தமிழமுது –234– தொல்தமிழர் இசை மரபு:94.
பத்துப்பாட்டு-
8 . குறிஞ்சிப்பாட்டு : தாளத்திற்கு ஆற்றாது தளரும் ஆடுமகள்.
”அந்நிலை ,
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
ஆஅகம் அடைய முயங்களில் அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் தீம்கனி உதிர்ந்தென
புள் ஏறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகுநறும் பழம் விளைந்த தேறல்
நீர்செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச்
சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக...” --184 – 196.்
தலைவன் தலைவியை அணுகிய அளவில் , தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் இவளிடம் வெளிப்பட்டுத் தோன்றியமையால், விரைந்து அவனிடமிருந்து இவள் நீங்க முற்பட்ட போதிலும் அவன் விடாமல், அவளைக் கையால் அணைத்து, அவள் மார்பு தன் மார்பில் ஒடுங்கும்படி தழுவினான் ; பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில், மாவின் இனிய பழங்கள் உதிர்ந்தன. பலா விரிந்து தேன் சிந்தும் நறிய பழத்தானும் உண்டாகிய கள்ளின் தெளிவு நிரம்புவதால் தன்னை நுகரும் தேனீக்களை விலக்கி, தேனடைகள் உகுத்த தேனுடன் கலந்து அத்தேறலைத் தனக்கு உண்பதற்கு ஒத்த எளிய நீராகக் கருதி மயில் உண்டது ; விழாக் கொள்வதற்கு உரிய இடங்களைக் கொண்ட அகன்ற ஊர்களில் விழா நடைபெறும் களத்தில் மேம்படச் சென்று, அரித்தெழும் ஓசையை உடைய இனியஇசைக்கருவிகள் ஒலிப்ப ஆடுகின்ற மகள், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடும்போது தாளத்திற்கு ஆற்றாது தளர்வது போல் மயில் தளர்ச்சி அடையும் ; மயிலின் தளர்ச்சியும் ஆடுமகளின் தளர்ச்சியும் புணர்ச்சியின் பின் தலைவி அடைந்த நிலையைக் குறிப்பால் உணர்த்தும்.
( ஒய்யென - விரைந்து - ஒலிக்குறிப்புச் சொல். ; ஆகம் - மார்பு. ; முயங்குதல் - தழுவுதல். ; உக்க - வீழ்ந்த / உதிர்ந்த. ; கொக்கு - மாமரம். ; புள் - பறவை.- ஈண்டு வண்டுகளைக் குறித்தது. ; பிரசம் - தேன். ; செத்து - கருதி. ; அயின்ற - உண்ட. ; தோகை - மயில். ; சாறு - விழா. ; நந்தி - மிகுந்து. ; ஆங்கன் - அவ்விடத்து. ‘ ;வியல் ஊர் - பெரிய ஊர்.)
..................................தொடரும் ........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக