தமிழமுது –233– தொல்தமிழர் இசை மரபு:93.
பத்துப்பாட்டு-
8 . குறிஞ்சிப்பாட்டு : கோவலர் குழலிசையில் ஆம்பல் பண்.
கபிலர் பாடிய இந்நூல் பெருங்குறிஞ்சி என்றும் பெயர் பெறும்.261 அடிகளைக்கொண்ட இப்பாடல் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப்பட்டதாகும். தமிழ் என்பது இங்கு அகப்பொருள் சுட்டியது. இந்நூலில் 99 மலர்களின் பெயர்கள் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன.
பாரி இறந்தபின் பாரி மகளிரை மணஞ் செய்விக்கும் பொறுப்பை ஏற்றார். குறிஞ்சி நிலத்தின் இயற்கை அழகு, மக்கள் வாழ்க்கை, குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய கூடல் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடியதால் குறிஞ்சிக் கபிலர் என்று அவர் போற்றப்பட்டார்.
“மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்று பயிர் குரல் மன்று நிறை புகுதர
ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவ
பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர்
ஆம்பலம் தீம் குழல் தெள்விளி பயிற்ற
ஆம்பல் ஆயிதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப காணம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
துணைஇய மாலை துன்னுதல் காணூஉ.” -- 217 – 230.
மான் கூட்டங்கள் மரங்களின் கீழ் திரண்டு கூடும் ; பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் ; ஊது கொம்பு போல் வளைந்த வாயினை உடைய அன்றில் பறவைகள் உயர்ந்த பெரிய பனையின் உள் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும் ; பாம்புகள் இரை தேடிச் செல்வதற்காகத் தம்மிடம் உள்ள மாணிக்க மணிகளை உமிழும் ; இடையர்கள் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினைத் தம் அழகிய இனிய குழலில் இசையை எழுப்புவர் ; ஆம்பலின் அழகிய இதழ்கள் தளை அவிழ்ந்து மலரும் ; அந்தணர்கள் அந்திக் காலத்துச் செய்யும் கடன்களை இயற்றுவர் ; செல்வ மனைகளில் தொடி அணிந்த மகளிர் விளக்கு ஏற்றுவர் : காட்டில் வாழ்பவர் விண்ணைத் தீண்டும் பரண்களின் மேல் தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி எரிப்பர் ; காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் கல்லென்ற ஓசையுடன் ஒன்றை ஒன்று அழைக்கும் ; பறவைகள் தம் கூடுகளிலிருந்து ஆரவாரம் செய்யும் ; சினம் கொண்ட வேந்தன் படை நடத்திச் செல்லும் போர்க் களத்தைப்போல விரைந்த மாலைப் பொழுது வந்தது.
( தெவிட்ட - திரள் ; பயிர் - அழைத்தல் ; மன்று - கொட்டில் ; வயிர் - ஊது கொம்பு ; பெண்ணை - பனை மரம் ; அகவ் - அழைக்க ; கொளுவி - கொளுத்தி ; ஞெகிழி - தீக்கடை கோல் : இரட்ட - மாறிக் கூப்பிட,)
........................................தொடரும்..............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக