ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-71- ஓர் அறிவியல் அறிஞர்.
எழுத்துக்களது பிறப்பு : தெளி்வுரை ; முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.
”அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். “ -99.
அண்ணத்தைச் சேர்ந்த மிடற்றிலிருந்து வருகின்ற ஓசைக் காற்று அம் மேல்வாயை நன்கு அணைந்து பொருந்த ‘ய’ பிறக்கும்.
மெல்லினம் மூக்குவளியில் பிறத்தல் :
“மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளியின் நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்.” - 100.
முன்பு கூறியபடி மெல்லெழுத்துக்கள் ஆறும் பிறந்தாலும் மூக்கின் வழி வெளிப்படும் காற்று இசையால் பொருந்திப் பிறக்கும்.
சார்பெழுத்துக்களின் பிறப்பு :
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்புஇல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தத்தம் சார்பில் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்.” - 101.
தமக்கெனத் தனித்தன்மை இல்லாத சார்ந்து வருகின்ற சார்பெழுத்துக்களாகிய குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்று எழுத்துக்களும் தாம் சார்ந்துள்ள முதல் எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிடமாகக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் தமக்குரிய இயல்பில் நடக்கும்.
எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை:
”எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே.” - 102.
எல்லா எழுத்துக்களும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசைக் காற்றினால் வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது உள்ளே உறுப்புக்களில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக் காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கணநூல்களில் காணப்படும் அதனை இங்குக் கூறாது, வாயிலிருந்து வெளிவரும் ஓசைக்குரிய மாத்திரையை மட்டும் கூறியுள்ளேன்.
.................தொடரும்...................................................................