உலகத் தமிழ் ஆர்வலர்கள் பார்வைக்கு:
.தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் - 1.
வழிபாடு:
முன்னுரை: நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
தொன்மைத் தமிழ் இலக்கனமாகிய தொல்காப்பியத்தில் கடவுளரைப் பற்றியும், வழிபாட்டினைப்பற்றியும் பலவிடத்துக் குறிப்புக்கள் உள்ளன. ஆனால், கடவுள் வடிவினைப் பற்றியாவது, கோயிலைப்பற்றியாவது கூறியிருப்பது புலனாகவில்லை.
“மேவிய சிறப்பினேனோர் படிமைய” என்னும் அகத்திணையியற் சூத்திரப்பகுதிக்கு “நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்புடைய மக்களையல்லாத தேவரது படிமையாவாகிய பொருள்கள்” என இளம்பூரணர் உரை கூறினார். நச்சினார்க்கினியர் இங்ஙனம் கருதிற்றிலர்.
உயிர் மயங்கியல் ஓகாரவீறு கூறுமிடத்தில் “இல்லொடு கிளப்பினியற்கையாகும் “ (தொல். எழுத். 294.) என ஒரு சூத்திரம் இருத்தல் கொண்டு “கோயில்” என்னும் பெயர் வழக்கு அப்பொழுது இருந்ததாகக் கொள்ளப்படுகிறது. பெயர் இருத்தலின் அதற்குப் பொருளும் இருந்திருக்கவே வேண்டும். ஆயின் கோயில் என்பது அரசமனையைக் குறிக்கும் பெயராகத் தொன்னூல் பலவற்றினும் பெரு வழக்காக வழங்கியிருத்தலின், தொல்காப்பியத்தாற் பெறப்படுவது இன்னதெனத் துணிதற்கரிதாகின்றது.
இனி, கடைச்சங்க நாளிலே எழுந்த பனுவல்களில் கடவுள் இருக்கையைக் குறித்தற்குக் கோயில் என்னும் பெயரும் வேறு பல பெயர்களும் வழங்கியுள்ளன. “முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே” (சிலம்பு) என்பதில் நகர் என்பது அப்பொருட்டாதல் காண்க. தேவகுலம் என்பது அகப்பொருளதாதல் இறையனாரகப் பொருளுரையால் அறியப்படும் இனிப் பலவற்றையும் விடுத்து அக்காலத்துத் தமிழக வரலாறனைத்தையும் வரித்த சித்திரம் போலுள்ள சிலப்பதிகாரம் ,
“பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேளணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்.”
எனக் கடவுள் இருக்கையைக் குறிக்க கோயில் என்னும் சொல் பயின்றுள்ளமை காண்க. இனி, கோட்டம் என்னும் பெயர் பெரிதும் பயின்றுள்ளது, பத்தினிக்கோட்டம் என்றும் பயின்றுள்ளது. நியமம் எனும் சொல்லும் இடம்பெற்றுள்ளது, அருகன் கோயிலைக் குறிப்பதற்குப் ’பள்ளி’ முதலிய பெயர்களும் உள்ளன. ..........................தொடரும்.....................................................