தமிழமுது –204– தொல்தமிழர் இசை மரபு:64.
6. கலித்தொகை:- ஊழிக்கூத்து: தாள அறுதிகள்.
“படுபறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ ?
இறைவா....! நீலமணி போன்ற கழுத்தினையும் எட்டுக்கைகளையும் உடையாய் இப்போது யான் கூறுவனவற்றைக் கேட்பாயாக...!
உன்னுடைய கையில் ஒலிக்கும் துடி, வேறு பல இசைக்கருவிகளாகவும் முழங்க பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு கொடிய கொடு கொட்டி என்னும் கூத்தினை நீ ஆடுகின்றாய். அவ்வாறு ஆடுங்காலத்தே, பக்கம் உயர்ந்த குறியினையும், கொடி போன்ற இடையினையும் உடைய இறைவியோ தாளம் முடியும் காலத்தினை தன்பால் கொண்ட சீர் என்பதனைத் தருவாள்? அவ்விடத்தில் வேறு பிறர் இல்லையே..!
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலால் வளர் தூக்குத் தருவாளோ ?
மிக்குச் செல்கின்ற போர்களில் பலவாகிய முப்புரங்களையும் தீ மடுத்து எரித்து வென்றாய் ; அதன் வலிமையால் எதிரிகள் வெந்துபட்ட சாம்பலாகிய நீற்றை அணிந்து, பாண்டரங்கம் என்னும் கூத்தை நீ ஆடுகின்றாய் அவ்வாறு ஆடுங்காலத்தே, மூங்கிலை ஒத்த அழகினையும் அணை போன்ற மெல்லிய தோள்களையும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய இறைவியோ நீ ஆடுங்காலத்தில் தாள நிகழ்வின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாள் ? அவ்விடத்தே வேறு பிறர் இல்லையே..!
........................................தொடரும் .........................................