தமிழமுது –202– தொல்தமிழர் இசை மரபு:62.
5. பரிபாடல் : பாலைப்பண்- இசை இலக்கணம்:
“புரிநரம்பின் கொளைப்புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும் இசையும்கூட
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க....! ” -7: 77 – 80
பாட்டு : மையோடக் கோவனார்
இசை : பித்தாமத்தர்
பண்: பாலையாழ்.
பண்: பாலைப்பண் யாழ். யாவராலும் விரும்பப்படும் பாலைப்பண் ஏழினையும் எழச்செய்து, புணர்த்துதற்குரிய முறுக்கேறிய நரம்பின் வழி, இனிய தாளத்திற்கேற்ப அமையும் யாழின் இசையும் வாயினால் பாடும் இசையும் தம்முள் பொருந்தின ; அவற்றின் இசையைப் பொருந்தி குழலாகிய கருவி அளந்து நின்றது. முழவின் ஓசை எழுந்து முழங்கியது ; அரசவையில் ஆடித் தலைக்கோல் பட்டம் பெற்ற மகளிரும் பாணரும் கூத்தாடலைத் தொடங்கினர். பாலைப் பண்கள் ஏழு அவையாவன , செம் பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை மேற்செம் பாலை என்பனவாம்.
(இசை - மிடற்றுப் பாடல்) குழல் - வங்கியம் ; முழவு - மத்தளம் ; சென்னியர் - பாணர்.)
2.) பண்ணிய இசையினர்:
”தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ
விடை அரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்.: -17: 1-4.
பாட்டு : நல்லழிசியார்
இசை : நல்லச்சுதனார்
பண்: நோதிறம்.
பண்ணிய இசையினர் என்றது, பண் அமையுமாறு பொருந்திய சுர மாறுபாடுகளுடன் அமைந்த ஆலாபனையால் ஆக்கிய இசை என்பதாம். ஆலாபனை என்பது தமிழில் ஆளத்தி எனப்பெறும். இப்பாலைப்பண்ணை விளக்கும் உரையாசிரியர் குறித்துள்ள பாடல் எடுத்துக்காட்டாக இடம் பெறுகிறது.
“மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகரும் குறினெடில் பாரித்து
நிகரிலாத் தென்னா தெனா வென்று
பாடுவரேல் ஆளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை.”
“முதலிற் பாடுமிடத்து மகரத்தின் ஒற்றாலே நாதத்தை உச்சரிக்கும் மரபு. பகரில் பாரித்து முற்கூறிய நாதத்தினைத் தொழில் செய்யுமிடத்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் செய்யப்படும். அவை, அச்சு, பாரணை என்று பெயர் பெறும். அச்சுக்கு எழுவாய் குற்றெழுத்து ; பாரணைக்கு எழுவாய் நெட்டெழுத்து. அச்சு - தாளத்துடன் நிகழும் ; பாரணை - கூத்துடன் நிகழும். ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னாவென்றும் தெனாவென்றும் இரண்டு அசையும் கூட்டித் தென்னாதெனா என்று பாடப்படும் ; இவைதாம் காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி என மூன்று வகைப்படும் என்பர் என்பார் அடியார்க்குநல்லார் . இஃது இக்காலத்தே ஆலாபனம் என்று வழங்கப்படும்.
பாலை அங்குரல் - பாலைப்பண்ணின் அழகிய இசை.
கிழமை,நிறை, குறை என்பன இசைப்புலவன், ஆளத்தி வைத்த பண் நீர்மையை முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொர பாகுபாட்டினாலும் அறிந்து என்பர் சிலம்பு உரையில் அடியார்க்குநல்லார்,.
(தாக்கு - இசைத்தொழில் எட்டனுள் ஒன்று ; எடுத்தல்,படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் இவை இசைக்கிரியைகள்.
...................................... தொடரும்.்.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக