ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-49.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- கல்லாடர் : மு.வை.அரவிந்தன்.
கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயருடன் பண்டைக் காலத்தில் புலவர் சிலர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட கல்லாடர். கல்லாடம் என்பது ஊரின் பெயர். அவ்வூரில் சிவபெருமான் கல்லாடர் எனப்படுகின்றார். அப்பெயரை மக்களுக்கு இட்டு வழங்கினர்.
சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் அனைவருக்கும் பிற்பட்டவர் கல்லாடர். இவர் உரை முன்னோர் உரைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை எல்லாம் ஒருங்கு சேர்த்து எழுதப்பட்ட உரையாக உள்ளது. இளம்பூரணர், சேனாவரையர் ஆகிய இருவரும் காட்டிய உதாரணங்களைக் கல்லாடர் அப்படியே மேற்கொள்கின்றார். “பெயர் நிலைக் கிளவி” என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது பரிமேலழகர் “ஒன்றாக நல்லது “(323) என்னும் குறள் உரையில் கூறிய “முற்கூறியதிற் பிற் கூறியது வலியுடைத்து ஆகலின்” என்னும் தொடரைக் கல்லாடர் 155ஆம் நூற்பாவுரையில் மேற்கொள்கின்றார்.
கல்லாடர் உரையைப் பிரயோக விவேக நூலாசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். ”மக்கள் சுட்டு என்பதனைக் கல்லாடரும் பின்மொழியாகு பெயராய் நின்ற இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.” என்று பிரயோக விவேக நூலார் குறிப்பிடுகின்றார் (பிரயோக -11 உரை).
எனவே கல்லாடர், நச்சினார்க்கினியருக்குப் பின்னும் பிரயோக விவேக நூலார்க்கு முன்னும் வாழ்ந்தவர் எனலாம். இவரது காலம் 15,16 ஆம் நூற்றாண்டாகலாம். கல்லாடர் உரை , இடையியல் (13 சூத்திரங்கள்) வரை உள்ளது. இயல்களின் முறைவைப்பை விரிவாக இவர் ஆராய்ந்து கூறுகின்றார். வேற்றுமை என்பதை இலக்கண ஆராய்ச்சியுடன் தெளிவாக விளக்குகின்றார்.
கல்லாடனார் தயக்கத்தோடும் ஐயத்தோடும் பல இடங்களில் உரை கண்டுள்ளார். 210ஆம் சூத்திரத்திற்கு உரைகூறி :இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க” என்று மொழிகின்றார். சில சூத்திரங்களின் பொருளை எழுதி ‘என்பது போலும்’ என்று கூறி முடிக்கின்றார். 222 ஆம் சூத்திரவுரையில் ‘பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்’ என்று எழுதுகின்றார்.
கல்லாடர் உரைக்கென்று சில தனிச் சிறப்பியல்புகள் இருப்பினும், செல்வாக்குடன் புலமை உலகில் இது பரவவில்லை.
பழைய உரை:
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இதனை இயற்றியவர் ஊர், பேர் எதுவும் தெரியவில்லை. இவ்வுரை கிளவியாக்கம் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் ஆகிய மூன்றிற்கு மட்டுமே உள்ளது. இவ்வுரை முன்னைய உரைகளைத் தழுவியே செல்கின்றது எல்லா உரைகளிலிருந்தும் நல்லன எடுத்து அமைத்துக்கொண்டுள்ளது.
................ ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்- ஓர் அறிவியல் அறிஞர்.........தொடரும்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக