தமிழமுது –191– தொல்தமிழர் இசை மரபு:45.
முகில்கள் முரசொலிக்கும்.
வள்ளைப் பாட்டு:
குறிஞ்சிப்பண்.
1. நற்றிணை.
“ஆழல் வாழி தோழி நீ நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் உண்துறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல
பொலந்தொடி போல மின்னி கணங்கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே. “ - நக்கீரர் : 5-12.
( தலைவியைத் தோழி ஆற்றுவித்தது)
அழுகின்ற என் தோழி, அழாதிருப்பாயாக... நீ வாழ்வாயாக..! உனது தாழ்ந்து தழைத்த கூந்தலைப்போல இறங்கிய மழை வீழ்ச்சியோடு வண்டுகள் வந்து படிகின்ற புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையிடத்துக் கொய்து கொண்டு வந்த பெரிய மடப்பம் பொருந்திய மகளிரின் முன் கையில் அணிந்த , கோல் தொழிலமைந்த பொன்னாலாகிய வளையலௌப் போல மின்னிக் கூட்டம் கொள்ளும் முகில்கள் . அவை இனிய இசையை உடைய முரசு போல் ஒலிக்கும், அம்மேகங்கள் அரசர்களில் அரணாகிய மதில்போல் பகைவரின் படை ஏறாதவாறு பாதுகாக்கும் பலவாகிய கிடுகுப் படைகளைப் போல வானிலே செல்லும், அம்மேகங்கள் சென்று அவரது நல்ல மழை நாட்டின்கண் தவழும், அவை உன்னுடைய கூந்தலைப்போல விளங்குவது கண்டு உன்னைக் கருதி அவர் (தலைவன்) இப்பொழுதே இங்கு வருவார்.
வள்ளைப்பாட்டு - பெண்டிர்:
“முன்றிற் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம்........” கபிலர் : 1 –4. தோழி கூறுவாள்..!
தோழி, வீட்டின் முன்புறத்தே உள்ள பலாவின் விளைந்த சுளைகளைப் புல்லிய தலையை உடைய மந்திக் குரங்கு உண்டு, விதைகளைத் தரையில் உதிர்க்கும், பக்கத்தே இருக்கும் கொடிச்சி தன் தந்தையின் முகில் தவழும் மலையைப் பாடிக்கொண்டே ஐவனமாகிய வெண்ணெல்லைக் குத்துவாள்.........! பெண்கள் நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தும்பொழுது பாட்டு பாடுதல் நம் மரபே. (ஆடி, பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது.....! பாடல், பட்டுக்கோட்டையார்.)
குறிச்சிப் பண்:
“கழுதுகால் கிளர ஊர் மடிந்தன்றே
உருகெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்.- ”
ஆலம்பேரிசாத்தனார் , 255: 1- 3. பேயினங்கள்,காற்றைப்போல இயங்கும் இந்த இரவுப்பொழுதில் ஊரினர் யாவரும் துயில் கொண்டனர், கேட்டோர் அஞ்சும் தன்மையில் குறிஞ்சிப் பண்ணை இசைக்கும் , அகன்ற இவ்வூரைக் காக்கின்ற கானவர் துயில் கொண்டிலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக