சனி, 21 ஜனவரி, 2017

காளைகளைப் போற்றுவோம்

 காளைகளைப் போற்றுவோம்
                 ஆண்டு தோறும் தைத் திங்களில் அறுவடை முடிந்தவுடன் சிலர் உளுந்து பச்சை பயிறு பயிரிடுவார்கள். பெரும்பாலான நிலங்களில் பசலியைப் பயிரிடுவார்கள் , கோடைக் காலத்தில் இவ்வகைப் பயிர்களின் அறுவடை முடிவடையும் ; பயிர்களின் தழைகள் மண்ணுக்கு உரமாகப் படியும்.அதன்பின் கோடை முழுதும் வயல்கள் வறண்டு கிடக்கும் நிலம் தனக்கு வேண்டிய சூரிய ஒளிச்சத்து, மழைநீர்ச்சத்துப் பெற்று வளம் பெறும். நாற்று நட்டு அறுவடை முடியும் காலப்பகுதியை ஒரு போகம், இரு போகம், முப்போகம் என்று கூறுவர்., பெண்ணோடு கூடி மகிழ்வதைப் போகம் என்பர். நிலமகளோடு கூடி மகிழ்வதையும் போகம் என்பர்.
              கோடைக்காலத்தில் விவசாயிகள் எருவடித்தல் ,வாய்க்கல் வெட்டுதல், வேலி கட்டுதல் போன்ற மராமத்து வேலைகளைச் செய்வர்.
             இக்காலக்கட்டத்தில் நிலத்தை வளப்படுத்த கிடை போடுவார்கள்.
           இதில் ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை  இவ்விரண்டும் சிறப்பிடம் பெறுகின்றன,
            பெரும்பாலும் ஆட்டுகிடை இராமநாதபுரத்திலிருந்து கீதாரிகள் ஆட்டு மந்தையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இடமாகச் சென்று கிடை போட்டு நெல் அல்லது பணத்தைக் கூலியாகப் பெறுவர்.
 கிடை என்பது – கிடத்தல் .. கிடத்துதல் ஆகும்.
               பகலில் ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று, இரவு முழுதும் நாள் தோறும்  ஒவ்வொரு வயலிலும்  ஆடுகள் கிடத்தப்படும். ஆட்டுப் புழுக்கையும் சிறுநீரும் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாகும், விளைச்சல் நன்றாக இருக்கும்.
                    மாட்டுக்கிடையும் இவ்வாறே வயல்களில் அடைக்கப்படும்.
               இதில் சிறப்பான செய்தி என்னவென்றால். கிடைக்கு மாடுகள் சேர்ப்போர் முதலில் நல்ல நாட்டுக் காளையைத் தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்கிய பின்னரேதான் வீட்டு மாடுகளை கிடைக்கு அழைத்துச் செல்வார்கள்.  இக்கிடைகளில் எருமை மாடுகள் இடம் பெறா. வீட்டிற்குக் குறைந்தது இரண்டு மூன்று கறவை மாடுகளாவது இருக்கும் இவை தவிர  உழவு மாடுகள், வண்டி மாடுகள் வளர்ந்த கன்றுகள்  எல்லாமே கிடைக்கு அனுப்பப்படும்.
                  பசு மாடுகளையும் எருமை மாடுகளையும்  வண்டியிழுக்கவும் ஏர் உழவுக்கும் பயன்படுத்த மாட்டார்கள்.
                   பால் கறக்கும் பசு மாடுகள் குறிப்பிட்ட காலத்தில் இனச்சேர்க்கை விரும்பிக் குரல் எழுப்பும் இதனை “  மாடு காளைக்குக் கத்துது “ என்று புரிந்து கொண்டு கிடைக்கு விடுவார்கள். வீரியம் மிக்க காளைகள் வழிப் பசு  கருக்கொள்ளும்.
               காளைகள்,  மாடுகளின் இனப் பெருக்கத்திற்கு இன்றியமையாதன என்பது விளங்குமன்றோ. இவ்வகையான நம் நாட்டுப் பசுக்களின் பால் மட்டுமே தாய்ப்பாலுக்கு இணையானது என்று அறிவியல் ஒப்புக்கொள்கிறது.
               நம் மண்ணில் விளைவதை நாம் உண்போம் ;  நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.
              வாழிங்டன் ஆப்பிள் வயிற்றுக்கு ஒவ்வாது

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – போராடுவோம், வெற்றி பெறுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக