வெள்ளி, 16 மே, 2025

தமிழமுது -29. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு

 

தமிழமுது -29. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    அறுபடைவீடு

3. ) திரு ஆவினன் குடிபழனி / பொதினி.

 

முனிவர்கள் தோற்றப் பொலிவு:

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்

மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்

தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை

யாவது அறியா இயல்பினர் மேவரத்

துனி இல் காட்சி முனிவர்….” – 127 – 137.

 

மரவுரியை உடுத்தவர் ; வலம்புரிச் சங்கை ஒத்த அழகிய நரை முடியை உடையவர் ; அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர் ; மானின் தோலைப் போர்த்தவர் ;  சதை வற்றிய மார்பில் விலா எலும்புகள் தோன்றி அசையும் உடலை உடையவர் ; பல பகற் பொழுதுகள் உண்ணும் உணவை நீக்கியவர் ; பகையைப் போக்கிய மனத்தை உடையவர் ;  கற்றறிந்தவர்க்கும் தாம் எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர் ; ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய அறிவுடையவர் ; எவரிடத்தும் வெறுப்பு இல்லாத மெய்ஞானத்தை உடையவர் ஆகிய இயல்புகளை உடைய முனிவர்கள்.

(சீரை – மரவுரி ; சீர் – அழகு ; உரிவை – தோல் ; இகல் – மாறுபாடு ; செற்றம் - பகைமைக்குணம்  ; துனி – வெறுப்பு. )

முருகனைப் பாடும் ஆடவர் – தோற்றப் பொலிவு:

”புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை

முகைவாய் அவிழ்ந்த நகைசூழ் ஆகத்து

செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்

 நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர.” – 138 – 142.

 

 பாலாடையன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால்  இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மை உடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர் இனிய யாழ் நரம்பினை இயக்கிப் பாடுவர்.

( ஆகம் – மார்பு ; எஃகு – கூர்மை ; யாழோர் – யாழ்ப்பாணர்.)

 

 முருகனைப் பாடும் மகளிர்  தோற்றப் பொலிவு:

“நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்

 பருமம் தாங்கிய பனிந்து ஏந்து அல்குல்

மாசுஇல் மகளிரொடு மறுவின்றி விளங்க.” – 143 – 147.

 

 பாடும் மகளிர், நோயில்லாது நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை போன்று மிளிரும் தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர் ; பாடினியர் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்வர்.

(பருமம் – மேகலை ; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – பசலை / தேமல். )

முருகனை வணங்குவோர் :

 முருகப் பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல, அவர்களைப் பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே பின்னால் வர, அவர்களுக்குப் பின்னால் திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.

  ( முருகனின் தந்தை சிவபெருமான் இல்லையோ….?)

……………….தொடரும்……………………………..

புதன், 14 மே, 2025

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்- – அறுபடைவீடு

 

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    அறுபடைவீடு

 

2,) திருச்சீரலைவாய்திருச்செந்தூர்.

யானை ஊர்தி.

“வைந்நுதி ஒருத வடுஆழ் வரிநுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை

கூற்றத் தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்

கல்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டு” – 78 – 83.

 

கூரிய அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில் பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய. தாழ்ந்து தொங்கும் மணீகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும் விரைவான நடையினையும் கூற்றுவனை ஒத்த வலிமையினையும் ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும் உடைய யானையின் மீதேறி முருகன் வருகின்றான்.

 

( முருகன் யானைக் கொடியுடையோனை வென்று அடக்கியதால் யானை ஊர்தியாக இருக்கலாம்.)

 

ஆறுமுகத்தான் ஆற்றும் செயல்கள்:

“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகி

காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி

திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே

ஆங்கு அம்மூஇரு முகனும் முறை நவின்று…” – 91 – 103.

 

  பல சுடர்களைத் தோன்றச் செய்த்து – ஒருமுகம்.

வேண்டும் வரம் அளிக்கும் – ஒரு முகம் .

அந்தணர் வேள்வியைக் காக்கும் – ஒரு முகம் .

 வேத நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும்- ஒரு முகம்

மறக்கள வேள்வியை விரும்பி நிற்கும் – ஒரு முகம்.

 வள்ளியம்மையுடன் மகிழ்ந்திருக்கும் – ஒரு முகம்.

 

 (முருகன் என்றுமே வள்ளி மணாளந்தான் ; தெய்வானை எங்கிருந்து வந்தாள் ..?  முருகனை இழிவுபடுத்தும் புனைந்துரைகளைத் தமிழர்கள் புறந்தள்ள வேண்டும்.).

 

3. ) திரு ஆவினன் குடி – பழனி / பொதினி.

……………….தொடரும்……………………………..

செவ்வாய், 13 மே, 2025

தமிழமுது -27. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு

 

தமிழமுது -27. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    – அறுபடைவீடு

1.)     திருப்பரங்குன்றம்:

”மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து

கரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

பார்முதல் பனிக்கடல் கலங்க உள்புக்கு

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” – 42 – 46.

முருகன் குறிஞ்சி நிலத் தலைவன், ஆதலின் அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கப் பெற்றது.

குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று அறியா மரங்கள்  நெருங்கிச் செழித்துள்ள பக்க மலைச் சாரலில் உள்ள வண்டுகளும் மொய்க்காத, சுடர் போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக் கட்டிய குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன்.

 நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற , சுடர்விடுகின்ற இலைவடிவாகிய  நெடுவேல் கொண்டவன்.

(மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது கடல் ஆதலான் பார் முதிர் பனிக்கடல் என உலகத்தோர்றம் குறித்தார் நக்கீரர்).

……………….தொடரும்……………………………..

2,) திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்.

திங்கள், 12 மே, 2025

தமிழமுது -26. - கடவுள் கோட்பாடு – தொல்தமிழர் முருகன் வழிபாடு.

 

தமிழமுது -26. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் முருகன் வழிபாடு.

முருக வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளில் முருகனை வழிபட்ட முறைகளைக் காணலாம்

திருமுருகாற்றுப்படை: இயற்றியவர் நக்கீரர்.

முருகனை சமயக் கடவுளாகக் காட்டாமல் ஆற்றுப்படை நெறியில் பாடுகின்றார்.  வீரமும் கொடையும் உடைய ஓர் அரசனைப் பாடுவது போன்று பாடாண் திணைப் பண்பு பொருந்தப் பாடுகின்றார்.

முருகன் எழுந்தருளும் இடங்கள்  ;

“ சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நி றீஇ

ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலன் தைஇய வெறி அயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும். 218 – 226. 

குன்றுதொறும் ஆடற்கண் நிற்றலேயன்றி சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாகிய வைத்து மறியறுத்துச் சேவற் கொடி உயர்த்து, அவ்விடத்தே அந்த இறப்பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்தும். ஊர்கள் தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப் பெருமான் எழுந்தருளியிருப்பான்.

 தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம்பொருந்தி அவ்விடத்தும் இருப்பான். ; வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான். காட்டிலும் சோலையிலும் ஆழகுபெற்ற ஆற்றிடைக்குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறு பல ஊர்களிலும் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் ஐந்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்திலும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.

(கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் வழிபாடு ; வாரணம் – கோழி ; துருத்தி  - ஆர்றிடைக் குறை  -மணல் திட்டு  

; வைப்பு – ஊர்.)

……………….தொடரும்……………………………..

ஞாயிறு, 11 மே, 2025

தமிழமுது -25 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.: கடல் தெய்வ வழிபாடு :

 

தமிழமுது -25 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

கடல் தெய்வ வழிபாடு :

கடற்கரை பரதவர் முழுநிலா நாளன்று மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மீனும் இறைச்சியும் படைத்துக் கடல் தெய்வத்தை வணங்குவர்.

