வியாழன், 9 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-31 செய்க பொருளை


தன்னேரிலாத தமிழ்-31
செய்க பொருளை

வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
 அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்.” --- நாலடியார்.

செல்வ வளத்தோடு இன்பமாக வாழவேண்டும் என்று விரும்பாதார் யார்..? ஒருவரும் இல்லை. ஆனால், அவரவர் பழவினையால் அவரவர்க்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இனநலம் நன்கு உடையராயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்.” ---- பழமொழி.

 கீழ்மக்கள் (ஒழுக்கமற்றவர்கள்) இனத்தின் நன்மை நன்கு உடையராயினும் மனத்தால் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை
சேமம் செய்வாரும் சிலர் உண்டே ஏமநிழல்
இட்டுமலர் காய்கனிகள் ஈந்து உதவும் நல்மரத்தைக்
கட்டும் உடைமுள் எனவே காண். ----நீதிவெண்பா.

இனிய நிழல், மலர், காய், கனி முதலியவற்றைத் தந்து உதவக்கூடிய நல்ல மரத்தைச் சூழ்ந்துள்ள கூரிய முள் அம்மரத்தை நெருங்க முடியாமல் தடுப்பது போல், கொடுக்கக்கூடிய நல்ல மனம் படைத்தவர்களையும் கொடுக்காமல் கெடுக்கும் இயல்புடைவர்களும் சிலர் இருக்கிறார்கள்.

குன்றத்து அனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்,” – வெற்றிவேற்கை.

மலையளவு செல்வம் பெற்றவர்களும் ஒருநாள் பொழுதிலேயே பொருளை இழந்து வறுமை நிலையை அடைவார்கள்.

மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
 கழி நல்குரவே தலை.” ----- நாலடியார்.

மறுமை இன்பம் பற்றி ( நிலைத்த புகழ்)  அறியாத கீழ் மக்களின் செல்வத்தைக் காட்டிலும் சான்றோரின் வறுமை பெருமைக்குரியது.


அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்..” --- அகநானூறு.

அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்ற சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.

உரனுடை உள்ளத்தைச் செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின்பாணி நில்லா.”கலித்தொகை.

தலைவ..! நீதான் வலிய மனத்தைக் கொண்டவன் தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அப்பொருளே இன்பம் என்று கொண்டாய். இளமையும் காமமும் நின்னிடத்தே நிலைபெற்று நில்லாமல் நாள்தோறும் கழியும்.


வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
 பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும்….. --- பழமொழி.

வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே சேர்த்துவந்தால் செல்வம் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக