ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-43.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- பேராசிரியர்: மு.வை.அரவிந்தன்.
ஆராய்ச்சித்திறன் :
பல சொற்களின் பொருளை மிக நுண்மையாக ஆராய்ந்து விளக்குகின்றார்:
மொழிபெயர்ப்பு - பிற பாடையாற் செய்யப்பட்ட பொருளைத் தமிழ் நூலாகச் செய்வது.
வனப்பு -- பெரும்பான்மையும் பல உறுப்புத் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு.
தத்தை - பெருங்கிளி; கிளி - சிறு கிளி. மேலும் பல உள.
தொல்காப்பியர் மீது கொண்ட மதிப்பு :
தொல்காப்பியர் நண்டினை நான்கறிவுடைய உயிராக நூற்பா செய்துள்ளமையின், அதனைக் கண்ட பேராசிரியர் “இதற்கு (நண்டிற்கு) மூக்கு என்ற பொறி இலதே” எனச் சற்றுத் திகைக்கின்றார். இங்கு ‘வண்டு’ என்றே பாடம் இருந்திருக்க வேண்டும் என்று யாழ்ப்பணம் சி. கணேசையர் அவர்கள் சான்றுகளுடன் குறிப்பிடுவது பெரிதும் பொருத்தமாகும் ஆனால் தாம் நினைத்தவாறு பாடத்தை மாற்ற முனையாத அக்காலத்தில் பேராசிரியருக்கு இத்தகு சான்றுகள் கிடைத்திருக்க இயலாத அக்காலத்தில் “ஆசிரியனை மறுப்பதா? ஏற்பதா,...? என்ற சிக்கல் வந்து நிற்கிறது. அதனை விடுத்துப் பேராசிரியர் எழுதுகின்றார் ; “நண்டிற்கு மூக்கு உண்டோ எனில் அஃது ஆசிரியன் (தொல்காப்பியர்) கூறலால் உண்டு என்பது பெற்றாம்” பழமொழி போல் எடுத்துக்கூறக்கூடிய சிறப்புடன் திகழும் இத்தொடர் பேராசிரியரின் ஆசான் பக்தியைப் புலப்படுத்துகின்றது.
இலக்கியத் திறனாய்வாளர்:
பேராசிரியர் உரை விளக்கம் சிறந்த இலக்கியத்திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளையும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள, இவரது உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும நுட்்பமாகவும் சிறந்த மேற்கோள் தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்கிகின்றார். இலக்கியக் கலைமாட்சி இலக்கியக் கொள்கை, இலக்கியத்திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும் இவரது உரையில் அவைபற்றிய அடிப்படையான உண்மைகளைக் காணமுடிகிறது இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு. முற்காலத்துக் கொள்கைகளை பிற்காலாத்துக் கொள்கைகளோடு (அணி, யாப்பு பற்றியவை) ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமை காணுதல், வடமொழி நெறியை நினைவூட்டித் தமிழ் நெறியை விளக்குதல் போன்ற ஆய்வு நெறிகளை இவரிடம் காணலாம்.
..உரையாசிரியர், தெய்வச்சிலையார்.....................தொடரும்....... .