உவாநாள் வழிபாடு :

“சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்

மடல் தாழை மலர் மலைந்தும்

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்

புந்தலை இரும்பரதவர்

பைந்தழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது

உவுவ மடிந்து உண்டு ஆடியும் “ கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை;  87 – 93.

சிவந்த தலை மயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் பரந்த ,கரிய, குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை. அவர்கள் அந்நாளில் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். அவர்கள், பசுமையான தழையாடை உடுத்திய கரிய தம் மனைவியருடன் கூடியிருப்பர்.

 பரதவர், சினைகளை உடைய சுறா மீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.

 அவ்வழிபாட்டின் பொருட்டு, விழுதுகளைக் கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள வெண்கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர். மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர் ; சருக்கரை உடைய பனைமரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளை உண்பர். நெல்லால் ஆக்கப்படும் கள்ளினையும் உண்டு விளையாடுவர்.

(பரதவர், சுறா மீன்களால் தங்களுக்கு எவ்வகை இடையூறும் நேராமல் அத்தெய்வம் காக்கும் என நம்பினர்.)  (உவவு – உவாநாள், மதி நிறை நாள் ; காழ் – காம்பு.)  

……………….தொடரும்……………………………..

 

வெள்ளி, 9 மே, 2025

தமிழமுது -24 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு. வெறியாட்டு :

 

தமிழமுது -24 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

வெறியாட்டு :   

   மனிதர் மேல் தெய்வம் ஏறிவருவதாக நம்பியதன் வழிபாடு செய்வது வெறியாட்டாகும். இது முருகனோடு தொடர்புடையது. வேலனின் வெறியாடலை சங்க இலக்கிய அகப்பாடல்களில் காணலாம். வெறியாட்டுக் குறித்துத் தொல்காப்பியத்தில்…

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட் டயர்ந்த காந்தளும்” – 1006. என்று இடம் பெற்றுள்ளது.

வெறியாடலின் சிறப்பினை அறிந்த கொடிய வாயினை உடைய வேலன் ஆடிய காந்தளும்.

முருக வழிபாடு:

“வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து

அன்னை அயரும் முருகுநின்

பொன்னேர் பசலைக்கு உதவா மாறே.”-நல்வெளியார், நற்றிணை, 47 : 9 – 11.

காதலால் மெலியும்  தலைவியைக் கண்ட தாய் இவள் நோயுற்றாள் என்று கருதி, வெறியாட்டு நிகழ்த்துவாள்.

வெறிக்களம் அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருக வழிபாடு ; நின் பொன் போலும் பசலை நீங்க உதவாது.

(தலைவனால் மட்டுமே இந்நோய் நீங்கும் என்பதே கருத்தாம்)

இவளின் துன்பத்திற்கு முருகனே  காரணம் எனக் கருதி “ அரிய அச்சத்தைச் செய்யும் வேலன், இடுக்கண் முருகனால் வந்த்தெனக் கூறினான். தான் கூறிய அச்சொல்லின் கண்ணே கேட்போரை வளைத்துக்கொண்டு  ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க , கார்காலத்து மலராகிய  குறிஞ்சியைச் சூடி, கடம்பணிந்த முருகனைச் செவ்விதாகத் தன் மெய்யின்கண் நிறுத்தி விடுவான். அவ்வாறு வழிபட, மகளிர் தம்முள் தழுவிக் கைகோர்த்து மன்றுகள் தோறும் நின்று குரையாடுவர்.” என்கிறது மதுரைக்காஞ்சி.   

வெறியாடும்போது ஆடு பலியிடுதல் மரபு. அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவார்.

“மறிகுரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇ

செல் ஆற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத்

தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா.” – பெருஞ்சாத்தன், குறுந்தொகை : 263. 4-5.

வெள்யாட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து, தினை அரிசி நிரம்பிய பிரம்பின் கூடையை வைத்து, வெறியாற்குச் செல்கின்ற ஆற்றின் நடுவில் அமைந்த மணல் திட்டில், பல இசைக்கருவிகள் ஒலிக்க, வேலன் முதலியோரை ஆவேசித்துத் தோன்றுதல்….  இச்சடங்கு தலைவியின் காதல் நோய்க்கு மருந்தாகுமா ….ஆகாது.

 

களவின்கண் நிகழ்ந்த காதல் வீட்டிற்குத் தெரியாது, தலைவன் பிரிவை ஆற்றாது தலைவி உண்ணாமல் உறங்காமல்  நாளும் மெலிந்துவருவதைக்கண்ட தாய் இவளுக்கு ஏதோ நோய் கண்ட்தாகக் கருதி முருகனை வழிபட்டுத் தன் மகளைத் தேற்ற நினைத்தாள், அதனால்,  சாமியாடும் வேலனை அழைத்து  இச்வடங்கைச் செய்கிறாள் என்று அறியவும்.

 

 

 

……………….தொடரும்……………………………..

வியாழன், 8 மே, 2025

தமிழமுது -23 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.நடுகல்

 

தமிழமுது -23 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.நடுகல்


”விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

எழுத்துடை நடுகல் ….. “ ஓதலாந்தையார், ஐங்குறுநூறு,352 1-2.


 விழுகிய அம்பு தொடுத்தலையுடைய மறவர், தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை விரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல் குறித்துப் பேசுகிறது ஐங்குறுநூறு.

நடுகல் குறித்த செய்திகளை மேலும் புறநானூறு, பட்டினப்பாலை நூல்களிலும் காணலாம்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக  நடப்பட்ட  கற்களைப் பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன்கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.  


நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனைப் பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.


“ கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும். “

 

வெறியாட்டு :      

 

……………….தொடரும்……………………………..

 

புதன், 7 மே, 2025

தமிழமுது -22 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

 

தமிழமுது -22 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

சிறு தெய்வ வழிபாடு: கல் தெய்வமாதல்.

”ஏறுடை இனநிரை பெயர பெயராது

செறிகரை வெள்வேல் மழவர்த் தாங்கிய

தறுகணாளர் நல்லிசை நிறுமார்

பிடிமடிந்தன்ன குறும்பொறை மருங்கின்

நட்ட போலும் நடாஅ நெடுங்கல்

அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி

நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய

அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்

செம்பாங் கரந்தை புனைந்த கண்ணி

வரிவண்டு ஆர்ப்பச் சூடி கழற்கால்

இளையர் பதிப்பெயரும் அரிஞ்சுரம் இறந்தோர்.”-மதுரை மருதனிள நாகனர்:அகநானூறு, 269: 3-13.

அஞ்சாமை உடைய கரந்தை வீரர்கள், காளையை உடைய பசுக் கூட்டங்கள் மீண்டு வரவும் தாம் வாராது சுரைகள் கொண்ட வெண்மையான வேல்களை உடைய வெட்சி வீரர்களை மீண்டும் நிரை மேற்செல்லாது தடுத்து நிறுத்தி, அவரோடு போரிட்டு இறந்து பட்டனர், அவர்தம் நிலைபேருடைய  நல்ல புகழை நிலைநிறுத்துமறு உயிர் பிழைத்த கரந்தை வீரர்கள், பெண் யானைகள் படுத்துக் கிடந்தாற்போன்ற குன்றுகளின் பக்கத்தே, நட்டு வைத்தாற் போன்ற இயற்கையாகவே எழுந்த கற்களின் அகன்ற இடத்தைச் செதுக்கிப் பல வடிவங்களை அமைத்தனர் ; அவற்றை நீராட்டி நறுமணமுள்ள மஞ்சளை ஈரம் புலராப் புறப்பகுதியில் பூசினர்; அம்பு கொண்டு அறுத்து உரித்தெடுத்த ஆத்தியின் நாரினால் சிவந்த கரந்தைப் பூவினைத் தொகுத்துக் கட்டிய கண்ணியைக் கோடுகளையுடைய வண்டுகள் ஒலிக்க, அவ்வடிவங்களுக்குச் சூட்டிக் கழல் அணிந்த காலினையுடைய வீரர்கள் , தம் பதிக்குத் திரும்பினர்.

