தமிழமுது –184– தொல்தமிழர் இசை மரபு:44 .
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
தொல்காப்பியர் கூறும் பாட்டு:
தொல்காப்பியர் கூறும் பாட்டு: பாட்டு என்பதற்கு அடியின் சிறப்பே முதன்மை என்கிறார். “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே “ 1292.
பண்ணத்தி: “ பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல் பண்ணத்தி இயல்பே.” -1436. அஃதாவது பாட்டிடைக் கலந்த பொருளை யுடையனவாய். சிற்றிசையும் பேரிசையும் ஆகி இசைத்தமிழில் கூறப்பெறுவன பண்ணத்தியின் இயல்பு.என்பார். பண்ணத்தி 2*6 - ஆகப் பன்னிரண்டு அடிகளை உடையதாக வரும்; அதைவிட மிக்க அடிகளைப் பெற்று வந்தாலும் தவறில்லை என்றாராக.
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்”- பாடல் சான்ற இலக்கண மரபான் அமைந்த ஒழுகலாறுகள், கலிப்பா, பரிபாட்டு என்னும் அவ்விரு பாக்களானும் கூறுவதற்குரியனவாகும் எனக் கூறுவர் அறிவுடையோர் என்றார். குறிப்பாகச் செய்யுள், பா, பாட்டு, பாடல் என்னும் சொற்கள் வழக்கத்தில் உள்ளன.
செய்யுள் : தொல்காப்பியத்தில் 26 செய்யுளியல் என்பதாம் “ செய்யப்பெறுவது செய்யுள், பொது நிலையில் இலக்கியத்தைக் குறிக்கும். செய்தது அவ்விலக்கியத்தின் உள் இருக்கும், அதனால் செய்+ உள் +இயல் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். ...................................................
பா வகைகள் : இலக்கண எல்லைக்குள் அமையும் உறுப்புகள்,யாப்பு என்று குறிப்பார் தொல்காப்பியர்.
”எழுத்து முதலா ஈண்டிய அடியில்
குறித்தப் பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்.”-1335.
எழுத்து முதலாக, அசை, சிர், அடி, என ஈட்டப்பெற்ற, தான் குறித்த பொருளை முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பு என்று கூறுவர் யாப்பினைத் தெளிவாக அறிந்தவர்.இவ்விலக்கண விதிகளைக் கொண்டு அமைவதே நூல் எனல் தகும். அவ்வாறு அமையும் நூல்களைப் பட்டியலிடும் தொல்காப்பியர்,
ஏழுவகை இலக்கியங்கள்:-
பாட்டு, உரை, நூலே வாய்மொழி, பிசியே
அங்கதம், முதுசொல்லொடு, அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லௌ அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்.” -1336.
பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல், என்ற ஏழு வகை இலக்கியங்களும் சேரசோழ பாண்டியர் என்ற மூவர் ஆளும் எல்லையும் வடக்கு வேங்கடம் தெற்கு, குமரி கிழக்கு, மேற்குக் கடல்களாக உள்ள எல்லைக்கண் தமிழ் நாட்டவர் வழங்கும் யாப்பின் வகைகள் என் அறிவுடையோர் கூறுவர். மேற்சுட்டிய ஏழும் இலக்கியங்களாக கொள்வதற்கு மேலும் யாப்பின் இயல்பை மரபு எனச் சுட்டுவார். மரபாவது
“ மரபே தானும்
நாற்சொல் இயலான் யாப்பு வழிப்பட்டன்று” 1337.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல் வடசொல் என்ற நாற் சொற்களின் தன்மையுடன் யாப்பு வழி அமைவது மரபு.
தொல்காப்பியர்் பாட்டு , உரை என்று சொல்வதனால் பாட்டு இசையுடன் கூடியது எனலாம்்.
இசை முறையாவது:
”அகவலென்பது ஆசிரியம்மே” - அகவல் என்ற ஓசை ஆசிரியப் பாவிற்குரியது.
”அஃது ஆன்று என்ப வெண்பா யாப்பே” - வெண்பாவிற்குரிய ஓசை அகவலோசையன்று, செப்பலோசை என்பர்.
.........................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக