தமிழமுது –201– தொல்தமிழர் இசை மரபு:61.
5. பரிபாடல் : தூம்பு - யாழ் - முழவு.
பரிபாடல்:
பண்டைக்காலத்து வழங்கிய தமிழர்க்குரிய இசைப்பாட்டு வகை. இதற்கு ஏற்பவே இந்நூலின் பல செய்யுட்களில் இசை பற்றிய செய்திகளும் அதற்கு இயைபுடைய கூத்துப்பற்றிய செய்திகளும் நிரம்பியுள்ளன. குறிப்பாக வண்டிசை தும்பியின் முரற்சி, அருவியின் முழக்கம் கார்மேகத்தின் அதிர்வு, மயிலின் ஆட்டம், கொடியின் நுடக்கம் முதலியனபற்றிய வருணனைகள் கற்பார் நெஞ்சைக் கவர்கின்றன.
இசைக்கலை பற்றியும் இசைக்கருவிகளை இயக்கும் முறை பற்றியும் பண்கள் பற்றியும் பல செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
“மிசைபடு சாந்தாற்றி போல எழிலி
இசைபடு பக்கம் இருபாலும் கோலி
விடுபொறி மஞ்ஞை பெயர்புடன் ஆட
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று. - 21: நல்லச்சுதனார் . செவ்வேள் : 30-38. இசை: கண்ணகனார் ; பண்: காந்தாரம்.
முழக்கமிடும் வெற்றி முரசினைக் கொண்ட முருகப்பெருமானின் திருப்பரங்குன்றத்தில் கார்மேகத்தின் முழக்கம் கேட்டவிடத்து, சுடரொளி வீசும் பொறிகளையுடைய மயிகள் மேலே உயர்த்தி, அசைக்கப்பட்ட ஆலவட்டம் போலத் தம் சிறகுகளை விரித்தனவாய் ஒன்று கூடிப் பெயர்ந்து ஆடும். இசைக்குரலைத் தம்பால் கொண்ட தும்பிகள் விரலைச் செறித்தும் விட்டும் இசையெழுப்பும் வங்கியத்தின் துளையிலிருந்து வெளிப்படும் இசைக்குப் பொருந்துமாறு இதழ் விரிந்த மலர்களில் இருந்து பாடும். அழகிய வண்டுகளின் திரள்கள் யாழிசை போன்ற தம் முரற்சியை மேலும் மேலும் மிகுவிக்கும். கொட்டும் அருவி நீரின் ஓசை, தாளத்தை உடைய மத்தள ஓசை போல் முழங்கும் இங்ஙனமாகப் பல இடத்திலிருந்தும் பரவிய இசைகள் அனைத்தும் ஒருங்கே ஒலிக்கும்.
(இரங்கும் - முழங்கும் ; சாந்தாற்றி - ஆலவட்டம் ; எழிலி - மேகம் ; விடு பொறி - மின்னுகின்ற புள்ளிகள் ; பெயர்பு - பெயர்ந்து ; தூம்பு - குழல் ; யாணர் - அழகு , புது வருவாய் ; பாணி - தாளம்.)
.........................................தொடரும்.................................................