தமிழமுது –248– தொல்தமிழர் இசை மரபு:108 நீட்சியும் - வீழ்ச்சியும்.
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 5.
“ஏழிவையும் சேர்ந்த ஒரு வரிசை அல்லது பாடகரின் தொண்டையில் கீழும் இடையும் மேலுமாக முந்நிலையிருப்பதால், அவற்றிற்கேற்ப நால்வகைச் சிறப்பியாழும் நரம்பும் மெட்டும் அமைக்கப்பெற்றன, முந்நிலையும், முறையே மெலிவு ,சமன், வலிவு எனப் பெயர் பெற்றன.நால்வகை யாழிலும் மெட்டுத்தொகை வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது.
பண்மொழி நரம்பு ஏழும் ஒற்று நரம்பு மூன்றும் ஆர்ப்பு நரம்பு பதினொன்றுமாக 21 நரம்புகள் பேரியாழிலும் ; பண்மொழி நரம்பு இரண்டு குறைந்து 19 நரம்புகள் மகர யாழிலும் ; ஆர்ப்பு நரம்புகள் ஐந்து குறைந்து 14 நரம்புகள் சகோட யாழிலும் ; ஆர்ப்பு நரம்புகள் அடியோடு இல்லாதும் பண்மொழி இரண்டு குறைந்தும் இற்றை வீணையிற்போல் 7 நரம்புகள் செங்கோட்டி யாழிலும் ; இருந்ததாகக் கருதலாம். ஒன்பது நரம்புள்ள முண்டக யாழ் 4 பண்மொழி நரம்பும் 3 ஒற்று நரம்பும் 2 ஆர்ப்பு நரம்பும் கொண்டது போலும்! .
தரப்புச் சித்தார் என்னும் முகமதியர் நரம்பிசைக் கருவியில் இன்றும் 11 ஆர்ப்பு நரம்புகள் கட்டப்பெறுதல் காண்க. அவற்றினால் உண்டாகும் அதிர்வு இசையினிமையைக் கெடுத்ததினால், அவற்றை வரவரக் குறைத்து வந்து இறுதியில் அடியோடு நீக்கிவிட்டனர். இசையின்ப உணர்ச்சி பெருகப் பெருக, யாழ்கள் திருந்தி வந்திருக்கின்றன. வர வரத் திருந்துதலே யன்றித் திருந்தாமை இயற்கையன்று. அநாகரிக மாந்தர் இசைக் கருவிகளின் ஓசை மிகுதியையும், நாகரி மக்கள் அவற்றின் இனிமை மிகுதியையும் இன்றும் விரும்புதல் இயல்பாயிருத்தல் காண்க.
.......................... தொடரும் ......................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக