செவ்வாய், 29 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-203.

 

தன்னேரிலாத தமிழ்-203.

““பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன

நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்

பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு

உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து

இருவே மாகிய உலகத்து

ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே.” ----குறுந்தொகை, 57.

தமக்கிடையே பூ ஒன்று இடைப்புகுந்து, ஒன்றையொன்று காணமுடியாமல் மறைப்பதாயினும் ஓர் ஆண்டு கழிந்தது போல, நீரில் வாழ்கின்ற மகன்றில் பறவைகளின் சேர்க்கை விளங்குவதாகும். ஓருயிர் இரண்டு உடல்களில் வாழ்வதுபோல் நாங்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தலைவன் பிரிந்தபோது, அவரின் வேறாக, ஓர் உயிர் ஓர் உடலில் வாழ்வது போன்ற இழிவு நேர்ந்துவிடும், அவ்விழிவினின்றும் நீங்குவதற்காகப் பிரிதற்கு அருமையுடைய, துய்த்தல் அடங்காத காமத்துடன் கடப்பாடு அறிந்து, காதலர் பிரிந்தவுடன் என் உயிரும் உடன் நீங்குவதாகுக, அதுவே என் விருப்பமாகும். –தலைவி, தோழிக்குச் சொல்லியது.

1 கருத்து:

  1. நன்றி ஐயா. எங்கோ பள்ளியில் படித்தது. நெடு நாள் கழித்து மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு