தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -10.
தொல்தமிழர் முருகன் வழிபாடு ; ஆறுபடைவீடுகள்.
முனைவர் இரெ. குமரன்:
திருமுருகாற்றுப்படை . திருஆவினன்குடி .- 3.
முருகன் மடந்தையொடு வீற்றிருத்தல் :
” தாஇல் கொள்கை மடந்தையொடு சிலநாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்..” நக்கீரர்- 175.
” குற்றமற்ற அறக் கற்பினையுடைய தெய்வயானையாருடனே சில நாள் திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் முருகன்.”
திருவாவினன்குடி - இப்போது பழனி என வழங்கும் ஊர்; இது சங்கக் காலத்தில் ‘பொதினி’ என்ற பெயருடன் ஆவி என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய் இருந்தது. இதன் அருகில் ஆய்க்குடி என இருக்கும் ஊர் ‘ஆவிகுடி’ என்பதன் மரூஉ. இப்பகுதியைக் கல்வெட்டுக்கள் ‘வையாவி நாடு’ என்று குறிக்கின்றன.
முருகன் புகழைப் பாடுவார் இயல்பு :
“புகை முகந் தன்ன மாசுஇல் தூ உடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர.” - நக்கீரர். 138 – 142.
பால் ஆவியன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மையுடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர், இனிய யாழ் நரம்பினை இயக்க........!
மகளி பலரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்ல ...... முருகப்பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல , அவர்களைப் பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் யாழை மீட்டுக்கொண்டே பின்னால் வர, அவர்களுக்குப் பின்னால் திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.
......................................தொடரும்..................................