புதன், 8 நவம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…6.

தந்தை தாய்ப் பேண் : - தாய், தந்தையைப் போற்றிப் பாதுகாப்பாயாக.

பிள்ளைகளே..! பெற்றோர்க்கு எது பெருமை தருமோ அதைச் செய்யுங்கள் ; அதை மட்டுமே செய்யுங்கள்.

”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.” குறள்.69.

 

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.” குறள்.67.

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொலெனும் சொல்”. குறள்.70.

மேற்சுட்டியுள்ள மூன்று குறட்பாக்களையும் என்றும் மறவாது நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை நலம், வளம் பெற்றுச் சிறக்கும்.

                                 நீ கல்வியறிவு பெற்றுப் பலரும் பாராட்டுபடி உயர்ந்த இடத்தை அடைந்தால் ,  உன் தாய், உன்னை ஈன்ற பொழுது  பெற்ற மகிழ்ச்சியைவிட பலமடங்கு மகிழ்வாள். அவ்வாறான மகிழ்ச்சியை தாய்க்கு நீ தருதல் வேண்டும்.

                         

                            தந்தையானவர் தன் கடமை தவறாது ,தன் பிள்ளையை முறையாகக் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கிச்  சான்றோர் அவையில் முன்னிலை பெறுமாறு  செய்வதே தந்தையின் கடமையாகும்.

 

                           தாய் தந்தை இருவரும் உன் வாழ்வு சிறக்க நாளும் பாடுபட்டதை எல்லாம் மனத்தில் கொண்டு  பேரும் புகழும் பெற்று உயரும் பொழுது பலரும் உன்னைப் பாராட்டி இப்படி ஒரு மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று வியக்கும் வண்ணம் மகனாக உன் கடமையைச் செய்வாயாக.

 

பெற்றோர்களே…பிள்ளைகளே../ வள்ளுவர் வழி நின்று  வாழ்வீர்களாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக