ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-2.
தொல்காப்பியர் வரலாறு :
தமிழ் வாழ்த்துப் பாடல்:
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.”
தொல்காப்பியர் வரலாற்றை ஓரளவு அறிவதற்கு உதவுவது அவருடன் பயின்ற ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரணார் இயற்றிய பாயிரம் ஆகும். பாயிரம் என்றது
“ ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே”
எந்த நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைக்க என்பது இலக்கணம் . ”பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொரிட் டாகிய நூலினிது விளங்கும்.” என்பது ்பருப்பொருளாகிய பாயிரம் அறிந்தார்க்கு நூலின் நுண்பொருள் இனிதே விளங்கும் என்பதாம்.
தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:
”வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்
தறங் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.” என்பது சிறப்புப் பாயிரம்.
“வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் எல்லைகளாகக் கொண்டு இடைப்பட்டது தமிழ் கூறும் நல்லுலகம் அதகண் வழங்கிய வழக்கு, செய்யுள் ஆகிய இரு காரணங்களாலும் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் ஆகியவை ஆராயப்பட்டன; செந்தமிழ் நிலத்தொடு பொருந்திய பழைய தமிழகத்தில் தோன்றிய முன்னைய நூல்களையெல்லாம் முறையாக ஆராய்ந்து நூலைத் தொகுத்துச் செய்தான் ; அவ்வாறு செய்யப்பெற்ற குற்றமற்ற நூல் நிலந்தருவிற் பாண்டியன் அவையகத்தே அரங்கேற்றப்பட்டது ; அறமே உரைக்கும் நாவும் நான்கு மறைகளிலும் நிரம்பிய புலமையும் உடைய அதங்கோட்டு ஆசானின் வினாக்களுக்குக் குற்றமற்ற விடைகளைக்கூறித் தெளிவாக்கினான் ; பழைய நூல்களைப்போல் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்து மயங்காதபடி, இயற்றமிழை முறையாக எடுத்துக்காட்டினான் ; அவன் உலகில் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று தன் பெயர் விளங்குமாறு பல புகழையும் நிறுவிய தவ ஒழுக்கமுடையவன் ஆவான். பேராசிரியர் சிவா.. ......................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக