ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-34.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- சேனாவரையர்: மு.வை.அரவிந்தன்.
ஆசிரியப்பணி:
சேனாவரையர் ஆசிரியப்பணிபூண்டு வாழ்ந்தவர் என்பதைக் கல்வெட்டால் மட்டுமின்றி, அவர் உரையாலும் அறியலாம்.
”மாணாக்கர்களுக்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக்கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு (உரையாசிரியர்க்கு) இயல்பு” என்று முதற் சூத்திர உரை விளக்கத்திலேயே மாணாக்கரை நினைவுபடுத்துகின்றார். தம் உரையை ஓர் ஆசிரியர் தம் மாணாக்கர் பலர்க்குப் பாடம் சொல்லும்போது மாணவர் எழுப்பும் வினாவும் ஆசிரியர் கூறும் விடையும் அமையுமாறு எழுதிச் செல்கின்றார்.
பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்” (392) என்னும் சூத்திரத்திற்கு, நல்லாசிரியர் ஒருவர் தம் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் முறையில் உரை எழுதுகின்றார்.
“உறுகால் என்புழி உறு என்னும் சொற்குப் பொருளாகிய மிகுதி என்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒரு பொருட்கிளவி கொணர்ந்து உணர்த்தல் உறாது, கடுங்காலது வலி கண்டாய் ஈண்டு ‘உறு’ என்பதற்குப் பொருள் என்று தொடர் மொழி கூறியாயினும் கடுங்காலுள்ள வழிக்காட்டி யானும் அம்மாணாக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்தல் வல்லனாயின் அப்பொருள் திரிபுபடாமல் அவன் உணரும் என்றவாறு.
” இவ்வுரைப்பகுதியிலிருந்து சேனாவரையர் தம் மாணாக்கர்கட்குப் பாடம் சொன்ன முறையும் அப்போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று அறியலாம். உரையில் இடம் பெற்றுள்ள வேறு சில உதாரணங்களும் சேனாவரையர் ஆசிரியர் என்பதைத் தெளீவாக உணர்த்துகின்றன.
உரையின் இயல்பு:
சேனாவரையர் உரை, திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் உள்ளன. கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல், இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழ வேண்டும். பல முறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை,
சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றிற்கே உரை கண்டிருப்பினும் தொல்காப்பியம் பற்றி முழுநோக்கு உடையவர், எழுத்தையும் பொருளையும் அவர் சிங்க நோக்காகக் கண்டு விளக்கம் எழுதுகின்றார். .........................................................தொடரும்..........................