ஞாயிறு, 3 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…22.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…22.

ஒளவையார் அருளிய மூதுரை

அடக்கத்தை இகழாதே.

”அடக்க முடையோர் அறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாம் கொக்கு.”

 

கொக்கு தனக்கேற்ற பெரிய மீன் வருமளவும் அமைதியாக இருப்பதுபோல பெரியவர்களும் தமக்கு ஏற்ற காலம் வரும்வரை அடங்கியிருப்பார்கள். அடக்கத்தை அறியாமை என்று நினைத்து அவர்களை வெல்ல நினைப்பவன் தோற்றுப் போவான்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்

ஓதி அனையார் உணர்வுடையார்…” சமண முனிவரகள்; நாலடியார், 27.

 

பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.

 

வெள்ளி, 1 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…21.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…21.

ஒளவையார் அருளிய மூதுரை

போலி அறிவின் இழிவு.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கல்வி.”

 

வான் கோழி தன்னை மயிலாக நினைத்து ஆடினாலும் மயிலாகாது. அதுபோல, கல்லாதவன் கற்பவர் போல் நடித்தாலும் கற்றவன் ஆகான்.

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”கல்வியான் ஆயகழி நுட்பம் கல்லார் முன்

சொல்லிய நல்லவும் தீய ஆம்…” –முன்றுறை அரையனார்; பழமொழி,3.

கல்வி அறிவு மிக்கோர், கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம் .

 

வியாழன், 30 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

ஒளவையார் அருளிய மூதுரை

 

கல்லாதவன் காட்டுமரமாவான்

 

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன் மரம்.”

 

காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டிலும் படிப்பறிவு இல்லாதவனும் ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் நல்ல மரங்களாவர். காரணம் மனித மரங்கள் பார்க்கும் ; நடக்கும் ;பேசும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

“கல்லாது முதிர்ந்தவன் கண் இலா நெஞ்சம் போல்

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை”

நல்லந்துவனார்; கலித்தொகை,130.

 

கல்வி கற்காது முதுமை எய்தியவனின் அகக்ண் இல்லாத நெஞ்சம் போலத் தனித்து வருந்துவதற்குக் காரணமான மாலைக்காலம் , நிறைந்த இருளைப் பரவச் செய்தது.

 

புதன், 29 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

ஒளவையார் அருளிய மூதுரை

நல்லோரால் எல்லார்க்கும் நன்மை

 

“நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யு மழை..”

 

 நெல்லுக்கு இறத்த நீரால் புல்லும் வளம் பெறும். அது போல நல்லோரைச் சார்ந்த எல்லோரும் பயனடைவர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

 

“நீரின்று அமையா உலகம் போலத்

தாமின்று அமையா நம் நயந்தருளி “ – கபிலர், நற்றிணை; 1.

 

தோழி, நீரின்றி அமையாது உலகியல் வாழ்வு என்பதைப் போல அவரின்றி

நம் வாழ்வு சிறக்காது என்பதை நன்கு அறிந்த  நல் உள்ளம் கொண்டவர் என் தலைவர், என்றாள் தலவி.

 

செவ்வாய், 28 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

நல்லார் தொடர்பால் வரும் நன்மை

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.”

 

 நல்லவரைக் காண்பதும் அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும் ; அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடியிருப்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். குறள்;441.

 

அறத்தின் இயல்பை அறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை ஆராய்ந்து அறிந்து பற்றிக் கொள்க,

 

சனி, 25 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

அறிவு, செல்வம், குணம் அமைதல்

 

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகும் குணம்.

 

 நீரினது உயரத்தின் அளவே அல்லிக்கொடி இருக்கும். அதுபோல ஒருவர்க்கு அவர் கற்ற நூலின் அளவே அறிவு அமையும். செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்; பிறந்த குடியின் இயல்புக்கு ஏற்றவாறே குணம் அமையும்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”இனத்தினான் ஆகும்பழி புகழ் தம்தம்

மனத்தினான் ஆகும் மதி.” காரியாசான், சிறுபஞ்சமூலம், 79.

 

மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கு ஏற்ப அறிவும் உண்டாகும்.

வெள்ளி, 24 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

உயிரினும் மானம் பெரிது

 

“உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டாற் பணிவரோ – கற்றூண்

பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வலையுமோ தான்.”

 

கல்லால் ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல், மானம் உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரைவிட்டு மானத்தைக் காப்பர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு:

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.-குறள். 969.

 

பனிமலையில் வாழும் கவரிமா எனும் விலங்கு,,தன் உடம்பினின்றும் மயிர் நீங்கின் உயிர் வாழாது. அதுபோல், தன்மானம் உடையோர் தமக்கு மானக்கேடு வருமாயின் வாழ விரும்பாது உயிரை விட்டுவிடுவர்.