வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----142

 

தன்னேரிலாத தமிழ்----142

 

 

மக்கள் தாமே ஆறு அறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

                         -தொல். 1532

                              மக்களுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என ஐம்பொறிகளும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐம்புலன் உணர்வுகளும் இருப்பதால் ஐயறிவும்ஆறாவதாக மனம் என ஒன்று பெற்று நன்மை தீமை அறிவதாலும் சிந்திப்பதாலும் அவர்களை ஆறறிவு உடைய உயிரினம் என்பார் தொல்காப்பியர். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎனக் கூறியதால் மக்களைப் போன்று ஆறு அறிவு உடையனவாக குரங்கு யானை கிளி முதலியவற்றுள் மன உணர்வுடைய உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என உரை வகுத்துள்ளார் இளம்பூரணர்.

                          இவ்வாறு  தொல்காப்பியர் உயிர்களை வகைப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியதாகும். இரண்டு மூன்று நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை; ஐந்து ஆறு அறிவுடையவை முதுகெலும்புள்ளவை.

                   உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிவியல் வழியாக மெய்ப்பித்துக் காட்டிய சி. ஆர். டார்வின் ஓரணு உயிரிலிருந்து மனிதன் படிப்படியாக வளர்ந்துள்ள நிலையை 1858 இல் வெளியிட்டார். அறிவியல் உலகம் அவரை அதிசயமாகப் பார்த்தது. டார்வினின் இந்த அரிய கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களைப் படைத்தார் ; மனிதனைப் படைத்தார் என்ற மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தது. டார்வின் - அரிஸ்டாட்டிலுக்கும் எம்பெடோகிளசுக்கும் கடன்பட்டிருப்பதைப்போல தொல்காப்பியருக்கும் கடன்பட்டுள்ளார் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

2 கருத்துகள்: