திங்கள், 18 மார்ச், 2024

சனி, 16 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…100.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…100.

..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி

        அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்

        உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

        கருத்துடனே நாடோறும் களிப்பி னோடு

போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்

        பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே.”

நெஞ்சே…!

தமிழே அன்னையாய் விளங்கப் பற்பல வகையால் சான்றோர் நூல்களைக் கற்று, அவை கூறும் பொருளும் முழுதறிந்து, அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட விரும்பி “உலகநீதி’  என்னும் நூலை இயற்றினேன்.

 ”உலகநாதன்” எனப் பெயர்கொண்ட யான் பாடிய இந்நூலைக் கற்றவர்களும்,   களிப்புடன்  பிறர் பாடும்பொழுது  காது கொடுத்துக் கேட்டவர்களும் நல்லறிவும் நலம்ஓங்கும் நல் வாழ்வும்  பெற்று  மகிழ்ச்சியுடன் புகழ் விளங்க  நீடூழி வாழ்வார்கள்.   

…………………………….முற்றிற்று……………………………………………..

வெள்ளி, 15 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்

        கொண்டைமேல் பூத் தெரிய முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

        துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

        வெற்றுயுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே….!

ஒரு வீட்டில் ஒற்றுமையாய் வாழும் நல்ல குடும்பத்தை இல்லாததைச் சொல்லி அவர்களுக்குள்ளே வேற்றுமையை வளர்த்துப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம்.

 

மகளிர் பூச் சூடும் முறையறிந்து பூச் சூட வேண்டும் ;  எவரும் ஏறிட்டுப் பார்த்து ஏளனம் செய்யாதவாறு கொண்டைக்கு மேல் பூத் தெரியும்படி முடிய வேண்டாம்.

 ஊரில் ஒழுக்கமுள்ளவனாக வாழ்வதே பெற்றோர்க்கு நாம்  பெருமைப்படுத்த செய்ய வேண்டிய செயலாகும் . அதனை விடுத்துப் தேவையில்லாமல் பிறர்மீது பழியைச் சுமத்தி அல்லல் பட்டு அலைய வேண்டாம்.

 

கேடுகெட்ட குணமுடைய மூர்க்கர்களோடு  நட்புடன் பழக வேண்டாம்.

 

மக்கள் உண்மையான பக்தியுடன் வணங்கும்  பெருமை மிகுந்த தெய்வத்தை இகழ்ந்து பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

வாழ்வாங்கு வாழ்ந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியோர்களை வெறுத்துப் பேச வேண்டாம்.

 

மாறுபாடு உடைய சூழலில் பிறந்து சிறந்து விளங்கும் பெண்ணாகிய வள்ளியின் கணவனாகிய முருகனைப் போற்றி வாழ்த்தி வணங்குவாயாக.

புதன், 6 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”புறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

        வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம்

திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

        தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

        ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

 

கண்டு ஒன்று கணாமல் ஒன்று  என்று புறம் பேசும் மூடர்களோடு சேர வேண்டாம்.

வேண்டாத வம்புகளில் சிக்கி  விதண்டாவாதம் செய்து குடிப்பெருமையை அழித்துவிடாதே.

எல்லாம் எனக்குத் தெரியும் என்று திமிராகப் பேசித் திரிந்து, எவரையும் மதிக்காது அடக்கமின்றி அலைந்து கலகம் செய்ய வேண்டாம்.

உயிர்கள்  மீது கருணைகொண்டு ஒழுக்கமுடன் வாழ இறைவனை நாள்தோறும் வழிபட மறக்க வேண்டாம்.

விளையாட்டாகக்கூடப் பொய்சொல்லக்கூடாது; ஒருவேளை உயிரே போகும் நிலைவரினும் அந்நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம்.

உன்னை இகழ்ந்து பேசியவர் உன் நெருங்கிய உறவினராயினும்   அவருடன் தன் மானம் இழந்து உறவு கொள்ள வேண்டாம்.

  குறி சொல்லும் குறவர் குடியில் பிறந்த பெண்ணின் பெருந்தகையாள் வள்ளியின் கணவனாகிய முருகப்பெருமானின் பெயரைச் சொல்லி நாள்தோறும் வழிபடுவாயாக.

 

செவ்வாய், 5 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“சேராத இடந்தனிலே சேர வேண்டாம்

        செய்ந்நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

        உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

        பிணைபட்டுத் துணைபேசித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

சேரத்தகாதவர்களோடு நட்புக் கொள்ள வேண்டாம்; சிற்றினம் சேராமை நன்று.

ஒருவர் செய்த உதவியை எந்நாளும் மறக்க வேண்டாம் ; செய்ந்நன்றி கொன்ற குற்றத்திற்கு ஆட்படாதே.

ஊராரைப் புரிந்து கொள்லாமல் ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கோள் மூட்டி ஊராரைப் பகைத்துக் கொள்ளாதே.

 வாழ்க்கையில் நன்மை தீமைகளில் உடன் நிற்கும் பண்புடைய உற்றார், உறவினர்களை மதித்துப் போற்றாது இழிவாகப் பேச வேண்டாம்.

பெயர் விளங்கும்படியான செயல்களைச் செய்யத் தவற வேண்டாம்.

ஆழம் தெரியாமல் காலை விடுவது போன்று நல்லவர் என நினைத்துப் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டு அலைந்து அல்லல்பட வேண்டாம்.

 பெருமை பொருந்திய குறவர் குலமகள் வள்ளியின் கணவன் முருகனை வணங்கி வாழ்த்துவாயாக.

 

திங்கள், 4 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…96.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…96.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“ கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

       கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம்

       பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

       எளியாரை எதிரியிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகுஆரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

       குமரவேல் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.”

எண்ணித்துணிக கருமம் என்றதற்கு இணங்க எச்செயலைச் செய்யத்துணிந்தாலும் நன்றாகச் சிந்திக்காமல் செய்ய வேண்டாம்.

 அன்றே செய்திருக்கலாம் ; செய்யாமல் விட்டுவிட்டேனே…! என்று இறந்தகாலத்தை எண்ணி வருந்திப் பேச வேண்டாம்.

 ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் இடத்திற்குப் போக வேண்டாம்.

உனக்கு உரிமையில்லாத பொது இடத்தைக் கள்ளத்தனமாகக் கவர்ந்து அதில் குடியிருக்க வேண்டாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைக் கைவிட்டு இரண்டாவதாக ஒருத்தியை மனைவியாக்கிக் கொள்ள வேண்டாம்.

 தன் மானத்துடன் வாழும்  எளியவர்களை  அவர்கள் ஏதும் இல்லாத ஏழைகள்தானே என்று இழிவாக நினைத்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாதே; சாது மிரண்டால் காடு கொள்ளாது.

 நெஞ்சே….!பறவைகள் நிறைந்த தினைப்புனத்தைக் காக்கும் வள்ளியின் கணவனாகிய முருகனின் திருவடியைப்புகழ்ந்து போற்றிச் செல்வாயாக.

ஞாயிறு, 3 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

        மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

        முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

        வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்

        திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

வேலையற்ற வீணர்களின் பேச்சைக்கேட்டுத் திரிய வேண்டாம்.

உற்றார் உறவினர், எவராயினும் உன்னை மதிக்கவில்லை என்றால் அவர் வீட்டு வாசலை மிதிக்காதே.

அறிவிற் சிறந்த பெரியோர் கூறும் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டு கடிந்து கொள்வாரோடு நட்புடன் பழக வேண்டாம்.

அறிவூட்டும் ஆசிரியரின் ஊதியத்தைக் காலம் தாழ்த்தாமல் கொடுத்துவிட  மறக்க வேண்டாம்.

வழிப்பறி செய்யும் கயவர்களோடு  நட்புக் கொள்ள வேண்டாம்.

சிறந்த புகழ் உடையவனும் ஒப்பற்ற வள்ளியின் கணவனுமாகிய முருகனின்  அருள்திறத்தை நாளும் சொல்லி மகிழ்வாயாக.