செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தமிழமுது –212– தொல்தமிழர் இசை மரபு:72. ....குரவைக் கூத்தாடும் மகளிர்.

 தமிழமுது –212– தொல்தமிழர் இசை மரபு:72 

   7. அகநானூறு : குரவைக் கூத்தாடும் மகளிர். 

  தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்  

 பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்  

 நனங்கேழ் மாக்குரல் குழையொடு துயில்வர  

பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து  

 வயிரிடைப்பட்ட தெள்விளி இயம்ப  

 வண்டற் பாவை உண்துறைத் தரீஇ  

 திருநுதல் மகளிர் குரவை அயரும்  

 பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை  

 வாணன் சிறுகுடி ....... - துரை மருதன் இளநாகனார், 269: 14 – 22.    

       மழை பெய்து  ஓய்ந்துபோன தைத் திங்களின் இறுதி நாள்களில் அழகிய நெற்றியை உடைய பெண்கள்பொன்னால் செய்யப்பட்ட காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே , நல்ல நிறம் கொண்ட பூங்கொத்துக்கள் தழையுடன் அசைந்தாடஓசை பரந்து எழும் பெரிய வாயாகிய வட்டத்தையுடைய  ஊதுகொம்பினிடத்துப் பிறந்த தெளிந்த இசை முழங்கவண்டல் விளையாடிற்குரிய பாவையை நீர் உண்ணும் துறையில் கொண்டுவந்து வைத்துக் குரவைக் கூத்தாடுவர். 

 அத்தைய சிறப்புடைய சிறுகுடி என்னும் ஊர் வாணன் என்பானுக்கு உரியது......!   

(பெயல் கடை நாள் - மழையின் இறுதி நாள்கள். ; பொலம் காசு - பொற்காசு.; கேழ் - நிறம். ; மாக்குரல் - சிறந்த மலர்க் கொத்துகள். ; துயல்தல் - அசைதல். ; குவாய் மண்டிலம் - பெரிய வாயாகிய வட்டம். ; வயிர் ஊது கொம்பு என்னும் துளைக் கருவி. ; வண்டல் - விளையாட்டு , சிற்றில் அமைத்து விளையாடுதல். ; உண் துறை - நீர் உண்ணும் துறை ; குரவை அயர்தல் - குரவைக்கூத்தாடுதல்.) 

.......................................தொடரும்...................................