. தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -7.
வழிபாடுகள்: பெருந்தெய்வங்கள் -
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வு:
தொல்காப்பியத்தில் “வருணன் மேய பெருமணலுலகமும்” என்று வாரணன் என்னும் பெயரை வடமொழி வடிவிற் குறித்திருப்பது தவறாகும். “வாரணன் மேய ஏர்மணலுலகமும்” என்றிருத்தல் வேண்டும்.
ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளுள், சேயோன் வழிபாடும் மாயோன் வழிபாடும் பிற்காலத்தில் இருபெருஞ் சமயங்களக வளர்ச்சியடைந்தன.
ஐந்திணைத் தெய்வங்களும் தமிழ்த் தெய்வங்களே என்றும், பிற்காலத்தில் ஆரியர் அவற்றைப்பற்றிப் பல்வேறுகதைகள் (புராணங்கள்) கட்டி விட்டனர். என்றும் என் “தமிழர் மதம்” என்னும் நூலில் விரிவாய் விளக்கப் பெறும்.
கடவுள் நெறி :
ஊர்பேர் குணங்குறியற்று, மனமொழி மெய்களைக் கடந்து எங்கும் நிறைந்திருத்தல் . எல்லாம் அறிந்திருத்தல், எல்லாம் வல்லதாதல், என்றும் உண்மை, அருள் வடிவுடைமை, இன்பநிலை நிற்றல், ஒப்புயர்வின்மை, மாசுமறுவின்மை ஆகிய எண் குணங்களை உடையதாய் எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தழித்து வரும் ஒரு பரன்பொருள் உண்டென்று நம்பி, அதனை வழிபடுவதே கடவுள் நெறியாம், இது சித்தமதம் எனவும்படும்.
எல்லாவற்றையும் கடந்திருப்பதனாலேயே இறைவனுக்கு கடவுள் எனப் பெயரிட்டனர். ஆரியர் வந்தபின் இச்சொல் முதலில் பெருந்தெய்வங்கட்கும் பின்பு சிறு தெய்வங்கட்கும் இறுதியில் மக்களான முனிவர்க்கும் வழங்கி இழிவடைந்துள்ளது.
திருவள்ளுவர் தம் நூன்முகத்தில் கூறியிருப்பது உருவமற்ற கடவுள் வழுத்தே, தமிழரின் உருவ வணக்கமல்லாக் கடவுள் வழிபாட்டை “உளியிட்ட கல்லையும்” “எட்டுத் திசையும்” என்னும் பட்டினத்தடிகள் பாடலையும் “அங்கிங்கெனாதபடி” “பண்ணேன் உனக்கான பூசை” என்னும் தாயுமானவர் பாடலையும் நோக்கி உணர்க.
இதன் விரிவை என் தமிழர் மதம் என்னும் நூலில் கண்டுகொள்க. கடவுளையும் மறுமையையும் நம்பாத சிறு கூட்டத்தாரும் அக்காலத்தில் இருந்தனர். ஆயின், அறிஞர் அவரைக் கண்டித்தனர். .................................தொடரும்...........................