தமிழமுது –282– தொல்தமிழர் இசை மரபு:142. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - திருமூலர் -திருமந்திரம் : சித்தர் மரபு. திருமந்திரம் ஓர் அற்புதமான ஞான நூல்; சில இயல்புகளில் ஏனைய நாயன்மார்களின் திருமுறைகளைவிடத் தனித் தன்மையும் தனிச் சிறப்பும் கொண்ட மறைநூல்; “என்னை நன்றாகப்படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே “ என்பதை உணர்ந்து தமிழ் செய்த திருமூலர் அரிய தத்துவங்களை எல்லாம் அழகிய எளிய இனிய தமிழில் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் புது நோக்கிலும் புரட்சி நோக்கிலும் பொது நோக்கிலும் படைத்துள்ளமை வியத்தற்குரியதாகும்.
”தமிழ்ச் சித்தர் சிந்தனை மரபு சங்க காலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வாழையடி வாழையென வளர்ந்துவரும் சித்தர் சிந்தனை மரபிற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. எண்வகை யோகங்கள், எண்வகைச் சித்திகள், மணி, மந்திரம், மருந்து, சோதிடம் வானநூற்கலை, இரசவாதம் வர்மம், தொலைவில் உணர்தல், காலம் கடந்து நிலைபெறுதல் , எல்லைகளைக் கடந்து உணர்தல எனப் பலநிலைகளில் தம் ஆளுமைகளைச் செலுத்தியவர்கள் தமிழ்ச் சித்தர்கள்.
தமிழ்ச் சித்தர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட மூர்த்தியையோ (கடவுள், உருவம்)் குறிப்பிட்ட தீர்த்தத்தையோ ( காசி, ரிஷிகேஷ். திரிவேணி, சங்கமத்தில் நீராடுவோர்.) தங்களுக்கென்று குறிப்பிட்ட தலத்தையோ (கோயில்கள்) வைத்துக்கொண்டு வழிபடுவதில்லை.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இயக்கத்தின் வழிவந்த அருளாளர் (நாயன்மார், ஆழ்வார்.) பல்வேறு தலங்களுக்குச் சென்றனர்.அத்தலங்களில் எழுந்தருளிய இறைவனைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றினர். ஆறுகளிலும் குளங்களிலும் புனித நீராடினர். நடந்தே சென்று பல்வேறு தலங்களின் பெருமைகளைப் புகழ்ந்து பாடல்கள் பாடினர். இவற்ிறையெல்லாம் சித்தர்கள் செய்யவில்லை.
தமிழ்ச் சித்தர் மரபுக்கு மாறாக இன்றைய வழிபாட்டு முறையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முக்கிய இடம் பெற்றதால் பல்வேறு இடர்ப்பாடுகளும் துன்பங்களும் சமய வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டன. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றையும் முறையாக வழிபடத் தொடங்கியதன் நோக்கம் ஒரு சற்குருபிரானை அடைவதற்குத்தான், ஆனால் உண்மையைக் காணவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பெற்ற இந்நெறி வெற்றுச் சடங்காக மாறி மக்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டது.
........................................தொடரும்..........................................