ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-36.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- சேனாவரையர்: மு.வை.அரவிந்தன்.
ஆராய்ச்சித் திறன்.:
சேனாவரையர் தொல்காப்பியரிடம் பெரு மதிப்புக்கொண்டவர். தொல்காப்பியர் நூலில் தாம் ஏற்றுக்கொள்ள இயலாத சில இலக்கணக் கருத்துகள் இருப்பதைச் சேனாவரையர் சில் இடங்களில் உணர்கிறார். இருப்பினும் தொல்காப்பியரைக் குறைகூறாமல், தம் கருத்தை எழுதித் தம் ஆராய்ச்சித் திறனைக் காட்டுகின்றார்.
”எல்லே இலக்கம்” என்பது இடையியலில் உள்ள சூத்திரம் (சொல் - 269) ‘எல்’ என்பதை உரிச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்பது சேனாவரையர் கருத்து, ஆனால் தொல்காப்பியரே அதனை இடைச்சொல் என்று கூறுவதால், சேனாவரையர் தம் கருத்தையும் எழுதி நூலாசிரியரையும் மதிக்கின்றார். “எல் என்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையின் இடைச்சொல் என்று கோடும்” என்று மிகச் சுருக்கமாக எழுதித் தம் சொல்லாராய்ச்சித் திறனை வெளிப்படுத்துகின்றார். மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாகிய “ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமை ஆகற்பால எனின்” என்று சேனாவரையர் வினா எழுப்பிக்கொண்டு ஆராயும் பகுதி, அவருடைய மொழியாராய்ச்சித் திறனை விளக்கும் சிறந்த சான்றாகும்.
இலக்கணத் தொட்ர்களையும் கொள்கைகளையும் சேனவரையர் திறம்பட விளக்குகின்றா. கிளவியாக்கம், இரட்டைக்கிளவி, முக்காலம் இடைச்சொல், சொல்லும் பொருளும் போன்றவற்றையும் நன்கு விளக்கியுள்ளார்.
சேனாவரையர் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் போலவே வடமொழி இலக்கணத்திலும் வல்லவராக விளங்கிகின்றார். இரு மொழியிலும் வல்லவரான சிவஞான முனிவர் இவரி “ வடநூற் கடலை நிலைகண்டு உணர்ந்த சேனாவரையர்” என்று வாயாரப் புகழ்ந்து போற்றுகின்றார். வடமொழி பயின்றவர் என்றோ, கற்ற்வர் என்றோ புலமை பெற்றவர் என்றோ கூறாமல் வடநூற்கடலை நிலைகண்டு உணர்ந்தவர் என்று கூறியுள்ளதால் சேனாவரையருக்கு அம்மொழியில் அளப்பரிய பேராற்றல் இருந்தது என்பது விளங்கும்.அங்ஙனம் புகழ்வதற்கு ஏற்பச் சேனாவரையர் வடமொழி இலக்கணக் கொள்கைகளைத் தெளிவாக விளக்குகின்றார். வடமொழி இலக்கண விதிகளை மேற்கோள் காட்டுகின்றார். ......................................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக