வியாழன், 24 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 390

திருக்குறள் – சிறப்புரை : 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. – 390
புலவர்களையும் இரவலர்களையும் போற்றிக் கொடைவழங்குதல் ; எவ்வுயிர்க்கும் அருளுதல் ; நெறிபிறழாது ஆட்சி நடத்துதல் ; குடிமக்களைப் பேணிப் பாதுகாத்தல் ஆகிய இந்நான்கு நிலைகளிலும் சிறந்து விளங்கும் மன்னன்  வேந்தர்களுக்கெல்லாம் ஒளி விளக்காம்.
“ கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
 களைக என அறியாக் கசடுஇல் நெஞ்சத்து
  ஆடுநடை அண்ணல் …….. ( பதிற்றுப்பத்து)

 பரிசில் வேண்டி வருவோர்க்கு வாரி வழங்குவதோடு கனவில்கூட ‘ என்னுடைய துன்பத்தை நீக்குக,’ – என்று பிறரிடம் கூறுதலை அறியாத குற்றமற்ற மனத்தையும் வெற்றியைத் தோற்றுவிக்கும் நடையையும் உடைய அண்ணல்.. (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக