ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-51.- ஓர் அறிவியல் அறிஞர்.
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
தொல்காப்பியம் புள்ளி:
“எணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” குறள்.392.
“எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும் உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும் அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று” என்பார் உரையாசிரியர்.
எண்ணும் எழுத்தும்:
எண் என்பது பல பொருள் குறித்த ஒரு சொல்.
எண் - கணக்கிடல் (Calculation ).
இலக்கம் ( Number.) கணிதம்(Mathaematics.) மனம் (.Mind.) எட்டு (Eight.)
எண்சுவடி - பெருக்கல் வாய்பாடு ; எண்ணல் - எண்ணலளவை (Numeration.) ; எண்ணு - கணக்கிடு (To count, To calculate.); எண்மானம் - எண்ணை எழுத்தால் எழுதுதல்; எண்கோணம் - எட்டுக்கோணம்.; எண்செய்யுள் - எண்ணால் பெயர் பெறும் நூல். எண்ணிலி - எண்ணிலடங்காத , எண்ணிறந்த.; எண்ணூல் - கணித நூல்.; எண்பெரும் பிரிவு - ஒருமை, பன்மை எண். ;எண்ணுப்பெயர் - 1, 2, 3 முதலான எண்குறித்தபெயர். ; எண்ணு முறைப்பெயர் - ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது என வருவது.
எழுத்து :
ஒலி எழுத்தைக்குறிக்கும் ஒரு பொதுக்குறியீடு. (உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம்.) கணக்குத் தவிர்ந்த ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் எழுத்து என்ற சொல்லால் குறிப்பது பழந்தமிழ் மரபு. மேற்காட்டிய சொற்கள் யாவும் தொல்காப்பியர் காலத்தே வழக்கில் இருந்தவையாகும். கணிதத்துறையில் தமிழர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையே அச்சொற்கள் புலப்படுத்துகின்றன.
குறியீடுகள் : (Symbols.)
தமிழர்களின் பண்டையக் குறியீடுகள் உருவக் குறியீடுகளே. (பகல் என்பதைக்குறிக்க சூரியன் படம்) முத்திரை பதிக்கப்பட்ட காசுகள், கல்வெட்டுக் குறியீடுகள் மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையன. பழங்காலத்தில் எண் குறியீடுகளை எழுத்தால் எழுதினர். செப்புப் பட்டயங்களில் (கி.பி 4..) எண் குறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டு உத்திரமேரூர் கல்வெட்டில் முதல் பத்து எண்களைக் காணமுடிகிறது. மேலும் நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கான குறியீடுகளையும் காண முடிகிறது.
.....................எண்கள், குறியீடுகள்: ...........தொடரும்..................................