ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-9.
தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - மறுப்புரை:
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
நற்றா டொழா அரெனின் என்றதாவது ,
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள்.2.)
ஒரு குறட்பாவின் பின்னடியை வடமொழியில் எழுதுதல் சாலுமோ ? இதன் முதலிலுள்ள ‘ந’ என்னும் ஒன்றன்றி மற்றைய எழுத்துக்கள் எழுதப்படாவாயின் வடமொழியன்றோ பெரிதும் எழுத்துக்குறைபாடுடையதென இது காட்டி நிற்கும். இப்பொழுது ஐந்தெழுத்து எத்துணௌப் பெருமையுடையன வென்பது காண்க.
ஆய்வுரை:
தொல்காப்பியர் சமதக்கினி மைந்தரென்பதும் அகத்தியர் மாணாக்கரென்பதும் பொருந்துமா என்னும் ஆராய்ச்சி.
அறிவு சான்ற ஆன்றோர்களே..! இவ்வாராய்ச்சியுரைக்குப் பொருளாகவுள்ள தொல்காப்பியத்தில்
“அவையடக்கிலே அரிவறத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்
றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.”
என அவையடக்கத்திற்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின், யானும் அம்முறை பற்றி என் உரைகளிலுள்ள குறைகளை நுங்கள் சீரிய மதியாற் செப்பஞ் செய்து கொள்கவென வேண்டி, எனது ஆராய்ச்சியைத் தொடங்குகின்றேன். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் எல்லாவற்றுள்ளும் காலத்தால் முந்தியும், தமிழில் அனைத்தையும் முற்றவெடுத்துக் கூறுவதும் தொல்காப்பியமே என்பது தமிழ் வல்லார் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும். இந்நூலினை நன்கு ஆராய்தலானே தமிழ் மொழியின் இயல்புகளையும் தமிழகத்தின் பழைய நிலைமைகளையும் ஒருவாறு காண்டல் கூடுமென்பதில் ஐயமில்லை. யான் இவ்வாராய்ச்சியை நடாத்துழிப் பண்டை நூல், உரையாசிரியன்மார் கொண்ட கொள்கைகளுக்கு ஒரோவழி மாறாகச் சொல்லுதலுங் கூடும் அன்றி, இதுகாறும் யான் கொண்டிருந்த கருத்துக்கு முரணாகவும் சில இருத்தல் கூடும். ஆராய்ச்சியின் பெற்றி இதுவெனவறிந்த அறிவுடையார் இவை குறித்து என்னை முனியாரென்னும் துணிவுடையேன்.
இந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவருக்கு மைந்தர் என்றும், அகத்தியனார்க்கு மாணாக்கர் என்றும் கூறப்படுகின்றனர். இவற்றுள் முன்னையதற்கு ஆதரவு, உரையாசிரிய ரெல்லாருள்ளும் பின் வந்தவராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர்,
தொல்காப்பியப் பாயிரவுரையில் “தேவரெல்லாங்கூடி யாம் சேரவிருத்தலின் மேருந்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியர் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து... பொதியலின்கண்ணியிருந்து. இராவணனைக் கந்தருத்தாற் பிணித்து, இரக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி ‘நீ சென்று குமரியரைக் கொண்டு வருக’எனக்கூறினார் என உரைத்திருக்கும் கதையன்றி வேறில்லை. ...............................................................தொடரும்......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக