத்தே , ஆடும் கூத்தின் தாளத்திற்கேற்ற, பாணி, தூக்கு, சீர் என்ற இவற்றை, மாட்சி பொருந்திய அணிகலன்களை அணிந்த இறைவி காத்து நிற்கின்றாள். அம்மையின் அருட்செயலினாற் போலும், நின் வெம்மையை ஒடுக்கி, ஓர் உருக்கொண்டு, அன்பற்ற பொருளாகிய எம்மிடத்து வந்து பொருந்தி நின்றாய் ; இதற்குக் காரணம் கூறுவாயாக. முத்தொழில் இயற்றும் இறைவன், அகிலங்கள் அனைத்தையும் அழிக்க முற்படுங்கால் ஆடுங் கூத்து ஊழிக்கூத்து என்றும் கூறப்படும் அனைத்தையும் தன்னுள் அடக்கித் தானும் உமையுமாக இருந்து ஆடும் போது, அருளே வடிவாகிய உமையம்மை, இறைவனது அழித்தல் நடனத்திற்குப் பாணி, சீர், தூக்கு என்னும் தாள அறுதிகளை வழங்கமாட்டாளே ; அதனைச் செய்யப் பிறர் எவரும் அங்கில்லையே என்று வினவுவனவாக த் தாழிசைகள் அமைகின்றன. எனினும் அழிப்புச்செயலும் (சங்காரம்) இறைவனது அருள் காரணத்தால் நிகழ்வதாதலின் உமையம்மை தாள அறுதிகளை வழங்க இறைவன் ஆடினான் என்று ஆசிரியர் கூறுகின்றார்.
ஒரு தாளத்தின் தொடக்க நிலை பாணி என்றும் இடைநில தூக்கு என்றும் இறுதிநிலை சீர் என்றும் கூறப்படும்.
கடவுள் வாழ்த்து, நல்லந்துவனார், - 5 – 17.
(தேறி நீர் - தெளிந்த நீர் , கங்கை. ; கூளி - பேய். ; நுசுப்பு - இடை. ; மதுகை - வலிமை. ; நீறு - வெண் சாம்பல். ; பணை - மூங்கில். ; அணை - மெத்தை. ; உழுவை - புலி. ; சுவல் - தோள். ; இழை - அணி. ; ஆணம் - நேயம்,அன்பு. )
........................தொடரும்.....................................