வெள்ளி, 5 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…53.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…53.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க்கு இருக்க நிலழலாகும்மே.” –

 

விரிந்து பரந்த ஆலமரத்தின் விதை  தெளிந்த நீர் நிறைந்த குளத்தில் வாழும் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாயினும் அவ்விதையில் தோன்றிய  ஆலமரம்  மன்னரின் யானை குதிரை , வீரர்கள் , தேர் ஆகிய நால்வகைப் படையுடன் தங்குதற்குரிய நிழலைத் தரும். துரும்பு சிறிதேயனாலும் பல் குத்த உதவுமே. அதுபோல,  நாம் செய்யும் சிறிய செயல் கூடப் பிறர்க்குப் பேருதவி ஆகுமே.

 

“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. “ –குறள்.102.

 

ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதே என்றாலும், அவ்வுதவி கிடைக்கப் பெற்ற காலம்,  இடம், சூழல், ஆகியவற்றால் அவ்வுதவி பேருதவியாகி இவ்வுலகத்தைவிடப் பெரிதாகப் போற்றப்படும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக