புதன், 14 மே, 2025

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்- – அறுபடைவீடு

 

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    அறுபடைவீடு

 

2,) திருச்சீரலைவாய்திருச்செந்தூர்.

யானை ஊர்தி.

“வைந்நுதி ஒருத வடுஆழ் வரிநுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை

கூற்றத் தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்

கல்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டு” – 78 – 83.

 

கூரிய அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில் பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய. தாழ்ந்து தொங்கும் மணீகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும் விரைவான நடையினையும் கூற்றுவனை ஒத்த வலிமையினையும் ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும் உடைய யானையின் மீதேறி முருகன் வருகின்றான்.

 

( முருகன் யானைக் கொடியுடையோனை வென்று அடக்கியதால் யானை ஊர்தியாக இருக்கலாம்.)

 

ஆறுமுகத்தான் ஆற்றும் செயல்கள்:

“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகி

காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி

திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே

ஆங்கு அம்மூஇரு முகனும் முறை நவின்று…” – 91 – 103.

 

  பல சுடர்களைத் தோன்றச் செய்த்து – ஒருமுகம்.

வேண்டும் வரம் அளிக்கும் – ஒரு முகம் .

அந்தணர் வேள்வியைக் காக்கும் – ஒரு முகம் .

 வேத நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும்- ஒரு முகம்

மறக்கள வேள்வியை விரும்பி நிற்கும் – ஒரு முகம்.

 வள்ளியம்மையுடன் மகிழ்ந்திருக்கும் – ஒரு முகம்.

 

 (முருகன் என்றுமே வள்ளி மணாளந்தான் ; தெய்வானை எங்கிருந்து வந்தாள் ..?  முருகனை இழிவுபடுத்தும் புனைந்துரைகளைத் தமிழர்கள் புறந்தள்ள வேண்டும்.).

 

3. ) திரு ஆவினன் குடி – பழனி / பொதினி.

……………….தொடரும்……………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக