தமிழமுது –303 – தொல்தமிழர் இசை மரபு:163 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.- 1839 – 1898.
சுவாமிகள் அருளிய பண்ணிசைப் பாடல்கள். “சுவாமிகள் எழுதிய நூல்களில் குருபர தத்துவம், புலவர் புராணம், பழனித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம். வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம், அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, தில்லை ஆயிரம் திருமால் ஆயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, அருணகிநாதர் புராணம், முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
சுவாமிகள் மிகுந்த தமிழ் பற்று உடையவர் .
“மதுரத் தமிழை இகழ் தீயோர் ;
மணிநா அறுத்துக் கனலில் இட.”
என்று பாடும் அளவிற்குத் தமிழ் மீது பற்றுக்கொண்டிருந்தார்.
சுவாமிகள் பாடிய தில்லை பாதி, நெல்லை பாதி ,அழகிய வெண்பாக்களில் ஒன்று.
கீர்த்தி அறம்பெருமை கேடில்முத்தி என்பவற்றைச்
சேர்த்திகத்தில் நல்கவல்ல தில்லையே - மூர்த்தியிடம்
செந்திருவும் வெண்திருவும் சேர்ந்துவிளை யாடுகையால்
இந்திரனூர் ஒல்குநெல்லை யே (7)
முத்தி நல்கும் தில்லையின் பெருமையும் இறைவனிடம் செந்திருவும், வெந்திருவும் கொண்டு காட்சியளிக்கும் தோற்றம் இந்திரனார் மயங்கும் பெருமை கொண்டது நெல்லையே என்றும் போற்றிப்புகழ்கின்றார்.
பூதலமும் மீதலமும் போதின்மறைப் புங்கவனும்
சீதரனும் போற்றுதிருத் தில்லையே - நாதனிடம்
கோடிநலம் நீடுதென்றற் குன்றுதவு செந்தமிழால்
ஈடில்வள மார்ந்தநெல்லை யே (1)
என, நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணமாகும்.
பத்தர்களும் முத்தர்களும் பாவலரும் காவலரும்
சித்தர்களும் நத்துதிருத் தில்லையே - அத்தனிடம்
பஞ்சா யுதனேர் பலர்வாழும் பான்மையினால்
எஞ்சாத சீர்கொள்நெல்லை யே (2)
என்று குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாகும்.
நீதி மறையோர் நெருங்குதலால் நித்தநித்தம்
தீதிலறம் ஓங்குதிருத் தில்லையே - ஆதியிடம்
செந்நா வலரும் திருவேடத் தொண்டர்களும்
எந்நாளும் மன்னுநெல்லை யே (3) என்று நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் சார்ந்து வருவது சித்திர வண்ணமாகும். மேலும் இவ்வாறு சந்தம் நிறைந்த் பண்ணிசைப் பாடல்களைக் கண்டுணர்க. -இணையப்பதிவும்..1
சுவாமிகள், ஒரு புரட்சிப் பாவலர் எனலும்் தகும்.பெண்கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, இன்னபிற சமுகச்சீர்திருத்தங்களைமுன்னெடுத்துப் சுவமிகள் பாடியுள்ளார். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து ‘ஆங்கிலேயே அந்தாதி’ பாடி, உரிமைக் குரலை ஓங்கி ஒலித்துள்ளார். சுவாமிகள் இறைவன் அருளால் தமிழுக்குத் தன்னையே அர்ப்பணித்து அரும்பெரும் தொண்டாற்றிய அருட்சோதியாவார்.
.......................................தொடரும்.........................................