தமிழமுது –190– தொல்தமிழர் இசை மரபு:50.
யாழோசையில் மயங்கும் அசுணம், ஆம்பல் பண்.
1. நற்றிணை.
“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்துஅலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம்குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்.
கூற்றங்குமரனார்,244:1 –4 மழை பெய்த பெரிய குளிர்ச்சியான சாரலில் கூதிர் காலத்தில் கூதளம் மலரும்; அதில் தேன் உண்டு மணம் வீசும், அழகிய வண்டு இசை எழுப்பும் ; கேட்டற்கு விருப்பம் தரும் அதன் இசையை யாழோசை என்று கருதி மணம் வீசும் மலைப்பிளவில் தங்கியிருக்கும் அசுணப்பறவை செவி கொடுத்துக் கேட்கும் ( இனிய இசையைக் கேட்டு மகிழும் இப்பறவை கொடூர இசையைக் கேட்டால் அவ்விடத்திலேயே உயிர்விடும் என்பர்.சங்க இஅலக்கியங்களில் இடம்பெறும் இப்பறவை அசுணம் என்றும் அசுணமா என்றும் குறிக்கப்படுகிறது அசுணம் பறவையா, விலங்கா?)
ஆம்பல் பண் :
“உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பலம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே.”
” இளங்கீரனார். 113: 9 –12. உ தியன் சினந்து ஒலிக்கும் இடத்தையுடைய போர்க்களத்தில் களம் பாடுநருடன் இன்னிசைக்கருவி இசைப்போர் விரைவாக இசைக்கும் ஆம்பல் என்னும் பண் உடைய குழல் இசை ஒலித்தது போலிருந்தது; அங்ஙனம் அழுது கலங்கி வருத்தமுற்றுத் துன்பம் கொண்ட கண்களால் எனை நோக்கினாள். என்று தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலவன் வழியில் அவளை நினைத்துக் கூறியது.
.............................................தொடரும்..................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக