செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----125

 

தன்னேரிலாத தமிழ்----125

 தொல்காப்பிய இயற்கயியல்-1

                                   எழுத்தும் சொல்லும் உணரப் பொருளதிகாரம் கண்ட தொல்காப்பியரின் அறிவின் செறிவை, ஆராய்ச்சித்திறனை, அறிவியல் நோக்கினை உய்த்துணரவும் இயலுமோ? ஆன்ற அறிவியல் அறிவின்றிப் பேதைமையால் தொல்காப்பியம் புகுந்த என்னைத் தமிழன்னை மன்னிப்பாளாக.

 நச்சினார்க்கினியர் நல்லுரையில்  அறிவியலாசான் தொல்காப்பியரை ஆராய்ந்தார் எனச்சுட்டிப் பொருளதிகாரப் பொருள் உரைத்தமை எண்ணி மகிழ்வம்.

பொருளதிகாரத்தின் பொருள் இன்னதென்பதை

 அறம், பொருள், இன்பமும் அவற்றது நிலையின்மையும் அவற்றினீங்கிய வீடுபேறுமாம்.பொருளெனப் பொதுப்படக் கூறவே. அவற்றின் பகுதியாகிய முதல், கரு, உரியும் காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும் அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத் திணையும் பிறவும் பொருளாம்.

             இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தாரென்ப. அவை, அகத்திணை புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன்கட் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து -  ஆசிரியம், வஞ்சி , வெண்பா, கலி, பரிபாடல் , மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென நால்வகை நிலன் இயற்றி, சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமென பதினான்கு வழுவமைத்து,  வழக்கிடஞ் செய்யுளிடமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின் எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇய பெயரும் திணைநிலைப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டுவகை மெய்ப்பாடும் நால்வகை உவமும் ஐவகை மரபும் என்பர்.  தொடரும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக