திங்கள், 12 மே, 2025

தமிழமுது -26. - கடவுள் கோட்பாடு – தொல்தமிழர் முருகன் வழிபாடு.

 

தமிழமுது -26. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் முருகன் வழிபாடு.

முருக வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளில் முருகனை வழிபட்ட முறைகளைக் காணலாம்

திருமுருகாற்றுப்படை: இயற்றியவர் நக்கீரர்.

முருகனை சமயக் கடவுளாகக் காட்டாமல் ஆற்றுப்படை நெறியில் பாடுகின்றார்.  வீரமும் கொடையும் உடைய ஓர் அரசனைப் பாடுவது போன்று பாடாண் திணைப் பண்பு பொருந்தப் பாடுகின்றார்.

முருகன் எழுந்தருளும் இடங்கள்  ;

“ சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நி றீஇ

ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலன் தைஇய வெறி அயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும். 218 – 226. 

குன்றுதொறும் ஆடற்கண் நிற்றலேயன்றி சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாகிய வைத்து மறியறுத்துச் சேவற் கொடி உயர்த்து, அவ்விடத்தே அந்த இறப்பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்தும். ஊர்கள் தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப் பெருமான் எழுந்தருளியிருப்பான்.

 தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம்பொருந்தி அவ்விடத்தும் இருப்பான். ; வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான். காட்டிலும் சோலையிலும் ஆழகுபெற்ற ஆற்றிடைக்குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறு பல ஊர்களிலும் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் ஐந்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்திலும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.

(கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் வழிபாடு ; வாரணம் – கோழி ; துருத்தி  - ஆர்றிடைக் குறை  -மணல் திட்டு  

; வைப்பு – ஊர்.)

……………….தொடரும்……………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக