செவ்வாய், 24 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –454 –சாலி நெல்

 

தன்னேரிலாத தமிழ் –454 –சாலி நெல்


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, மே.21,22 திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்

 

3) சாலி நெல் உயர் வகை நெல்

 

வான் இயைந்த இருமுந்நீர்ப்

பேஎம் நிலைஇய இரும் பெளவத்து

கொடும் புணரி விலங்கு போழ

கடுங்காலொடு கரைசேர

நெடுங்கொடி மிசையிதை எடுத்து

இன்னிசைய முரசம் முழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்டம்

நாடுஆர நன்கு இழிதரும்

ஆடுஇயற் பெரு நாவாய்

மழை முற்றிய மலை புரையத்

துறை முற்றிய துளங்கு இருக்கை

தெண்கடல் குண்டு அகழி

சீர்சான்ற உயர் நெல்லின்

ஊர்கொண்ட உயர் கொற்றவ.” – மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி:75-88.


மேகங்கள் நீரைப் பருகுவதற்காகப் படிந்த, பெரிய மூன்று நீர்மையை உடைய, அச்சம் நிலைபெற்று விளங்கும் கரிய கடலில், கடிய காற்றினால் வளத்து வீசும் அலைகளைக் குறுக்கே பிளந்து செல்லுமாறு நாவாய்களின் பாய்கள் விரிக்கப்படும். அந்த நாவாய்களில் இனிய ஓசையை உடைய முரசம் முழங்கும். பொன் மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில் உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள் கரையை அடையும். நெடிய கொடிகள் பாய்மரத்தின் மேல் ஆடும். கருமேகங்கள் சூழ்ந்த மலை போல  அம்மரக்கலங்கள் கடற்பரப்பில் அசையும்.


இத்தகைய தெளிந்த கடலாகிய ஆழத்தினையுடைய கிடங்கினையும் தலைமை சான்ற உயர்ந்த சாலி என்ற நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கைப்பற்றிக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே..!


சாலியூர்- கடலை அரணாகக்கொண்ட ஒரு துறைமுகம்.

2 கருத்துகள்:

  1. சாலி நெல்..இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. தொன்மைத் தமிழர் வாழ்வியல் நெல்லின் பெயரையே ஊருக்கு வைத்தல், நன்றியுடன்..!

    பதிலளிநீக்கு