புதன், 28 அக்டோபர், 2020

 

தன்னேரிலாத தமிழ் - 168

409

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.


கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும் அவர்கள், தாழ்ந்த குடியில் பிறந்து கல்வியறிவில் மேம்பட்டார் எய்திய பெருமைகளைப்  பெற முடியாதவர்களே.


 ( “ உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.” ~~~ பரிமேலழகர்.)


எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்

  அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.” –வெற்றிவேற்கை, 38.


எந்தக் குலத்தில் பிறந்தாலும் யாராக இருந்தாலும் கல்வியறிவு பெற்றவர்களே எந்த இடத்திலும் மதிக்கப்படும் பேறு பெற்றவர்கள் ஆவர்.

 

1 கருத்து:

  1. கல்வியறிவின் சிறப்பு அருமை. இப்போதெல்லாம் பணமிருந்தால்தானே மதிப்பு என நினைக்கின்றார்களே ஐயா.

    பதிலளிநீக்கு