இறந்த வீரர்களுக்குக் காட்டு வழியில் எழுந்து நிற்கும்   குன்றுகளில்  அவ்வீரர்களின் பெயர்களைக் குறித்து, அக்குன்றில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.

தொல்பழங்காலத்தில் கோயிகள் கட்டப்படவில்லை. குன்றுகளைக் குடைந்து அழகு படைத்துப் பூசை முறைகளையும் மேற்கொண்டனர்.

அன்று நடுகல் அமைத்த இடங்கள் போன்று இன்றும் ‘குலதெய்வக் கோயில்களை காட்டுக் கோயில் என்று அழைக்கின்றனர்.  

தமிழன் :

கல்லிலே கலை வண்ணம் கண்டவன்

மனிதருள் வீரமரணம் எய்தியோரைத் தெய்வமாக்கியவன்

வழிபாட்டிற்குரிய பூசை முறைகளைத் தோற்றுவித்தவன்.

தொல்தமிழர் வரலாற்றில் இன்றைய கோயில்களுக்குத் தோற்றப் பொலிவளித்தவன்.

இன்று கலைக்கோயில்களில் கருநாகங்கள் குடி புகுந்து நம்மைத் தீண்டுகின்றன.

……………….தொடரும்……………………………..

 

செவ்வாய், 6 மே, 2025

தமிழமுது -21 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

 

தமிழமுது -21 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

சிறு தெய்வ வழிபாடு:

சங்கத் தமிழர் வழிபாடு – நடுகல்:

நடுகல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக, ஊருக்குப் புறத்தே இருக்கும். ஓங்கிவளர்ந்த வேங்கையின் மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையாகச் சூட்டி வழிபடுதல், இது குறித்து….. அகநானூறு 131 ஆம் பாடல்…

“வீளை அம்பின் விழுத்தொடை மழவர்

நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து

நடை மெலிந்து ஒழிந்த சேண்பர் கன்றின்

கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்

 வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

வெருவரு தகுந கானம்…..” மதுரை மருதனிள நாகனார்.

நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது தப்பாத் தொடையினையுடைய வெட்சி சூடின  மறவர்கள், விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை வழியினை கொண்ட்து,; வெட்சியருடன் போரிட்டு ஆனிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார், அச்சுர வழியைக் கடந்து நெடுந்தூரம்  நடந்து வந்தமையால் தம் தாயுடன்  செல்ல மாட்டாது நடை தளர்ந்து நின்றுவிட்ட கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின் துயரைப் போக்கினர் ;  நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும்  பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்ற விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும், அதன்கண் சார்த்தப்பெற்ற கேடகமும் செல்லும் வழிதோறும் வேற்று வேந்தரது போர் முனையை ஒத்துக் காணப்படும், அச்சம் தரும் இயல்பினை உடையது அக்காட்டுவழி.

 ( பாலைத் திணைப் பாடல் --- தலைவி தரும் இன்பத்தினும் ஈதல் இன்பம் சிறந்தது  எனக் கூறிப் பொருள் ஈட்ட வேண்டும் என வற்புறுத்திய செஞ்சிற்கு தலைவன் கூறியது.)

……………….தொடரும்……………………………..

 

 

திங்கள், 5 மே, 2025

தமிழமுது -20 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

 

தமிழமுது -20 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்நில மக்களின் வழிபாடு இயற்கை வழிப்பட்டனவாக உள்ளன. ஆயினும் திருமால், விஷ்ணு, முருகன், சிவன், உருத்திரன், கொர்றவை என்று ஒன்றுபட்ட கடவுள் தன்மைகளை சங்க இலக்கியங்கள் விளக்கி நிற்பதை மறுக்க முடியவில்லை.

1.)     பச்சிலை, மலர் முதலானவற்றைத் தூவியும் நறை விரை புகைத்தும் பொங்கலிட்டுப் படைத்தும் அறுகம்புல், பூலாம்பூ, நெல், தினை, முதலியவற்றைத் தூவியும் சங்க கால மக்கள் கடவுளை வழிபட்டனர்.

2.)      ஆரிய முறைப்படி சிலர் வடமொழி வேதம் ஓது வழிபட்டனர். தீ வளர்த்து, வேள்வியும் செய்தனர். உருத்திரன், சுப்பிரமணியன், கிருஷ்ணன் முதலான தெய்வங்கள் தொடர்பான கட்டுக்கதைகளைத் தமிழர் தெய்வங்களுக்கு இட்டுக்கட்டி இணைத்துவிட்டனர்.

தெய்வங்கள்:

 சிறு தெய்வங்கள் வழிபாடு ……..!

தென்புலத்தார்

நடுகல்

பேய்

தீமைதரும் விலங்குகள்

வான்சுடர்….. முதலானவை.

பெருந்தெய்வங்கள்:ஐந்திணை.

குறிஞ்சி – சேயோன்

முல்லை – மாயோன்

பாலை – காளி

மருதம் – வேந்தன்

நெய்தல் – வருணன்.

கோயில்:

நல்ல வீடு

தலைவன் வீடு

இறைவன் வீடு.

 இயற்கையில் இறைவனைக்கண்ட தமிழர் மரத்தடியில் இறைவனை இருக்கச் செய்தனர். மரப்பொந்தையே கோயில் என்றும் கொண்டனர். இன்று கோயிகளில் விளங்கும் தலமரம் (தல விருட்சம்) இதன் எச்சமெனக் கருத இடமுண்டு. ஆற்றங்கரை, மலைச்சரிவு, குன்று, கடற்கரை போன்ற இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் வழிபாடு நடந்தது.

 

சிறு தெய்வ வழிபாடு:

……………….தொடரும்……………………………..

 

ஞாயிறு, 4 மே, 2025

தமிழமுது -19 - சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.

 

தமிழமுது -19  - சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.

தொல்தமிழர் வழிபாடு:

அறிவால் அறிந்த ஒன்றைப் போற்றுவது மனித இயல்புதான். தன் வாழ்க்கைக்குத் துணையாவது ; வளம் தருவது ; நலம் பயப்பது ; உயிருக்கும் உடைமைக்கும் அச்சம் விளைவிப்பது இன்னபிற இயற்கை ஆற்றல்களை மனிதன் போற்றினான் ; வாழ்த்தினான் இந்நிலையே வழிபாடாக மாறியது.

காலம் மாற்றத்தைக் கற்பித்தது. சமயம், மதம் கடவுள் சார்ந்து தோன்றின. பழைய பெளத்தம் கடவுள் சார்பர்ற மனித வாழ்க்கையைக் குறித்தது. கடவுள் வழிபாட்டில் சமயங்கள் வேறுபடுகின்றன.வைதிக சமயம், சமணசமயம், பெளத்த சமயம் ஆசிவக சமயம் இன்னபிற சமய நெறிகள் தமிழர் வாழ்வில் ஊடுருவியிருந்தன. ஆனால் தமிழ்ச் சமுதாயம் அவற்றை முர்றாக ஏற்றுக்கொள்ளவில்லை.

சங்கத்தமிழரின் கடவுள் கோட்பாடு அறக்கோட்பாடாக இருந்ததைக் காணமுடிகிறது. சங்க காலம் சமயத்தைத் தழுவாத இயற்கை நெறிக்காலம். அகத்திணைக் காதல் நெறி (இல்லறம்) உயிராகப் போற்றப்பட்டது. சமயம் சாராப் பொதுமை அறங்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்கத்தமிழர் காடு, மலை, இயற்கை வளங்கள் ஆறுகள், சோலைகள் முதலியவற்றைத் தெய்வங்களாக வழிபட்டனர்.

