புதன், 21 மே, 2025

தமிழமுது -33 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு

 

தமிழமுது -33 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.

4.)     பழமுதிர் சோலை :

மதுரை அழகர்மலை முருகன் ,” பழமுதிர்சோலை இன்ன இடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை; மதுரைக்கு ஏறத்தாழ 15கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் அல்லது திருமாலிருஞ்சோலை மலையே பழமுதிர்சோலை எனக் கூறுவர் அறிஞர் ஆனால், அத்தலம் இப்போது வைணவத் திருப்பதியாக உள்ளது.

முருகனை வழிபடுதல் :

ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.” – 245 – 249.

 

வெறியாட்டுக் களம் ஆரவாரிக்கும்படி பாடி ஊது கொம்புகள் பலவற்றையும் ஒருசேர ஊதி ; மணியை ஒலித்து ; முருகப் பெருமானுடைய யானையை வாழ்த்தி ; குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார்போன்று நின்று வழிபாடு செய்ய ; முருகப் பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன்.

 

(சிலம்புதல்ஒலித்தல் ; கொடுமணிவளைவு பொருந்திய மணி ; வாய்வைத்துஊதி.)

 

( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர்; பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.)

 

 மேற்கூறியவறு நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் முருகனின் வரலாற்றை வரைந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில்  குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் வழிபாடு, புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்துத் தெளிவாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

………………………..தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக