.தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் - 2.
திருவிழா:
முன்னுரை:
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
திருவிழா : விழவு என்பது கொண்டாட்டம் அல்லது களியாட்டத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல். இது சாறு என்னும் பெயராலும் வழங்கும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் “ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் என்றும் “சாறயர்களத்து வீறு பெறத்தோன்றி என்றும் இரு சொல்லும் பயின்றிருத்தல் காண்க. மக்கள் யாவரும் இன்பத்தையே விரும்புகின்றனரென்பது கண்கூடாய் உண்மை. இவ்வுலகிலே மக்கள் இன்ப நுகர்ச்சியின் பொருட்டுச் செய்யும் கொண்டாட்டமெல்லாம் விழவு என்னும் பெயரால் வழங்குதற்குரியனவே. ஆற்றிலே புதுப்புனல் வந்துழி ஆடவரும் மகளிரும் சென்று நீராடி இன்பம் துய்க்கும் விளையாட்டுகள் ‘புதுப்புனல் விழவு எனக் கூறப்படும் இங்ஙனமே “கடற்கரைக் கானல் விளையாட்டு, உண்டாட்டு ஆய விழாக்கள் மிக்கிருந்ததென்பது பழைய தமிழ் நூல்களினால் அறியப்படுகின்றது. அகப்பொருளிலே ஊர்துஞ்சாமை என்பதோர் துறையுளது ஊரில் உள்ள எல்லாரும் விழாக் கொண்டாடுதலால் இரவில் தியிலாது இருப்பர் என்பது அதனாற் பெறப்படுகின்றது.
இங்ஙனம் நகரங்களிலும், ஊர்களிலும் விழாச் செய்தல் மிக்கிருந்த செய்தியானது அக்காலத்து மக்கள் செல்வத்திலும் இன்பத்திலும் சிறந்திருந்தனர் என்பதைப் புலப்படுத்தும். செல்வமும் இன்பமும் நாட்டின் அழகு செய்வன என்பது . “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து “ அஃதாவது நோயின்மையும் செல்வம் ,விளைதல், இன்பம் ,காவல் என்றிவை உடையுமையுமாகிய இவ்வைந்தினையும் நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பரிமேலழகர்) என்றுரைத்தார் திருவள்ளுவர். பழைய புலவர்கள் “விழவு மலி மூதூர்’ விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் ு(பெரும்பா. 411,) என்று சிறப்பித்துக் கூறியிருப்பது விழா ஒன்றிலிருந்தே செல்வப் பெருக்கு முதலியவற்றை அறிந்து கொள்ளலாகும் என்பதனைக் காட்டுகின்றது. .........................................தொடரும்.......................