தமிழமுது –221– தொல்தமிழர் இசை மரபு:81.
பத்துப்பாட்டு: முருகனைப் போற்றிப் பாடுவார் இயல்பு:
”முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி -- மருவினிய
கோல நெடுநல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.” -
என்னும் பழஞ்செய்யுள் பத்துப்பாட்டுள் தொகுக்கப் பெற்ற நூல்களைக் கூறுகின்றது.
“ முருகன் கோவில் கொண்டுள்ள , 1. திருப்பரங்குன்றம். 2, திருச்சீரலைவாய். 3. திருவாவிநன்குடி. 4. திருவேரகம். 5. குன்றுதோறாடல். 6. பழமுதிர்சோலை. ஆகிய ஆறு இடங்களின் சிறப்புகளையும்் விரித்துக் கூறுகின்றது.
1. ) திருமுருகாற்றுப்படை; 317 அடிகளைக்கொண்டது, பாடியவர் நக்கீரர்.
பாட்டுடைத் தலைவர்: முருகன்.
பாடு பொருள்: முருகன் அருள் பெற்றவன் அருள் பெறாதானை முருகனிடம் ஆற்றுப்படுத்துவது.
முருகனைப்போற்றிப் பாடுவார் இயல்பு:
“புகைமுகந் தன்ன மாசுஇல் தூஉ உடை
முகை வாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர .”-3. திருஆவினன்குடி: 138 – 142.
புகையை முகந்து கொண்டால் ஒத்த நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகு செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மை உடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய கந்தருவர்கள் இனிய யாழ் நரம்பினை இயக்க. முருகன் அருள் வேண்டிப் பாடினர்.
................தொடரும்...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக