தமிழமுது –256– தொல்தமிழர் இசை மரபு:116 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம்.
யாழிசையில் பிறந்த ஊழ் வினை...!
மாதவியானவள் ‘இவன் வேறு குறிப்புடையன்’ என்றெண்ணிப் புலந்து, அவன் கையிலுள்ள யாழை வாங்கி, தான் வேறு குறிப்பில்லாதவளாயினும் அக்குறிப்புடையாள்போல் அகப்பொருட்சுவை தழுவிய பலவகை வரிப்பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தாள். அதனைக்கேட்ட கோவலன், வேறொருவன் மேல் காதல் கொண்டு இவள் பாடினாள்’ என்றெண்ணி, ஊழ்வயத்தால் அவள் மேல் வெறுப்புற்று, விடுத்துப் போயினான். மாதவியும் மிக்க வருத்தமெய்திய மனத்தினளாய் வண்டியிலேறித் தன் மனையை அடைந்து, வானை அளாவிய மேனிலையிலே வேனிற் பருவத்திற்குரிய நிலா முற்றத்தை எய்தி, வீணையைக் கையிலேந்தி மடற்றாற் பாடுதலுற்று அது மயங்கினமையின், பின் வீணையை வாசிக்க அதுவும் மயங்கிற்று.
அப்பொழுது மாதவி கோவலனுக்குத் திருமுகம் விடுக்கும் கருத்தினளாகி, தான் அணிந்திருந்த சண்பகம் முத லியவர்றால் நெருங்கத் தொடுத்த மாலையின் இடையேயுள்ள தாழம்பூவின் வெள்ளிய தோட்டிலே அதற்கு அயலதாகிய பித்திகையின் முகைகொண்டு செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்து ‘ இப்பொழுது இளவேனில் என்பான் இளவரசன்’ ; அவன் பிரிந்துறைவார்க்கு நலம்புரியான் ; அவனே அன்றி, அந்திப்பொழுதாகிய யானையின் பிடரிதோன்றிய திங்கட் செல்வனும் செவ்வியனல்லன் ; இதனை அறிவீராக ‘ என்று தன் மழலைச் சொல்லால் பேசிப் பேசி எழுதி அதனை வசந்தமாலை என்னுந் தோழி கையில் கொடுத்து ‘இதிலுள்ள வாசகங்களை எல்லாம் கோவலற்கு ஏற்பச்சொல்லி அழைத்துவருக !’
என்று கூறி விடுத்தாள். அவள் சென்று அதனை கோவலற்கு அளித்து அவன் அத்திருமுகத்தை மறுக்கவே வாட்டத்துடன் விரைந்து சென்று அதனை மாதவிக்கு உரைத்தாள். மாதவி,’மாலை வாராராயினும் காலையில் அவரைக் காண்போம்’ என்று சொல்லி மலர் அமளியின் கண்ணே செயலற்ற நெஞ்சமுடன் வீழ்ந்து, இமை பொருந்தாது கிடந்தாள். ‘கோவலன் மீண்டு தன் மனையினுள்ளே சென்று கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டான்.--ந.மு.வே. நாட்டார்.
யாழேறி வந்த ஊழ்வினையின் பயனைத்துய்க்க மதுரை நோக்கி மனைவியுடன் புறப்பட்டான்.
”சிலம்பில், புகார்க்காண்டத்தில் உவகைச் சுவையும், மதுரைக்காண்டத்தில் அவலச்சுவையும் வஞ்சிக்காண்டத்தில் வீரச்சுவையும் மிக்கிருப்பினும் எட்டுவகை இலக்கியச் சுவைகளும் நூலெங்கும் செறிந்து விளங்குகின்றன. இளங்கோவடிகள் இலக்கிய, இசை, நாடக நுட்பங்களைப் புகுத்தியும் உத்திகளைக் கையாண்டும் கற்பார் நெஞ்சை கனிவிக்கின்றார்.”-- பேரா. சிவா.
......................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக