ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-44.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன்.
தொடர்ச்சி .............!
”மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” என்பதன் உரையில் “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும், உயிரும், பாசமும் அனாதி, பதியும் பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க’ என்று சைவசித்தாந்தக் கருத்தை எழுதுகின்றார்.
“ மந்திரப் பொருள் வயின் ஆஅ குநனவும் என்பதற்கு உதாரணமாக ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்தைக் குறிப்பால் காட்டும் பாடலைக் காட்டுகின்றார்(32)
.வடமொழி பயின்ற அந்தணர்:
இவர் வடமொழி பயின்ற அந்தணராக இருக்கலாம். தலைமை பற்றிய வழக்கிற்குப் ‘பார்ப்பார் வேதம்’ என்று உதாரணம் காட்டுகின்றார்.. சொல் என்பதற்கு வேதம் என்று பொருள் உரைக்கின்றார்.(55) இந்நூல் செய்தான் வைதிக முனிவன் என்கிறரர்,(55). இவ்வாறு சைவசமயத்தைப் போற்றி உரைக்கின்றார்.
உரையின் சிறப்பியல்புகள்:
தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை எழுத்துகளால் குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில் “இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட்ட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது” என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார்.
“பெண்மை அடுத்த மகன் என் கிளவி”க்கு விளக்கம் எழுதுகையில் “விளையாட்டு பருவத்துப் பெண் மகளைப் பெண் மகன் என்றல் பண்டையோர் வழக்கு.” (159) என்கிறார். சேனாவரையர் இச்சொல் வழங்குமிடத்தைக் குறிப்பிடுகின்றார். தெய்வச்சிலையார் காலத்தில் அச்சொல்வழக்கு வீழ்ந்ததால் இவ்வாறு கூறுகின்றார்.
இதனால் சேனாவரையர்க்கும் தெய்வச்சிலையார்க்கும் உள்ள கால இடைவெளி புலப்படும். எச்சப்பெயர் என்பது, பெயரெச்சம் என மொழி மாறி நின்றது இவர் கருத்தாகும்.(201)
புதிய விளக்கம் .................தொடரும்..................................