ஞாயிறு, 7 நவம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –359

“பெரும்பெயல் பொழிந்த…….”

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தால்தான் மேக வெடிப்பு – வானிலை அறிவியல்.

1192 -திருக்குறள் சிறப்புரை

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.

 

தம்மைச் சேர்ந்தொழுகும் மகளிர்க்கு இனிய துணையாகிய கணவர், அவரின் உளமறிந்து செய்யும் நற்செய்கைகள் (தலையளி ) தன்னை நோக்கி உயிர்வாழும் உயிரினங்களுக்கு, வானம் வழங்கும் மழையைப் போன்றதாம்.

குன்றுகண் டன்ன கோட்ட யாவையும்

 சென்றுசேக் கல்லாப் புள்ள உள் இல்

என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்

பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்

பல்லோர் உவந்த உவகை எல்லாம்

என்னுள் பெய்ந்தற்றே சேண் இடை

ஓங்கித் தோன்றும் உயர் வரை

வான் தோய் வெற்பன் வந்தமாறே.” ----அகநானூறு, 42.

 

குன்றங்களைக் கண்டாற் போலும் பெரிய கரைகளை யுடையனவும்  நீர் இல்லாமையால் பறவைகள் வந்து தங்குதல் இல்லாதனவும்  உள்ளே நீரின்றி வெப்பம் மிக்கனவுமாகிய  பெரிய குளங்கள் எல்லாம்

 நிறையுமாறு, ஓர் இரவில் பெருமழை பெய்தது. தலைவன், வரைவு மலிந்து வந்தமையானே  யான் பெற்ற மகிழ்ச்சி, இன்பம் மிக்க வைகறைப் பொழுதில் பெய்த மழையால் நிரம்பிய குளங்களைக்கண்ட  ஊர் மக்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சி எல்லாம், ஒரு சேர என்னுள்ளே பெய்துவைத்தாற் போன்று இருந்தது.-தோழி, தலைவிக்குச் சொல்லியது. --- மழை அறிவியல் தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக