தமிழமுது –226– தொல்தமிழர் இசை மரபு:86.
பத்துப்பாட்டு- 4. பெரும்பாணாற்றுப்படை :
பாணர் - விறலியர் பெறும் பரிசில்:
பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
”ஆடுவண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி
உரவுக் கடல் முகுந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு
புனை இருள் கதுப்பகம் பொலிய பொன்னின்
தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண்டன்ன வால் உளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
அரிதோர் நல்கியும் அமையான் செருத் தொலைத்து
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும்படை தரீஇ
அன்றேவிடுக்கும் அவன் பரிசில். - 481 – 493.
இருண்ட வானத்தின்கண் திங்கள் போன்று வண்டுகள் மொய்க்காத - தீயிடத்தே கிடந்து மலர்ந்த வெண் பொற்றாமரையை நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி, வலிய கடலின் நீரை முகந்து கொண்ட மிகிலினின்றும் பகற் காலத்தே பெய்யும் மழைத்துளி ஊடே மின்னல் ஓடினாற் போன்று கைகொண்டு செய்யப்பட்ட கூந்தல் அழகுறும்படி பொன்னாற் செய்து தொடுத்தல் அமைந்த மாலையை விறலியர் சூடத் தருவான் மன்னன் ; மேலும் குதிரை நூல் கற்றோரால் நல்லன இவை என்று புகழப்பட்ட மாண்பு உடையனவும், திருப்பாற் கடலிடத்தே உள்ள வெண்சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளிய பிடரி மயிரையுடையனவும், தம்மினத்தோடு இயந்து தொழில் செய்வனவும் ஆகிய சிறந்த குதிரைகள் நான்கினை ஒரு சேரப் பூட்டிய பொன்னாற் செய்த தேரினைத் தருவான் ; தந்தும் கொடை விருப்பம் தவிரப்பெறாதவனாய்த் தன்பால் வந்து எதிர்த்த பகைவர்களை வென்று அவர்விட்டுச் சென்ற ஏறு குதிரைகளையும் பசிய சேணங்களையும் பிற பரிசில்களையும் தந்து நீ சென்ற அற்றை நாளிலேயே உனக்கு விடை தருவான் அவ்வள்ளல்.
பண்டைய நாளில், தம்மை நாடி வந்த பாணர்க்குப் பொற்றாமரை மலரையும் விறலியர்க்குப் பொன் மாலையும் பரிசிலாகத் தருவது மன்னர்களது வழக்கம்.
(அழல் அவிர் தாமரை - தீயில் மலர்ந்த பொன் தாமரை. ; நீடு இரும் பித்தை - நீண்ட கரிய மயிர். ; உரவுக்கடல் - வலிய கடல் ; பருவ வானம் - பருவ காலத்து மேகம்.; கதுப்பு - கூந்தல். ; மால் கடல் - திருமாலிம் பாற்கடல். ; நால்கு - நான்கு. ; உளை - பிடரி மயிர்.; அரித்தேர் - காற்றை ஒத்த தேர். ; செரு - போர். ; ஒன்னா - ஏவல் கேளாத .; தெவ்வர் - பகைவர். ; உலைவிடம் - புறமுதுகிட்டு ஓடிய இடம் ; இவுளி - குதிரை. ) ..................................தொடரும் ........................................