தொல்காப்பியம்:

தொல்காப்பியத்தில் வேதப்பண்புகள் தோய்ந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களில் வேதப் பண்புகளோடு இதிகாசக் கதைகளும் விரவி வருகின்றன. தொல்காப்பியர் மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நிலத் தெய்வ வழிபாடுகளையும் கொற்றவை வழிபாட்டினையும் எடுத்துக்கூறியுள்ளார்.

……………….தொடரும்……………………………..

 

வெள்ளி, 2 மே, 2025

தமிழமுது -18 - சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.

 

தமிழமுது -18  - சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.

தொன்மைத்தமிழரின்  வாழ்வியலை அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள் துணைபுரிகின்றன. சங்க காலச் சமுதாயம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்களின் பண்பாடு செழிப்புர்றுச் சிறந்திருந்தது என்பதை வரலாரு, இலக்கியங்கள், அகழாய்வுகள் இன்ன பிற சான்றுகள் வழி அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பழந்தமிழரின் வாழ்வியலை வெகுச் சிறப்பாக  விளக்கியுள்ளன. இவ்விலக்கியங்கள் ஒரு காலத்தில் ஒருவரால் எழுதப்பட்டவையல்ல. பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பெற்றவையாகும். இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறுவதற்குமுன் பன்னெடுங்காலம்  வாய்மொழியாக வழக்கத்திலிருந்து பின்னர் எழுதப்பட்டவையாகும்..

பண்டைத் தமிழர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். இயற்கையின் அளப்பரிய ஆற்றல்களைக் கண்டுணர்ந்த தமிழர்கள் அவ்வாற்றல்களையே தெய்வமாகப் போற்றி வழிபட்டனர்.

”கடவுள் பற்றிய கருத்துருவம் காலந்தோறும் மாறுபட்டு வருகின்றது. கடவுள் போன்ற நுண்பொருள் (Object concept ) எவ்வாறு புலனீடான (concrete) சொல்லாயிற்று.கடவுளின் உருவ அமைப்பு, கடவுள் ஏற்கும் கருவிகள், உளவியல் அடிப்படையில் ஏற்படும் பொதுக்குறியீடு (Symbol) இலிங்கம்,வேல், மயில், முதலியன ஆய்வுக்குரியனவாகும்.

……………….தொடரும்……………………………..

 

வியாழன், 1 மே, 2025

தமிழமுது -17 - காரல் மார்க்சு- பொன்மொழிகள்

 

தமிழமுது -17  - காரல் மார்க்சு- பொன்மொழிகள்.

” பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால், நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாக்கக் குறித்துக்கொள்ள வேண்டு. இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.”

“மகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து..?

-போராட்டம்.”

“உங்களுக்குப் பிடித்தமான வாசகம்..?”

 ”எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு”

“இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன், உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன்.

 அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்

என்மகிழ்ச்சியை நசுக்க முடியாது

அழிந்த நாட்டில் கடவுளைப் போல

வெற்றி முரசொலிக்க நான் வருகிறேன்

ஒவ்வொரு சொல்லும் செயலும் நெருப்பு

என் மார்பும் கடவுளைப் போன்றதே.”

“தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.”

”மக்கள் தங்களைப்பற்றியே ‘பயம் அடையும்படி’ கற்பித்தால்தான் அவர்களுக்குத் ‘துணிவு’ ஏற்படும்.”

“…நாம் ஒரு புதிய கொள்கையுடன், இது தான் உண்மை இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்.”

“நரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தபட வேண்டும். “ இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுகள் ; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்,”

உங்களுடைய  முக்கியமான குணம். கொள்கை உறுதி.?’

உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூதுரை..?”

”மனிதனுக்குரிய அனைத்தும் எனக்கும் உரியன…!”

…………………………………………………………….

” நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும் ‘நேசிக்கிறேன்’ அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.  அவர்கள் உண்மையான மனிதர்கள்..! நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ; அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது.” வி.இ.இலெனின்.

……………….தொடரும்……………………………..