தமிழமுது –189– தொல்தமிழர் இசை மரபு:49
1. நற்றிணை.
தொல்தமிழரின் இசை மரபு தொடர்ந்துவரும் பாங்கினைக் கலித்தொகையிலும் பரிபாட்டிலும் கண்டோம். இனி எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள எஞ்சிய ஆறு நூல்களை நோக்குவோம்.
இசைகேட்டு மகிழும் ஐந்தறிவுடைய உயிரினங்கள்.
ஓந்தி மகிழ்ந்ததாக ஒரு பாடல்.
“ கானம் வெம்பிய வறங்கூர்கடத்திடை
வேனில் ஓதி நிறம்பெயர் முது போத்து
பாண்யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில -” 186 : 4-7.
அச்சமுடைய காட்டு வழியில் வேனிற்காலத்தில் மாறி மாறித் தன் நிறம் வேறுபடுகின்ற ஓந்திப்போத்து யாமரத்தில் ஏற இயலாது வருந்தும்; அவ்வழிச் செல்லும் பாணர் தம் வருத்தம் தீரச் சிறிது பொழுது யாழ் இசைக்க அவ்விசையைக் கேட்டு ஓந்தி தன் வருத்தம் தீர்ந்து அந்த யாமரத்தின் மீது ஏறும், என்று யாழிசையின் இனிமையை விதந்தோதுவார் புலவர்.
2. கணந்துள் பறவையின் இசையறிவு.. ;
“ பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம்புலம்புகொள் தெள்விளி
சுரம்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளூம் ...” குடவாயிற் கீரத்தனார் . 212. 1-4.
வேடன் வலை விரித்தனன், அந்த வலையைக் கண்ட நெடிய காலை உடைய கணந்துள் பறவை அச்சமுற்றுக் கத்தும் ; தனித்துக் குரல் எழுப்பும் பறவையின் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர், வழிச்செல்லும் வருத்தம் நீங்கத் திடீரென இசைக்கும் யாழிசையுடன் சேர்ந்து ஒத்து இசைக்கும்.
( கணந்துள் பறவை ஆள் வருகையை அறிவிக்கும் ஆட்காட்டிப் பறவை என்பர்.)
.............................................தொடரும்..................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக