செவ்வாய், 30 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 37: 8. மனநலம்

தொல்தமிழர் அறிவியல் – 37: 8. மனநலம்


                               பிரான்சிஸ் பேக்கன்  ( Francis Bacon : 1561 – 1626 ) அறிவே ஆற்றல் ( “Knowledge is Power)  என்னும் கருத்துடையவர். ( அறிவுடையார் எல்லாம் உடையார்- என்பார் திருவள்ளுவர்.)  உண்மைகள் இயற்கையில் பொதிந்து கிடக்கின்றன; மனத்தில் அல்ல. மனத்தடைகள் (பற்று) சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கின்றனமனத்தூய்மை என்பது அறிவுத்தூய்மை ; அறிவுத்தூய்மை என்பது சிந்தனைத் தெளிவு என்கிறார்.
 “ அறிவு அற்றம் காக்கும் கருவி”- என்னும் திருவள்ளுவர் வாக்கினை  விளக்கி உரைப்பதைப் போல் அமைகிறது பேக்கனின் விளக்கவுரை.
                         எங்கெல்ஸ்  ( Friedrich Engels : 1820 – 1895 ) மனம் என்பது பொருள்களின் அதியுன்னதமான ஒரு படைப்பேயொழிய வேறில்லை என்கிறார். மூளையின் விளை பொருளே சிந்தனை ; நமது உணர்வும் சிந்தனையும் புலனியக்கத்துக்கு அப்பாற்பட்டதாக எவ்வளவுதான் தோன்றினாலும் அவை எல்லாம் மூளை என்கிற பொருளாலான உடல் உறுப்பின் விளைபொருளேயாகும் என்பது எங்கல்ஸ் கூறும் கருத்து.
  சிந்தனைக்கு வாழ்நிலை அடிப்படை என்கிறது மார்க்சீயம். எண்ணங்களின் வடிவங்களையும் நிறங்களையும் ஆராய்ந்தால் வாழ்நிலையின் சிறப்பிடம் புலப்படும்.
                          லெனின்  ( Vladimir Ilyich Ulyanov Lenin : 1870 – 1924 ) “ மூளையின் செயலே சிந்தனை”  என்பார். பொருள்கள் நமது புலன்களின் மீது செயல்படுவதையும் உறுதிப்படுத்துகின்றார். மூளையின் செயல்பாட்டை அறிவியல் விளக்குகிறது. ஆனால் தத்துவவாதிகள் மூளையின் செயல்திறனைக் கணக்கில் கொள்ளாது சீவன் புத்தி மனம் போன்ற கற்பனைகளை முன்னிறுத்துவதாக மார்க்சீயம் கூறுகிறது.
மனத்தை அடக்க….!
                        தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் பிறகு மனம் குறித்த சிந்தனைகள் அறிவியலுக்குப் பொருந்துவதாக இல்லை. மனம், மனிதனின் ஆற்றலுக்குள் அடங்காத சக்தியாக வருணிக்கப்படுகிறது. மனநிலை தடுமாற்றத்திற்குரிய காரணங்களைக் கண்டுகொள்ளாது மனத்தை இழித்தும் பழித்தும் பேசும் மனக் குமுறல்கள் பிற்கால இலக்கியங்களில் வெளிப்படுகின்றன.
மனமான வானரக் கைம்மாலை ஆகாமல்
எனையாள் அடிகள் அடி எய்து நாள் எந்நாளோ
                       என்று அரற்றுகின்றார் தாயுமானவர். மனம் என்னும் குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போலாகாமல் என்னை ஆள்கின்ற இறைவனுடைய திருவடியை அடையும் நாள் எந்நாளோ என்று நடப்பியலை வெறுத்து  உயிர் விடத் துடிக்கிறார்.
                           பாரதியாரும்பேயாய் உழலும் சிறுமனமேஎன்று அவரை ஆட்டிப்படைக்கும் மனத்தை ( எண்ணத்தை) இழித்துப் பேசுகிறார்.
மனத்தை அடக்கி ஆண்டு எல்லா நலனும் பெறலாம் எனத் திருக்குறள் வழிநின்று விநாயக புராணம் கூறுகிறது.
  ”இல்லினிருந்தே ஐம்பொறியும் எல்லா நுகருங் காலத்துச்
  செல்லும் வழி மெய்ம்மொழி மனத்தைச் செல்லாது அடக்கின் எழுபிறப்பு
   நல்ல பயனேயாம் ஏனை நல்வினை தீவினையாகா
அல்லலறுக்கும் அறக்கடவுளருக்கும் அமரர் உலகுறுமே.”  என்கிறது அந்நூல்.
மனம் ஒருத்தன் வசப்படாது ஓடுமே
நனி பிறப்பிடை நாளுஞ் சுழலுமே
                 என்று பிரபுலிங்கலீலை கூறுவதுவாழும் நெறி அறியாது அல்லற்படும் மனத்தையன்றோ.!
 ”கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை
 எடுக்க வல்லதும் இம்மனம். – என்கிறது அதே நூல்.
                       மனத்தின் ஆற்றலை அறிந்து வாழ விழைய வேண்டுமே தவிரத் தப்பித்து ஓட அல்லது பிறவாதிருக்க வேண்டும் என்று விரும்புவது எது கருதியோ…?
 ”சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது ”-.. என்கிறார் தாயுமானவர்.
 நின்னை அறப் பெறுகிலேன் நன்னெஞ்சே
பின்னை யான் யாரைப் பெறுகிற்பேன். .. என்கிறது அறநெறிச்சாரம்.                                                                    தன்மனம் தன்னைப் பிரிந்துறைவதாகக் கருதுகிறார். உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை , போராட்டம் நிறைந்ததுதான்மன உளைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். இல்லாத விதியை எண்ணி நோகும் நாம் இயற்கை விதியை ஏற்று நடக்க ஏன் அஞ்ச வேண்டும்..?
                            உலகமும் பொருள்களும் உண்மையே. மண்ணில் நல்ல வண்ணம் வாழவே நாம் பிறந்திருக்கிறோம். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்றார் புத்தர்உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே சிறந்தது ; உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களே எழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
 ”உள்ளப் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” – என்று மனநலம் காக்க வழி கூறுகிறார் திருமூலர்.
                            தொல்காப்பியர்மனம் எனப்படுவது ஆறாவது அறிவு --   மக்கள் தாமே ஆற்றிவுயிரே என்றதும்
திருவள்ளுவர் கூறும்           
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (422)  என்ற குறட்பாவையும் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகளோடு  மேலும் ஒப்பிட்டறிவது நன்றாம்.
மருந்துமருத்துவம்மனநோய் மருத்துவம்               
                               தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பிற சான்றோர்களும் அடியெடுத்துக்கொடுத்த அறிவியல் சிந்தனைகளை அடியொற்றித் தமிழில் அறிவியல் வளரவில்லை ; அதற்கு என்ன காரணம்..? கல்விதாய்மொழியில் இல்லை என்பதே. ------தொடரும்……

1 கருத்து:

  1. ஆய்ந்து ஆய்ந்து தோய்ந்து தோய்ந்து கண்ட உண்மைகளை இச்சான்றோரின் தொடர் கட்டுரைகளில் காணலாம். அரிய முயற்சி.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு