ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-12.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர் - அகத்தியர் மாணவரா..?
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
ஆய்வுரை -பகுதி -5.
தொல்காப்பியனார் அகத்தியர்க்கு மாணாக்கர் தாமோ என்பது ஆராய்தற்குரியது. தமிழுரைகளில் முற்பட்டதாகிய இறையனார் களவியலுரையானது தொல்காப்பியரை இடைச்சங்கத்துப் புலவராகவும் தொல்காப்பியத்தை இடைச்சங்கத்தார்க்கும் நூலாகவும் கூறுவதன்றி அவரை அகத்தியனாரொடு தொடர்புபடுத்தும் யாதும் கூறிற்றிலது.
”மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்.”
என வரும் புறப்பொருள் வெண்பாமாலப் பாயிரமே முதன் முதலாகத் தொல்காப்பியரை அகத்தியர் மாணாக்கர் என்று கூறுகின்றது. இதனைப் பின்பற்றியே பின்வந்த உரையாசிரியர் சிலரும் கூறுவராயினர். வெண்பா மாலைக்கு முதனூலாகிய பன்னிருபடலம் களவியலுரைப் பாயிரத்திலளவினாற் பெயர் பெற்றதற்கு உதாரணமாக் காட்டப்பட்டிருத்தலின் இந்நூல்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையல்ல வென்று கருதல் பொருந்தும். எனினும் தொல்காப்பியர் முதற் பன்னிரு புலவரும் சேர்ந்தியற்றியது பன்னிரு படலம் என்பதில் இளம்பூரண வடிகளும் நச்சினார்க்கினியரும் கருத்தொருப்படாதவராகின்றனர். தொல்காப்பிய புறத்திணையியலுரையில் இளம்பூரணர்
“அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில் மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் என்னும் தந்திரவுத்திக்கும் பொருந்தாதாகி மிகை படக்கூறல் , தனானொரு பொருள் கருதிக் கூறல் என்னுங் குற்றமும் பயக்கும் என்க.” என்றும். “பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்றன்ன விருவகைத்தே வெட்சி’ என இரண்டு கூறு படக் கூறினாராயினும்..... அவர் அவ்வாறு கூறல் மிகை்படக்கூறலாம்.அதனால் பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினார் என்றல் பொருந்தாது.’” என்றும் “பன்னிஉபடலத்துள் கரந்தைகள் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினார் எனின் , புண்படுத்தல் மார்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறுதல் மயங்கக்கூறுதலாம் ; ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக்கூறலும் மிகைபடக்கூறலும் ஆகியவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாகலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க” என்றும் இங்ஙனம் பலவிடத்தும் பன்னிரு படலத்தை மறுத்திருப்பதுடன், வெட்சிப்படலம் தொல்காப்பியனார் கூறியதன்றெனத் துணிந்தும் உரைத்துள்ளார்.............................தொடரும்......................................