தமிழமுது –258– தொல்தமிழர் இசை மரபு:118 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம்.தொல்தமிழர் இசைமரபைக் கட்டிக் காப்பாற்றிய பெருமை உடையது சிலப்பதிகாரம். தமிழிலே ஒப்பற்ற இசைப்பாக்களாக இப்பொழுது நமக்குக் கிடைத்திருப்பன சிலம்பில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை என்னும் ஆறு காதைகளும் இசைப்பாக்களின் தொதியேயாகும். சங்க காலத்து இறுதிப்பகுதியைச் சார்ந்த சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திருக்குறை அப்படியே எடுத்தாள்கின்றன.. இக்காப்பியங்களுக்கு முற்பட்ட காலமே திருக்குறளின் காலமாகும்.
இயற்றமிழ்ப் புலவர் பெருமக்களும், இசைத்தமிழைப் பாணரும், நாடகத் தமிழை கூத்தரும் போற்றிய கலைஞர் பெருமக்களை மன்னர்கள்புரந்தனர். ‘முத்தமிழ் எனப் பழ்ந்தமிழ் மக்கள்கொண்ட நுட்பம் பெரிதும் வியத்தற்குரியது. மனத்தின் சிறந்த இயல்புகளாக அறிதல், உணர்தல், செயலார்றல் என்ற மூன்றையும் முறைப்படுத்திக் காட்டுவர் உளநூலார். இம்மூவியல்புகளும் முத்தமிழுள்ளே அடங்கும் பெற்றியனவாம். இயற்றமிழுள் அறிதற்கூறும், இசைத்தமிழுள் உணர்வுக்கூறும், நாடகத்தமிழுள் செயற்கூறும் அடங்குகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பெருமையுடன் திகழ்ந்த பழந்தமிழ்ச் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாகப் புகழ் மிக்குப் பொலிந்து சிறந்திருந்தது.
இசைமரபு வீழ்ச்சி:
சங்க காலத்திற்குப்பிறகு குறிப்பிட்ட காலப்பகுதியை சங்கம் மருவிய காலம் என்பர். இக்காலத்தை இருண்ட காலம் ( கி.பி. 250 – 600.) என்று வரையறுப்பர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் என்னும் வேற்று நாட்டவர் பாண்டிநாட்டின் மீது படையெடுத்து அதைக்கைப்பற்றினர். கி.பி. நான்காம் நூற்றாண்டில் சோழநாடும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. தமிழகத்தின் வட பகுதியான தொண்டைநாடும் நடுநாடும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. தமிழகம் அயலவரின் ஆட்சிக்கு அடிமைப்பட்டது.
...............................தொடரும்...............