தமிழமுது –285– தொல்தமிழர் இசை மரபு:145. நீட்சியும் - வீழ்ச்சியும். எழுச்சியும் ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:
ஆழ்வார்கள் அருளிய பண்ணிசைப் பாடல்கள் : \
விஷ்ணு புராண காலத்தில் முப்பெரும் கடவுள்களில் இருவராகக் குறிக்கப்பெறுகின்றார். இராமயணமும், பாரதமும், பாகவதமும் , விஷ்ணு புராணமும் விஷ்ணுவின் பெருமையைப் பேசுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் மாயோனும் சங்ககாலத்தில் திருமாலும் இடம் பெறுகின்றனர். தமிழகத்தில் வைணவ மரபும் திருமால் வழிபாடும் வளர்ந்து பெருகுவதற்குக் காரணமாக அமைந்தவர்கள் ஆழ்வார்களே.
ஆழ்வார்களின் என்ணிக்கையைப் பத்தென்றும், பதினொன்று என்றும் பன்னிரண்டு என்றும் பலவாறாகக் கணக்கிடுவர், பத்தென்பார் ஆண்டாளையும் மதிரகவியையும் சேர்க்காது விடுவர். பதினொன்று என்பர் இவ்விருவருள் ஒருவரை நீக்குவர். திருமலை ஆண்டாள் கணவராக வரித்ததையும், மதுரகவி ஏனைய ஆழ்வார்களைப் போல் திருமாலைப் பாராட்டாமல் அனைத்தையும் தம் குருவாகிய குருகூர்ச் சடகோபராகவே கொண்டு அவர்பால் பக்தி செலித்தியதையும் நீக்குவதற்குக் காரணமாகக் காட்டுவர். இருப்பினும் பொதுவகப் பன்னிரு ஆழ்வார்களே கொள்ளப்படுகின்றனர்.
காஞ்சியைச் சேர்ந்த பொய்கை ஆழ்வார் ; கடல் மல்லையில் பிறந்த பூத்தாழ்வார் ; திருமயிலையைச் சேர்ந்த பேயாழ்வார் ; பெளத்த- சமண - சைவ சயங்களிலெல்லாம் இருந்து இறுதியாக வைணவத்தைத் தழுவிய திருமழிசை ஆழ்வார் ; தஞ்சை ஆலிநாட்டுக் குறுநில மன்னராயினும் நாகைப் பெளத்தப் பள்ளியின் புத்தர் சிலையைத் திருடி திருப்பணி செய்தமையோடு, வைணவத்தை நிலைநாட்ட வாது செய்தும் 108 வைவணத் தலங்களில் 88 திருத் தலங்களுக்குச் சென்றும் இறைநெறி பரப்பிய திருமங்கை ஆழ்வார் ; சீமாறன் சீவல்லபன் காலத்தவரான பெரியாழ்வார் ; மானுடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே’ என்னும் கொள்கை கொண்டு திருமாலையே கணவராகக் கருதிச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனும் சிறப்புப் பெயர் பெற்ற கோதை நாச்சியராகிய ஆண்டாள் ; இசைப்பாடல் பாடி இறைத்தொண்டு செய்த திருப்பாணாழ்வார் ; திருமங்கையைப்போன்று வைணவப் பற்று மிக, ஏனைய சமயத்தவரை வாதுக்கழைத்துத் தம் சமயம் நிலைநாட்டுவதியே கொள்கையாகக் கொண்ட தொண்டரடிப்பொடியாழ்வார் ; சேர மன்னனாகிய குலசேகர ஆழ்வார். ; நம்மாழ்வார் என்று சிறப்பிக்கப்படும் குருகூர்ச் சடகோபர் ; அவருடைய மாணாக்கராகிய மதுரகவி ஆழ்வார் ஆகியோரே பன்னிரு ஆழ்வார்கள் எனப்படுவர்.
இவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் நம்பியாண்டார் நம்பிகள் காலத்தவரான நாதமுனிகள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலாகத் தொகுத்தார்.
.............................தொடரும் ............................