தமிழமுது –257– தொல்தமிழர் இசை மரபு:117 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகள்:
சிலப்பதிகாரத்திம் முதல் காதையாகிய மங்கலவாழ்த்துப்பாடலின் இறுதியில் கோவலன் - கண்ணகி இருவரையும் வாழ்த்தியவர்கள் இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழமன்னனையும் வாழ்த்துகின்றனர். அடியார்க்குநல்லார் அச்சோழன் கரிகால்பெருவளத்தான் என்று குறிப்பிடுகின்றார். இந்திரவிழவூரெடுத்த காதையிலும் கரிகாலனின் வடபுல வெற்றி சிறப்பிக்கப்படுகிறது. கானல்வரியில், சோழர் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாத காவிரிபற்றிப் பேசப்படுகிறது. எனவே கோவலன் கண்ணகி திருமணத்தின்போது ஆட்சி செய்த சோழப்பேரரசன் கரிகாலன் ஆவான் ; இலங்கை அரசன் வசபன் (கி.பி. 67 – 111) சோழன் தன்மீது படையெடுத்துவருதல் கூடும் என்று அஞ்சிப் படைவலிமையைப் பெருக்கினான் என்பதும், வங்கம் நாசிகதிதிஸ்ஸன் (கி.பி. 111- 114.) என்னும் இலங்கை அரசன் காலத்தில் சோழன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று பன்னீராயிரம் சிங்களவர்களைச் சிறைப்பிடித்துவந்து காவிரிக்குக் கரை கோலினான் என்பதும் இலங்கை வரலாறு. காவிரிக்குக் கரையெடுத்தவன் கரிகாலனே என்பதைத் தெலுங்குச்சோழர் கல்வெட்டுக்களும் உறுதி செய்கின்றன, கரிகாலன் காலம் கி.பி.75 - 114. என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும்.
சிலப்பதிகாரம் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளால் செய்யப்பட்டமையால் (சான்றுகள் இல்லை) செங்குட்டுவனின் காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியே சிலப்பதிகாரத்தின் காலமுமாகும்.
சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றுதற்குரிய தகுதியும் உடையது. சிலப்பதிகாரத்தைத் ’தமிழர் உலக நாகரிகத்திற்கு அளித்த கொடை’ என்று மேலைநாட்டு அறிஞர் போற்றுவர். --பேராசிரியர் -சிவா.
ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரம் காலத்தால் பழமையானது ; காப்பியப் படைப்பால் முதன்மையானது ; கருத்துச் செறிவால் தலைமையானது ! கலைகளின் செழுமையால் முழுமையானது. இயல், இசை நாடகக் கூறுகள் சிலப்பதிகாரத்தின் இடையிடையே கலந்துள்ளமையால் “இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள்” என்றும் உரைப்பாட்டும் இசைப்பாட்டும் விரவி வருவதால் ‘உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் என்றும் நாடக உறுப்புக்களைக் கொண்டுள்ளமையால் நாடகச் செய்யுள் என்றும் சிலப்பதிகாரம் பெயர் பெறும். இளங்கோவடிகள் உலக மக்களுக்குச் சில அறங்களை உணர்த்த விரும்பி,
மூன்று பேருண்மைகளைச் சிலப்பதிகாரம் என்னும் பாட்டுடைச் செய்யுள் மூலம் யாம் நிலை நிறுத்துவோம்.’ என்று பதிகத்தில் கூறியுள்ளார் இளங்கோவடிகள்.
“ அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக
நாட்டுதும் யாமோர் பாட்டிடைச் செய்யுள்.” பதிகம் .
தொல் தமிழர் இசைமரபின் எழுச்சியாக முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம் விளங்குவதை இயன்றவரை சான்றோர் வழிநின்று உரைத்துள்ளேன். ........................தொடரும்....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக