தமிழமுது –293– தொல்தமிழர் இசை மரபு:153 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - சிற்றிலக்கியங்கள் :
சிற்றிலக்கியங்களுக்கும் யாப்பு இலக்கண விதிமுறைகள் அமைக்கப்பெற்றமையால் இன்றைக்கும் தமிழ் யாப்பு போற்றப்பெறுகின்றது. இந்த அமைப்புமுறை இல்லையென்றால் இன்றைய புதுக்கவிதை உலகில் தமிழின் தொன்மைச் சிறப்பு அறிய இயலாது போய்விடும். இன்றைய சிற்றிலக்கியங்களைப் பாடுபவர்களும் தொன்மை விதிகளைப் பின்பற்றியே வருகின்றனர். கடம்பரப்பர் பாடிய ‘அண்ணாதுரைக் கோவை’ இந்நூற்றாணடு நூலாக இருப்பினும் பழைய மரபுப்படி கட்டளைக் கலித்துறை யாப்பிலேயே பாடப்பட்டுள்ளது. அதுபோல, ‘ஆனந்தரங்கக் கோவை’ன்பாடிய தியாகராய தேசிகரும் கட்டளைக் கலித்துறையிலேயே பாடியுள்ளார்.
சந்தச் சிறப்பு : சிற்றிலக்கியங்கள் கவிதை யாப்பு இலக்கணங்களைப் பாதுகாத்து - தமிழுக்குச் சிறப்புச் சேர்ப்பதோடு இசைப்பாக்களையும் தன்னுடைய அமைப்பாகக் கொண்டு தமிழுக்கு உயர்வு தருகின்றன. கும்மி, சிந்து, குறவஞ்சி, ஏற்றப்பாட்டு, கோலாட்டப்பாட்டு, திருப்புகழ், நலங்குப்பாட்டு, உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களின் சாயலைப்பெற்று பல்வேறு சந்தங்களை உடையதாகித் தமிழின் இசை நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
ஆனந்தக் களிப்பு என்ற சிற்றிலக்கிய வகையானது இரண்டடிகளாய் ஓர் எதுகை உடையதாய் ஒவ்வோர் அடியும் மூன்று சீர்களும் தனிச்சொல்லும் பின்னும் நான்கு சீர்கள் உடையதாய், சிந்து நடையில் பாடப்பெறுவதாகும்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி.”
என்பது கடுவெளிச்சித்தர் பாடிய ஆனந்தக்களிப்பு என்ற சிற்றிலக்கியமாகும். இவ்விலக்கியத்தில் இசையோடு இசைக்கருவிகளும் இயைந்து இருக்கிறது. இதுபோலக் கப்பல் பாட்டு, ஓடப்பாட்டு என்றும் கூறப்பெறுகின்ற இலக்கிய வகையும் சந்தத்தைக் காக்கும் இலக்கிய வகையாகும். இராமலிங்கக் குருக்கள் என்பவர் இயற்றிய மதுரை மீனாட்சி கப்பற் சிந்து எனும் நூலில் அமைந்துள்ள.....
“ ்ஏலேலோ -ஏலேலோ - ததிமை
ஏலேலோ - ஏலேலோ
ஆத்தாளே ஈசுவரியே எங்கள்
அம்பிகை அண்டமெல்லாம்
பூத்தாளே நின்மீதில் - நன்றாய்ப்
புகழ்ந்துரைக்கும் கப்பலுக்கு ஏலேலேம். ” என்ற பகுதி சந்தச்சுவையோடு காணப்பெறுவதாகும். ..........................................தொடரும்.................................